Sunday, February 27, 2011

வேண்டியவர்கள்

எல்லோருமே வாழ்வின் அழகான தருணங்கள் மனதில் உறைவதை விரும்புவோம் இல்லையா? நானும் அது போலவே உறைந்த நிமிடங்களை எழுத்தில் சேமிக்க விழைகிறேன். அவ்வப்போது என்னுடைய விருப்ப செயலாக, கடந்த வருடங்களில் இந்த மாதத்தில் வாழ்க்கை எனக்கு என்ன கொடுத்துக் கொண்டிருந்தது, எந்த மனநிலையில் இருந்திருக்கிறேன் என்பதை நான் நாட்க்குறிப்பில் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படித்து, அப்படியே திரும்பி பார்த்துக் கொள்வேன். அதனால் தொடர்ந்து என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்தவைகளை எழுத்தில் வடித்து வைக்க முயல்கிறேன். அந்த முயற்சியின் விளைவாக இதோ இன்று கிடைத்த சுவாரஷ்ய உறவை எழுதி உங்களோடு பகிர்கிறேன். அது நீடிக்குமோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நிமிடங்களில் நாங்கள் பகிர்ந்து கொண்ட அந்த இதம் சேமிக்கப்படுவது முக்கியம் என நினைக்கிறேன். இளைப்பாருதலாய் யாராவது கிடைப்பார்களா என்கிற வேளையில் எதிர்பாராமல் வந்து சேர்ந்துகொள்கிற மனிதர்கள் அற்புதங்கள் என்றே நினைக்கிறேன்.

சுமந்து கொண்டிருந்த எதையோ இறக்கி வைப்பதான எண்ணத்தில் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த என் தோழியை பார்க்க சென்றேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த நட்பை நான் ஆராதிக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அவள் ஒரு தேவதை என்பதைத் தவிர வேறு ஒன்றும் அவளை பற்றி சொல்வதற்கில்லை. அவளுக்குத் தெரியாததென்று என்னிலும் எதுவும் இல்லை. என்னை முழுவதுமாய் அதாவது என் பைத்தியக்காரத்தனங்கள் முதலான சகல குணங்களோடும் ஏற்றுக்கொண்டு நேசிக்கும் ஒரே ஜீவன். பொதுவாக எல்லோரிடமும் எனக்கு நிறைய பேச வராது. அறியாதவர்களிடம் பேச்சை துவங்க தெரியாது. அறிந்தவர்களிடம் ஓரளவு பேசுவேன், அவளிடம் மட்டும் நான் நிறையப் பேசுவேன். அந்த அளவுக்கு வேவ் லென்த் ஒத்துப் போகும். சரி இன்று நடந்ததை சொல்கிறேன் என்றேனல்லவா சொல்கிறேன். அவளும் நானும் காப்பி ஷாப்க்கு சென்றோம். கொஞ்சம் காபி நிறையப் பேசினோம். பிறகு ஒவ்வொரு தெருவாய் நடந்தோம். வாகன இரைச்சல்கள் இல்லாத மரங்கள் நிறைந்த அவள் குடியிருப்பு நடப்பதற்கு ஏதுவாய் இருந்தது. திடீரென்று சொன்னேன் நிறைய கிளைகள் உள்ள ஒரு மரத்தில் ஒற்றை குரங்கு எப்படித் தாவும், அது அடுத்து எந்தக் கிளைக்கு தாவும் என்று யாராவது சொல்ல முடியுமா அந்த மாதிரியான ஒரு மனநிலையில் இருக்கிறேன் தற்போது என்றேன். இப்படியும் அப்படியுமாய் எங்கள் பேச்சு பத்துவருட காலங்களில் நடந்த நிகழ்வுகள் சிலவற்றை பற்றிக் கொண்டு தொடர்ந்த படியே இருந்தது. சொல்லப் போனால் எங்கள் பேச்சு நாங்கள் நடந்த எல்லாத் தெருக்களையும் நிறைத்தது. ஒருவழியாய் கால்வலிக்க நடந்த பிறகு வெளியில் வந்து மரத்தடியில் இருந்த கல்லில் ரோட்டை பார்த்து அமர்ந்து கொண்டோம்.

