Sunday, February 28, 2010

என் ஆழ்மன காதலை

வருவதற்கு முன்னே
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்

பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்

தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்

ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்

பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்

Wednesday, February 24, 2010

நினைவுகள் நிறைகுகை

நான் அறியா ஏதோ ஒரு மிக நெருக்கமான புள்ளியில் உன்னை நீ என்னோடு இணைத்திருக்கிறாய். எத்தனை முறை நான் அதைக் கண்டறிய முயன்றபோதும் எனக்கு புலப்பட்டதே இல்லை அந்தப் புள்ளி. இனியும் புலப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அது எனக்கு தன்னை அன்றாடம் நினைவு படுத்த தவறுவதில்லை. அந்த புள்ளியிலிருந்து வெளிப்படும் நினைவின் கதிர்கள் என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. பிறகு நான் இயங்க திறனின்றி, நினைவுகள் நிறைந்த குகைக்குள் விழுகிறேன்.

எவ்வழி விழுகிறேன் என்பதோ, எப்படி வெளியேறுவது என்றோ எதுவும் தெரியாமல் குகைக்குள் கேட்கும் நினைவின் குரல் ஒலிக்கும் திசை நோக்கி நடக்கிறேன். அது என்னை உள்ளே உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நினைவின் சித்திரமும் அதன் பக்கச் சுவர்களில் வரையபட்டிருப்பது எனக்கு மிகத் தெளிவாய் தெரிகிறது. அந்த சித்திரங்களைப் பார்க்கும் போது அதை சார்ந்த இன்ன பிற நினைவுகள் என்னை வந்தடைகிறது. ஒரு காட்டாற்றின் வேகத்தோடு நினைவுகள் என்னை அடித்து செல்கிறது. அதன் முடிவில் எங்கோ விட்டு செல்கிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன் இன்னொரு சித்திரம், இன்னொரு பயணம். பிறகு ஒருவழியாய் என்னையறியாமலே எப்படியோ வெளிவருகிறேன்.

நான் வெளிவந்த பிறகும் நான் அறியா ஒரு கணத்தில் என்னில் அந்த புள்ளியை இயக்க என்னைத் தொடர்கிறது. நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன். அது என்னுள் அந்த புள்ளியை மறுபடி இயக்குகிறது. நான் மறுபடி விழுகிறேன். பின் என்னை தொடரும் நம் நினைவுகள்.

Friday, February 19, 2010

எனக்கு அறிமுகமான நான்

எழுதுவதற்கான மன நிலையிலிருந்து சில நாட்களாய் விலகியிருந்த என்னை எழுத வைத்த லாவண்யாவுக்கு நன்றி ! :)

அந்த நாட்களை யோசிக்கும்போது என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை எழுதறேன். அப்போது தான் என்னை நானே புரிந்து கொள்ள தொடங்கினேன்னு நினைக்கறேன்.அதில் முக்கால் பங்கு நான் பெண்கள் பள்ளி/கல்லூரி விடுதியில் தான் கழித்தேன். வீட்டிலிருந்த போதெல்லாம் நான் நிறைய பேசியதாக நினைவில்லை. இப்போதும் கூட நான் அப்படித் தான். என் நண்பர்களிடம் பேசும் அளவுக்கு வீட்டில் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் விடுதியில் நான் நிறைய குறும்பு (அ) சேட்டைகள் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் அப்பா பயம் எனக்கு அப்போது அதிகம் ஆதலால் எந்த சேட்டையும் முன்னால் நின்று பண்ணியதில்லை.

எனக்கு பிடிக்காத நாட்கள் ன்னா அது பரீட்சைக்கு முன்னாடி படிக்கறதுக்கு விடுமுறை விடுவாங்களே அதான். அப்போ எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியாது. பரீட்சைக்கு முந்தய நாளை தவிர மற்ற நாட்களில் படிப்பது பிடிக்காது. அதனாலே வம்புக்கிழுக்க யாராச்சு கிடைச்சாங்கன்னா எனக்கு கொண்டாட்டம் தான். ஆனா ஓரளவுக்குதான் வம்புக்கிளுப்பேன் நம்புங்க.

