Sunday, March 29, 2009

ஒரு தெய்வம் தந்த பூ

இந்த பயணம் மனதுக்கு மிக நெருக்கமாய் இருந்தது. என் செல்ல மகளோடு கழித்த/ களித்த ஒவ்வொரு கணமும் நெஞ்சில் பொங்கி வழிகிறது. அவளோடு இந்த முறை நிறைய பேசினேன். புரிந்ததோ இல்லையோ இமைக்காமல் என்னையே பார்த்திருந்தாள் . அவள் தண்ணீரில் எத்தனை குசியாய் விளையாடினாள். அம்மம்மா எனக்கு கண்கள் போதவில்லை. அப்போது நானும் அவளோடு குழந்தையாகி போனேன். அவளின் சந்தோச குரல்கள் என்னை தொற்றிக்கொண்டது. என் முகமெல்லாம் அவள் விளையாடி தெறித்த நீர் முத்துக்கள் மனமெல்லாம் சந்தோஷ மொட்டுக்கள். எனக்கு அவள் எச்சில் முத்தங்கள் கொடுத்தாள். என்னை அவள் குட்டி பற்கள் கொண்டு கடித்தாள், சின்ன நகங்கள் கொண்டு கிள்ளினாள். என் கண்கள் முழுக்க அவளே நிரம்பி கிடக்கிறாள். மனம் முழுக்க பூவாய் பூத்து சிரிக்கிறாள். எனக்கு நிறைவாய் இருக்கிறது. தாய்மையின் பரிபூரணம் கொடுத்த என் குட்டி கண்மணி.

Tuesday, March 24, 2009

பெயர் அறியா பரீட்சய முகம்

எப்போதும் உன் முகத்தில் தவழும்
அந்த மென் அமைதி
அவள் வருகைக்கான
உன் காத்திருப்பு
வார்த்தைகளை கடந்து
உங்களுக்கிடையில்
பற்றிகொண்ட இந்த நேசம்

பிடித்திருக்கிறது
அவளுக்கு

ஏதோ ஒன்று
உன்னை திரும்பி திரும்பி
பார்க்க தூண்டுகிறதென்று
என்னிடத்தில் துடித்து புலம்புகிறாள்
நீ அறியாமல்
உன்னை ரசிக்கும் ஒரு ஷணத்தில்
உன் பார்வைச் சாரல்
சில்லென தீண்டும் பொழுதுகளில்
பொங்கிப் பரவசிக்கிறாள்

இதெல்லாம் உன்னிடத்தில்
சொல்லிட சொல்கிறேன்
சொல்லாத இந்த இம்சை
பிடிதிருக்கிறதென
மறைகிறாள்
முற்றி கனக்கும் இந்நேசம்
சுமப்பவர்க்கே பெருந்தண்டனையென
புரியவைப்பதெப்படி அவளுக்கு

Monday, March 23, 2009

A poem - I read on net

Loneliness

Oh! Loneliness
How did you find my address?
I tried so much, to escape your touch
But you crept into my life
And even though I strive, you remain.

Yes, there are people
Relatives and friends
But when I look around
I feel alone in the crowd
I find not the Dear
Who will wipe away the tears
Take away my fears.

I ask again the question
That has gathered dust
Whom can I Trust?
‘Cause it is a must
Whom do I show
That special book in the soul’s shelf
A mirror of my true self?
No answer, Just emptiness
With your cold caress.

Loneliness, you do not have one definition
Rather many incarnations.
You are a cake with no eater,
A drum with no beater,
A book with no reader,
A Pain, with No healer.

When I ponder over the years went by,
I find not a constant companion
Except you, my Loneliness
And now I fear, you will be here
Till my end, and thus you have become….
My Best friend!