அந்த மரத்தை தெருவிளக்குகள் அவ்வளவாய் ஊடுருவ முடியவில்லை ஆதாலால் நாங்கள் அமர்ந்திருந்த அந்த இடம் ஓரளவிற்கு இருண்டுதான் இருந்தது. சற்று நேரத்தில் அவள் பக்கத்தில் ஒரு அம்மா வந்து அமர்ந்தார்கள். டைம் என்னாச்சும்மா என்றவர்களிடம் ஒன்பது என்றாள். பிறகு எப்போது எழுந்து போனார்கள் என்பதை கவனிக்க வில்லை. இப்படிதான் அவளோடு பேசும்போது எனக்கு எல்லாமே மறந்து விடும். இன்னும் சிறிது நேரம் பேச்சில் கரைந்த பிறகு அந்த பக்கத்திலிருந்து ரோட்டைக் கடந்து ஒரு அம்மா வந்து பஸ் பரத்தா (பஸ் வருமா) என்றார்கள். ஸ்டாப் மாட்த்தாரா கொத்தில்லா என்றேன் உடைந்த கன்னடத்தில் (ஸ்டாப் பண்ணுவாங்களா தெரியாது). பிறகு அவர்களே தொடர்ந்து கன்னடத்தில் இது ஸ்டாப் தான், ஆனா பஸ் வருமான்னு கேட்டேன் என்றார்கள். அப்படியா என்று சிரித்து பஸ் வருமா தெரியலையே என்றேன். எங்களுக்குளாக இது வரை எதாச்சு பஸ் போச்சா என்று வினவிக் கொண்டே ஒருவேளை நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்று முடித்துக் கொண்டோம். அவர்களும் சற்றுத் தள்ளி அவள் பக்கத்தில் அமர்ந்தார்கள்.

எப்படித்தான் பேசுவதற்கு இத்தனை கிடைக்கிறதோ. இப்போது சமூகம், குடும்பம், அதை ஒட்டிய நிகழ்வுகள் என்று தொடர்ந்து, நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று சுய பச்சாதாபப் பட்டு பிறகு ஒரு கட்டத்தில் போதும் என்று எழுந்து கொண்டோம். இருவரும் எதிரெதிர் புறமாக நடக்கத் துவங்க அந்த அம்மாவின் குரல் என்னை நிறுத்தியது. சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாததால் மறுபடி கேட்டேன். எந்தப் பக்கம் போறே என்றார்கள் நான் சொன்னதும் நடந்து போறியா என்றார்கள். ஆமாம் என்றேன். பிறகு சரி நானும் வர்றேன் என்றார்கள். நடை பாதை சற்று இருட்டாய் இருந்ததால் அவர்களுக்கு நடக்க ஒரு துணை தேவைப் பட்டிருக்கலாம். எனக்கு இந்த நேரத்தில் நடப்பது பிடிக்கும். ஒரு சில இடைஞ்சல்களைத் தவிர இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் நடப்பது மிக அழகானது. அவர்கள் பையை எடுத்துக் கொண்டு எழுந்து வர அவகாசம் கொடுத்து காத்திருந்தேன். பிறகு இருவரும் சேர்ந்து நடந்தோம். அத்தனை அலைச்சலிலும் அத்தனை சிரித்தார்கள். அது எனக்கு தொற்றிக் கொள்ள நானும் சிரித்துக் கொண்டே பேசினேன்.