நான் படித்த பெண்கள் கல்லூரி விடுதியில் எங்களுக்கு எந்த கடிதம் வந்தாலும் அதை வார்டன் படிச்சுட்டுதான் கொடுப்பாங்க. அப்போ ஏப்ரல் 1 க்காக ஒரு அறைத் தோழிய ஏமாத்த ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தின் மேலுறையை எடுத்து அதற்குள் நாங்கள் எழுதிய ஒரு காதல் கடிதத்தை வைத்து கொடுத்துவிட்டு இதை படிச்சுட்டு மேம் உன்னை வந்து பார்க்க சொன்னாங்கன்னு சொல்லிட்டு போய் ஒளிஞ்சு நின்னு அவளோட உணர்வுகளை நோட்டம் விட்டோம். அவள்முகம் மாறியவுடன் தற்செயலா போறமாதிரி என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு போனோம்.அவள் எனக்கு இது யாருன்னே தெரியல எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொன்னாள். பெருந்தன்மையா சரி வா நானும் வரேன் போய் பேசலாம் இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லி, அவளை கூட்டிட்டு மேம் ரூம் முன்னாடி போனதும் இந்த நாடகத்தை முடிச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு கூட்டிட்டு போனேன். ஆனா ரூம் பக்கத்துல போனதும் மேம் வெளிய வந்துட்டாங்க. அவங்களை பார்த்து ஒரு புன்னகைய உதிர்துட்டு, அங்க பக்கத்துல இருந்த தண்ணி குடிக்க வந்த மாதிரி பாவலா பண்ணிட்டு, அவள எதுவும் பேச விடாம அவளுக்கு விளக்கி கூட்டிட்டு வரதுக்குள்ள எனக்கு தான் வேர்த்துருச்சு.

அப்றோம் இன்னொரு ஞாபகம், அப்போ எல்லாம் எனக்கு ஆங்கிலத்துல அவ்வளவு ஞானம் கிடையாது. இப்போ கொஞ்சம் பரவால்லன்னு நினைக்கறேன். அப்போ என்னையும் மதிச்சு என்னோட தோழி தமிழ் செல்வி அக்கா அவங்க சித்தி சித்தப்பா க்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத என் உதவிய நாடினாங்க. எனக்கு இப்போதும் சித்தி சித்தப்பாவை ஆன்டி, அங்கிள் ன்னு கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்மா அப்பாவுக்கு இணையாக நான் அவர்களை மதிப்பதால் எனக்கு ஆன்டி, அங்கிள் என்பது அன்னியமாகப் படும். அதனால அப்போ தமிழுக்கு சொன்னேன் 'Step Mother, Step Father' ன்னு எழுத சொல்லி அவங்களும் எழுதினாங்க. பிறகு அந்த வார விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து என்ன துறத்தி துறத்தி அடிச்சாங்க. எனக்கு என் தப்பு புரிந்தாலும் என்னால் ஏனோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவங்கள் கோபம் இன்னும் அதிகம் தான் ஆச்சு. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வருது :))

முதல் முறை அந்த மாதிரி ஜோக் ஒன்று ஸ்ரீதேவி சொன்னாள், சவிதா எனக்கு சொன்ன அவள் ரகசிய காதல், பதிலுக்கு நான் அவளிடம் பகிர்ந்து கொண்ட என் ரகசிய காதல்.

அப்றோம் நாவல்கள் படிக்கத் தொடங்கினேன், முதல் கவிதை மாதிரி ஏதோ எழுதினேன்.
கிரிக்கட் பைத்தியமா இருந்தேன். நிறைய சிரித்திருக்கிறேன். நிறைய விளையாடி இருக்கிறேன்.

அம்மா அருகாமைக்காக ஏங்கி இருக்கிறேன் பல நாட்கள்,சமயங்களில் அனாதை போல உணர்ந்திருக்கிறேன்,தனிமை பழகியிருக்கிறேன்,போர்வைக்குள் புதைந்து நிறைய அழுதிருக்கிறேன்.

இந்த மாதிரி நிறைய இருக்குங்க. இப்போதைக்கு இது போதுமா? :)