Sumiti Yadava (Boloji)

Thursday, March 19, 2009

திங்கள் முதல் வெள்ளி வரை

ஒவ்வொரு நாளும் நான் அலுவலகம் செல்ல நண்பனுக்காக அந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் காத்திருப்பேன். எப்போது அவளை பார்க்க ஆரம்பித்தேன் தெரியவில்லை. மிக சில கணங்களில் அவள் என்னை கடந்து சென்றுவிடுவாள். போன வாரத்தில் தான் அவளை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிக்கிறது எனக்கு அவளில். சொல்ல முடியா உணர்வு பீடிக்கிறது என்னை. எப்போதும் புன்னகை சிந்துவது போன்ற முகம், கண்களின் தீட்சண்யம், நடையின் மிடுக்கு, அவள் உடைகளின் மென்வண்ணங்கள் இதில் எது என்னை கவர்ந்தது தெரியவில்லை. அவளைப்பார்க்க முடிவதால் எனக்கு காத்திருப்பு பிடிக்கிறது.

இந்த திங்கள் முதன் முதலாய் என்னை பார்த்தாள் அவள். நான் அவளையே நேராக பார்த்தேன். என் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்றே நினைத்தேன். ஆனால் என் பார்வையில் தெரிந்திருக்குமோ நான் அவளுக்காகவும் காத்திருப்பது? அடுத்த நாள் என்னை கடக்கையில் அவள் விழிகளில் மெல்லிய அசைவு. என்னையா பார்க்கிறாள்? துடிக்க ஆரம்பித்த மனதை மெல்ல அடக்கி வைத்தேன்.

மூன்றாம் நாள் எப்போதும் நிற்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி நின்றேன். அவள் என்னை கடந்தாள். நான் நிற்கும் இடத்தில் என்னை தேடினாள். நிச்சயமாக அவள் முகத்தில் தெரிந்தது ஏமாற்றம் தான். அவள் நான் சற்று தள்ளி நின்றதை கவனிக்கவில்லை. எனக்கு அவளின் ஏமாற்றம் பிடித்தது. யாரென தெரியாவிட்டாலும் என்னை அவள் அங்கீகரித்தது போலவே தோன்றியது.

நேற்று கிளம்புவதற்கு நேரம் ஆகி விட்டது. அவளை பார்க்க முடியவில்லை. மனது அன்று முழுதும் வெறுமையாகி கிடந்தது. வேலைக்கிடையில் இருந்து மனம் நழுவி நழுவி சென்றது.

இன்று சற்று சீக்கிரமே வந்து திரும்ப பழைய இடத்திலேயே நின்று கொண்டேன். தொலைவில் அவள் வருவது தெரிந்தது. நான் நிற்கும் இடம் வந்தவுடன் சற்றே திரும்பினாள். என் விழிகளோடு அவள் விழிகள் கோர்த்தது. பிறகு சிக்கிக்கொண்ட விழிகளோடு திகைத்து திரும்பினாள். அவளுக்கு முகம்கொள்ளா வெட்கம். எனக்கும் என்னவோ செய்தது. ப்பா...எத்தனை நாட்களாயிற்று பெண்களின் வெட்கம் பார்த்து. என் மனம் நெகிழ்ந்தது. நான் அவள் போவதை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நின்றிருந்தேன். பிறகு என் நண்பன் வந்தான்.
டேய் எங்கடா பாக்கற?
என்ன கேட்டே என்றேன்?
எதுக்கு தனியா சிரிச்சுட்டு நிக்கற?
நான் மறுபடியும் என்ன கேட்டே என்றேன் தொலைவில் போகும் அவளையே பார்த்தபடி.
கிளம்பிட்டான்ப்பா என்றான்.

நான் அதையும் கவனிக்கவில்லை.எப்படியோ என்னை அவன் வண்டியில் ஏற்றிக்கொண்டு அலுவலகம் விரைந்தான்.