நாளைக்கு என்னோட தம்பி வீடு கிரக பிரவேஷம் அதனால சிக்பேட் போய் துணி எடுத்து வந்தேன் என்றார்கள். பேச்சை துவங்குபவர்களை எனக்கு மிக பிடிக்கும். காரணம் எனக்கு அது சுத்தமாய் வராது மேலும் அவர்கள் தன்னோடு என்னை சேர்த்துக் கொள்வதாய், என் துணையை நாடுவதாய் தோன்றுவதால் பிடிக்கும். ஒருவரின் நெருக்கம் மற்றவரால் வேண்டப் படும்போது அவருக்கு வரும் மகிழ்ச்சி எனக்கும் வந்தது. என்னுடைய ப்ரோகேன் கன்னடாவில் அங்கே கம்மியா கிடைக்கும் கேள்விப் பட்டிருக்கிறேன் என்றேன். இந்து எழு வருடத்தில் நான் அங்கு ஒரு முறை கூட போனதாய் நினைவில்லை. அவர்கள் இல்லம்மா எல்லாப் பக்கமும் ஒரே விலைதான் என்றார்கள். நான் அப்டியா என்று புன்னகைத்தேன். இந்த அலைச்சல்ல போயிட்டு வரதுக்கு இங்கயே பத்து முப்பது ஜாஸ்தி கொடுத்து எடுத்துக்கலாம் என்றார்கள். நான் அதுவும் சரி தான் என்று நினைத்து புன்னகையை இடைக்கால பதிலாக்கி கன்னடத்தில் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன்.

தெருவிளக்கு அடியில் நடக்கும்போது ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசியும் மற்றபடி கீழே பார்த்து நடந்துகொண்டும் தொடர்ந்தோம். எழுமிச்சம் பழ நிறம் என்பார்களே அப்படி ஒரு நிறம் அவர்கள். அழகாய் பெரியதாய் மரூன் கலர் பொட்டு முக்கியமாய் ஓயாத சிரிப்பு. பேச்சுக்கு பேச்சு கனோ கனோ என்று விளித்தார்கள். என்னடாவில் டா / என்னம்மாவில் மா போல நெருக்கத்தை குறிக்கும் இந்த கனு/கனோ கன்னடத்தில் எனக்கு நிரம்பப் பிடித்த வார்த்தை. நீங்க வேலைக்கு போறீங்களா என்றேன். இல்லம்மா என்று பதில் வந்தது. அவர்கள் பையை சுட்டி உங்களுக்கு அது கனமா இருக்கும் கொஞ்ச தூரம் நான் கொண்டு வருகிறேன் என வாங்கிக் கொண்டேன். உபகாரம் பெற்றுக் கொள்ளும்போதான சங்கடப் பட்டுக் கொண்டே கொடுத்து சற்று தூரத்தில் திரும்ப வாங்கிக் கொண்டார்கள்.