எனக்கு அந்த நேர மனநிலை பிடித்திருந்தது. இந்த கலப்பு கலாச்சாரத்தில் மோகம் கொண்டு தன் சுயத்தை தொலைக்காத பெண்கள் தற்போது மிக குறைவானதுபோல் தோன்றுகிறது. அதுவும் ஒரு மாநகரத்தில், பெண்களின் மெல்லிய புன்னகைகள், அவர்களின் அழகு சொட்டும் பூரண வெட்கம், கண்களின் சாந்தம், இப்படி நிறைய இனிமைகள் எளிதில் காணக் கிடைப்பதில்லை. இன்று அவளின் அழகிய வெட்கம் பார்த்தேன். அவள் சின்ன புன்னகை என் மேல் சிந்தவும் கண்டேன். கண்களின் பரிவையும் கவனித்தேன். இந்த இயந்திர வாழ்கையில் இப்படித்தான் சார்ஜ் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அவளை பற்றி என் நண்பனிடம் சொல்கையில் இப்படித்தான் ஊரில் சில பைத்தியங்கள் சுற்றுவதாக சொல்கிறான். என்ன சொன்னாலும் எனக்கு பிடித்திருக்கிற இந்த கிறுக்கு பிடித்திருக்கிறது.

Thursday, March 12, 2009

கனவா காதலா

ஒரு நடு நிஷியில்
எனை அழைத்தாய்
என்னவோ சொல்லவேண்டுமென்று
பூந்தோட்டத்தில் காத்திருக்கச் சொன்னாய்

நான் யாருமற்ற அந்த இரவின் அமைதியில்
மௌனித்திருந்த தோட்டத்தை அடைந்தேன்
அங்கே நிலவுக்கு நேர் கீழிருந்த
ஊஞ்சலில் அமர்ந்தேன்
என்ன சொல்வாய் என்று யோசித்தபடியே

உள்ளமெல்லாம் தவித்து
நிலைகொள்ளாமல் எழுந்து
அருகிலிருந்த கொன்றை மரத்தடியில்
கொட்டிகிடந்த மஞ்சள் மலர்களை
பொறுக்கத் துவங்கினேன் செய்வதறியாது

என் இரு கைகளிலும்
பூக்கள் நிரம்பி வழிந்தது
அத்தனையும் அருகிலிருந்த
ஊஞ்சலில் குவித்தேன்
இன்னும் நீ வந்திருக்கவில்லை

சற்று தள்ளியிருந்த பவளமல்லியின்
வாசனையில் மயங்கி
அருகினில் சென்றேன்
ஒவ்வொன்றாக கொய்து
சேலையில் சேகரித்தேன்
சிறிது நேரத்தில்
பூக்களின் அதீத மணத்தில்
மயங்கி விழுந்தேன்

விழித்தபோது
உன் கைகளுக்குள் புதைந்திருந்தேன்
நான் சேகரித்திருந்த பூக்களெல்லாம்
உன் மேல் சிதறிக்கிடக்கிறது
நான் வெட்கத்துடன்
எனை விடுவிக்க முயல
நீ விடாது அணைக்கிறாய்
இப்போது உன் அணைப்பின்
ஒவ்வொரு ஷணத்திலும்
உன் அன்பில் திளைக்கிறேன்

புரிந்தும் புரியா
குழப்பதில் நான் விலகி நிற்கிறேன்
பின் நீயறியாத
உன் மீது நான் கொண்ட நேசம் முழுக்க
சொல்லிவிட நினைக்கிறேன்

நீ என்னையே பார்த்திருக்கிறாய்
என்னை வெட்கம் தின்கிறது
நெருங்கி நின்று புன்னகை செய்கிறாய்
நான் குனிந்து உன் விரல்களை பற்றி
உள்ளங்கையில் முத்தமிட்டு நிமிர்ந்த நொடியில்
காதினில் உன் சுவாசம் உணர்கிறேன்
என்ன சொல்ல நினைக்கிறதோ
எனக்குள் சிலிர்க்கிறது

என் கை பற்றுகிறாய்
ஊஞ்சலில் அமர்த்தி அருகினில் அமர்கிறாய்
பின் எனை உன் கைகளில் ஏந்தி
நீ என்னவள் என்கிறாய்

அந்த அன்பின் வார்த்தைகள்
எதிர்பார்த்து காத்திருந்த
என் இதயத்துக்குள் விழுந்து
சொல்லாமல் வைத்திருந்த
என் அன்போடு சேர்ந்து
விழிகளில் நிறைகிறது
ததும்பிய அன்பு
இமை தடுக்கி வழிகிறது
என் இதழெல்லாம்

இப்போது இன்னும் நெருங்கி வந்து
இதழ் சேர்ந்த நம் அன்பினை
துளித் துளியாய் ருசிக்கிறாய் விழி மூடி

Saturday, March 7, 2009

மிடில் கிளாஸ் தேர்

ஆட்டோ
அழைத்தேன்
போகவேண்டிய இடம் சொல்லி
ஏறி அமர்ந்தேன்
மனதினில் நான் இளவரசியானேன்
ஓட்டுனர் தேரோட்டி ஆனார்
சாலையின் இரு புறமும்
பார்த்துக்கொண்டே சென்றேன்
நான் ஆளும் ராஜ்யத்தின்
செழுமையை காண
ஊர்வலம் செல்வதுபோல

Sunday, March 1, 2009

பெண்ணெனும் கூடு திறந்து

எனக்கு எப்போதுமே கிராமத்து மத்தியானம் பிடிக்கும். திண்ணையில் உட்காந்து கொண்டு ஆளில்லாத தெருவின் மத்தியானத்தை வெறிக்க பிடிக்கும். அப்படி தான் அன்றும் திண்ணையை ஒட்டியிருந்த மேல் வாசப்படியில் அமர்ந்து திண்ணையின் மேல் புத்தகத்தை வைத்து ஏதோ படிப்பதும் யோசிப்பதுமாய் இருந்தேன். மத்தியானத்தில் தகிக்கும் வெயிலானாலும் ஏதாவது படிக்கும்போது எனக்கு காப்பி வேண்டும். மெது மெதுவாய் பருகிக் கொண்டு அமர்ந்திருந்தேன். யாரும் இல்லாத தனிமை எனக்கு சமயங்களில் பிடிக்கிறது. அப்போது என்னோடு நான் நிறைய பேச முடிகிறது.

அந்த ஒரு வருடம் என்ன செய்யபோகிறோம் என்று தெரியாமல் இலக்கில்லாமல் கழிந்த ஒரு வருடம். படிப்பு முடிந்து வேலைக்கு செல்வதா வேறு என்ன செய்வது என்று குழம்பி கொண்டிருந்த ஒரு வருடம். அந்த மத்தியானமும் அப்படி தான் வெறுமை சூழ தனியாய் அமர்ந்திருந்தேன். தபால்காரர் வந்தார். இன்று என் தோழியிடமிருந்து கடிதம் எதாவது வந்திருக்குமா வந்தவரையே விழி அகலாமல் ஆவலாய் பார்த்தேன். வந்தவர் அந்த மாத பேப்பர் காசை வாங்கிக்கொண்டு எனக்கு ஏமாற்றத்தை டெலிவரி செய்து விட்டுப் போனார்.

சிறிது நேரத்தில் சின்ன சின்ன மணி ஓசை கேட்டது. ஆட்டு கூட்டம் ஒன்று ரோட்டோரப் புற்களை மேய்ந்து கொண்டே வந்தது. தலையை ஆட்டி ஆட்டி மேய்ந்துகொண்டே செல்ல தும்மலும், மணி ஓசையும் மாறி மாறி வந்தது. சில கணங்கள் அந்த காட்சியை கண்கள் மேய்ந்து கொண்டிருந்தது. பிறகு அந்த தெருவில் வேறு யாரும் இல்லை. மறுபடியும் நான் வெருமையெனும் தீவிற்குள் தனித்து விடப்பட்டேன்.

அப்பா அம்மா உடன் இருந்தும், அழகு கிராமத்தில் இருந்தும் எனக்கு ஏதோ ஒரு தீவில் தனியாக்கி விட்டது போல் இருந்தது. யாருமே என் மனம் ஒட்டி வரவில்லை. தொலைக்காட்சிக்கும் எனக்கும் எப்போதுமே அவ்வளவு நெருக்கம் இல்லை. உறவினர்களிடம் பேசவோ என்னிடம் ஒன்றுமே இல்லை. தோழியிடம் பேச இப்போது போல கைபேசியும் வைத்துக்கொள்ள வசதி இல்லை. ஊர் பெண்களிடம் பேசுவதற்கு எனக்கு யார் யாரை வைத்திருக்கிறார் என்ற விஷய ஞானம் போதாது. என்னவோ அதில் எனக்கு விருப்பமும் இல்லை. சராசரியின் நிகழ்வுகளில் தன்னைத் தொலைக்காத சில மனிதர்களை தேடுவதிலேயே நான் தொலைந்து போயிருந்தேன். அப்போது எனக்கு இருந்த ஆறுதல்கள். இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு சின்ன நூலகத்தின் சில புத்தகங்கள், அவ்வப்போது வரும் தோழியின் கடிதம், எப்போதாவது தோழியிடம் பேசக் கிடைக்கும் மிக சில பொழுதுகள். வாழ்கையின் மேல் பெரிதாக ஈடுபாடில்லாமல் வெறுத்திருந்த நேரம்.

மாலை பொழுதில் எனக்கு மொட்டை மாடிதான் சாசுவதம். தனியாக மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டு வானத்தோடு சிநேகம் கொள்ள ஆரம்பித்தேன். அதிலிருந்து இரு கண்கள் வந்தது. அது நேராக என் இதயத்துக்குள் பயணித்தது. யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்திருந்த என்னை நேராக பார்த்தது. அந்த கண்களுக்கு என்னை புரிந்தது. அந்த கண்களுக்கு மௌனமே போதுமாயிருந்தது. அது என்னை கேள்விகள் கேட்கவில்லை. என்னை அப்படியே ஏற்றுகொண்டது. பிறகு மெல்ல மெல்ல நிறைய கண்கள் வந்தது. பிறகு எல்லாம் இருட்டாகி போனது. நானும் அந்த கண்கள் மட்டும் என்னவோ பேசிக்கொண்டே இருந்தோம் வெகு நேரம் வரை. யாரும் இல்லாதபோது வானமும், இலைகளின் தலையாட்டலும், உடல் தொடும் காற்றும் தான் எனக்கு துணையிருப்பது போல் தோன்றியது.

அம்மா என்னை பார்த்து பயந்து போயிருந்தார்கள். கண்கள் முழுக்க வெறுமையை ஏற்றி இருந்தேன். அதைவிட கொடுமைகள் பெண் பார்க்க வரும் புரோக்கர்கள். அவர்களை பார்த்துவிட்டால் எங்காவது ஓடி ஒளிந்துகொள்ள முடியாதா என்று தோன்றும். அத்தனை எரிச்சல் மற்றும் வெறுப்பு வரும். அம்மாவிடம் சொன்னால் நான் என்ன செய்வது படித்து முடிச்சு பெண் வீட்டிலிருந்தால் வரத்தான் செய்வார்கள் என்பார். எனக்கு அவர்களின் தலை முதல் கால் வரை செல்லும் நோட்ட பார்வை அத்தனை வெறுப்பு. எங்காவது தொலை தூரம் சென்று சுதந்திர காற்றை சுவாசிக்க மாட்டோமா அத்தனை ஆசையாய் இருக்கும். பெண் என்பவள் சமூகம் போட்டு வைத்திருக்கும் கோட்டுக்குள் தான் வாழ வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடில்லை.

அந்த மத்தியானத்தை இன்னும் முடிக்கவில்லையே. தபால்காரர் சென்ற பிறகு தொலைபேசி அழைத்தது . கடவுளே கீதுவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே சென்று எடுத்தேன். கீது என் ஒரே ஒரு உயிர் தோழி. அவள் என் நாட்குறிப்பு. எனக்கு அவள் ஒரு இனிய தேவதை. நான் என் உயர்கல்வியின் போது அவளை பார்த்தேன். நாங்கள் நிறைய பேசிக்கொண்டோம். அந்த இரண்டு வருடங்கள் தான் என் வாழ்வின் வசந்தங்கள் இன்றுவரை. மறுபடியும் வாழ சொன்னாலும் அந்த இரு வருடத்தை ஆசை ஆசையாய் வாழ்வேன்.

எத்தனை எத்தனை பேசி இருப்போம். எழுத்தாளர்கள் பற்றி, சமூகம் பற்றி, பெண்கள் பற்றி, ஆண் பெண் நட்பு பற்றி, இப்படி நிறைய நிறைய. என்னை நெருங்கி வந்தவள் அவள் மட்டும் தான் இதுவரை. எத்தனை மாதங்கள் பேசாவிட்டாலும் மறுபடியும் விட்ட இடத்திலே தொடர கூடிய நட்பு அது. இப்படி இது வரை என்னை ஒட்டி வந்தவர்கள் இருவர் மட்டுமே. இரண்டு வருடம் அவளோடு சுவாசித்த இனிய சுகமான வாழ்க்கையும், என் ஆசைகளையும், எண்ணங்களையும் எல்லாம் ஒரு சேர முடிந்து பரணில் போட்டுவிட்டது இந்த சமூகம். யாரிடம் சொல்வது எனக்கு இந்த சமூகம் உகந்ததல்ல என்று.

தொலைபேசியை எடுத்தேன் அவளேதான். சற்று பொறுங்கள் கொஞ்சம் என் மகிழ்ச்சியை கொஞ்ச கொஞ்சமாய் சுவாசித்துகொள்கிறேன்.

இப்போ தான் நீயா இருக்கணும் ன்னு நினைச்சுகிட்டே வந்தேன்.

அப்படியா என்றாள்.

உடனே என் சோக கதையை எல்லாம் ஆரம்பித்தேன். எத்தனை ப்ரோக்கர்கள் வந்தார்கள் மற்றும் இதர சோகங்கள். அவள் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் இத்தனை அவஸ்தை படுகிறேன். நீ அங்கே நாம் ரசித்த எல்லாம் இன்னும் ரசிக்கிறாய். நாம் நடந்த பாதைகளில் மறுபடியும் நடக்கிறாய். ரசித்த அந்த கொத்து மஞ்சள் மலர்கள் போல் இன்றைக்கும் பார்ப்பாய். மலை உச்சியில் ஒருக்களித்து படுத்திருப்பது போல் இருக்கும் ஒரு பெண் உருவ பாறை இன்றும் தெரியும் உனக்கு. இப்படி நிறைய நிறைய நான் சொல்லிக்கொண்டே போக அவளிடமிருந்து ஒரு கட்டத்தில் எனக்கு எந்த பதிலும் இல்லாமல் போனது.

நான் சற்று நிறுத்தி என்னாச்சு என்றேன். அவள் எல்லாம் இங்கு அப்படியே இருக்கிறது ஆனால் நீயில்லாமல் எனக்கு எல்லாமே வெறுமையாய் தெரிகிறது என்றாள். எனக்கு என்னவோ போலிருந்தது. ரசித்த எல்லாமே அன்னியமாகிப்போவது எத்தனை கொடுமை. பிறகு நிறைய பேசினோம். எல்லாம் பழைய நினைவுகள்.

என்னவோ புதியதாய் பிறந்தது போல் இருந்தது அவளிடம் பேசிய பிறகு. அவளை தவிர எல்லோருக்கும் புரிந்துவிடாது என்னை.அவளிடம் பேசிவிட்டு மறுபடியும் வந்து படியில் அமர்ந்தேன். குழப்பங்கள் என்னை சுற்றி சுற்றி வந்தது. எனக்கு என்ன தேவை என்று சரியாக சொல்ல முடியவில்லை. வானத்தை வெறிக்க தொடங்கினேன். பிறகு மெல்ல மின் கம்பதிற்கு பார்வை ஓடியது. அங்கே மின் கம்பியில் ஒரு மைனா அமர்ந்திருந்தது. பிறகு சடாரென பறந்தது உயர உயர வானம் நோக்கி.