பேச்சைத் தொடர உங்களுக்கு குழந்தைகள் என்றேன். ஒரு பொண்ணு பெரியவ அப்றோம் ரெண்டு பசங்க என்றார்கள். சொல்லும்போது உன்ன மாதிரி ஒரு பொண்ணு என்று சொன்னது எனக்கு அவர்கள் மேல் விசேஷ அக்கறையை அன்பைக் கொடுத்தது. எல்லாருமே வொர்கிங். பொண்ணு கல்யாணம் ஆயிடுச்சு என்றார்கள். பேரு சுமதி என்றார்கள். உனக்கு என்ன வயசும்மா என்றார்கள். நான் முப்பது என்றேன். சற்று சூழும் மௌனத்தை குழைக்க உங்க வீடு எங்கே இருக்கு என்று கேட்டேன். சரியாக கேட்கவில்லை போல ஏனு கனோ என்றார்கள். என்ன கண்ணா என்பதைப் போல் அத்தனை பாந்தமாய் இருந்தது. இதைக் கேட்டு ஓவராய் உருகியதில் கன்னடம் என்னை கைவிட தமிழில் சற்று தடுமாறி ஆங்கிலத்தைக் குழைத்து கேட்பதர்க்குள்ளேயே நீ தமிழாமா என்றார்கள். ஆமாம் என்றேன். நானும் தமிழ் தாம்மா என்றார்கள். இனி வார்த்தைகளை தேட வேண்டியதில்லை புதியதாய் ஒரு உற்சாகம் எனக்கு. நீங்க பெங்களூர் தானா என்றேன். இல்லை என்று நான் தமிழ் அவர் கன்னடா என்றார்கள். எனக்கு மதுரை என்றார்கள். அப்டியா நான் அவ்வளவாய் போனதில்லைன்னாலும் கேள்விப் பட்ட அளவிலேயே எனக்கு மதுரை ரொம்ப பிடிக்கும். இப்போது என்னை பற்றி கொஞ்சம் சொல்லத் தோணியதில் நான் இங்க வந்து ஏழு வருஷம் ஆச்சு ஊரு கோயம்பத்தூர் பக்கம் என்றேன்.எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கு என்றேன். அப்படியா என்று ஆச்சர்யமாய் பார்த்தவர்கள் (நம்புங்கப்பா) கல்யாணம் ஆனா மாதிரியே தெரியல என எனக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் கூச்சமுமாய் இருந்தது. கிட்டத்தட்ட என்னோட அப்பா வயதுள்ள என் வீட்டு ஓனர் என்னை ஆன்டின்னுதான் கூப்டுவார். ஆமாங்க பெங்களூர் ல இதெல்லாம் சகஜம். என்ன சகஜம்முன்னு தேத்தினாலும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த மனசுக்கு உற்சாகமாய் தான் இருந்தது. ஒருவேளை இந்த ட்ரஸில் அந்த மாதிரி தெரிந்திருக்கும் என்று மனதுள் பறந்து கொண்டிருந்த என்னை கீழிறங்க செய்தேன். சின்ன பெண்ணாய் அடையாளம் காணப்படும் நேரங்களில் ஒரு குழைந்தமை வெளிவருகிறது. இப்போது என்னுள்ளும் அது என்னை இயக்கத் துவங்கியது

உங்க பசங்களுக்கு கல்யாணம் ஆகலையா கேட்டேன். பாத்துட்டிருக்கோம்மா என்று கூறி நீ சொல்லு உனக்கு தெரிஞ்சா என்றார்கள். அவசர அவசரமாய் யாராச்சும் இருக்காங்களா யோசித்தேன். கண்டிப்பா சொல்றேன் என்று அவர்கள் எண் வாங்கிக் கொண்டேன். பெயர் கேட்ட போது உமா என்றார்கள். உங்கள ஆன்ட்டின்னு கூப்டனுமா அக்கான்னு கூப்டனுமா அவர்களையே கேட்டேன். ஆன்டினே கூப்டு மா என்றார். உமா ஆன்டி என்று நம்பர் பதிவு செய்தேன். வீட்டுக்கு வாயேன் பெரிய பையனையும் அவரையும் அறிமுகப் படுத்தறேன் என்றார்கள். இல்ல பரவால்ல ஆன்டி இந்த நேரத்துல அவங்க என்னை எதிர்பார்க்க மாட்டாங்க என்றேன். இல்லம்மா எனக்கு ரொம்ப பிடிச்சாதான் பக்கத்துல சேர்ப்பேன் அவங்களுக்கு தெரியும் என்றார்கள். இவ்ளோ சீக்ரம் இந்த நேரத்துல வீட்டுக்கு கூப்டறளவு நெகிழ்ந்திருக்கும் மனம் என்னை ஒத்துக் கொள்ள செய்தது.

வீட்டுக்குள் அழைத்து இவளோட தான் நடந்து வந்தேன் நம்ம சுமன் மாதிரி என்று என் முதுகை தொட்டு அறிமுகப் படுத்தினார்கள். சில நிமிடங்கள் பார்த்த ஏதோ ஒரு பொண்ணை தன் பொண்ணோடு ஒப்பிடுவதை விரும்பாமலோ என்னவோ ஆட்டோவில் வந்திருக்கலாமே என்றார். நான் எதிர்பார்த்த மாதிரியே விருந்தாளிகளை சிறிதேனும் எதிர்பாராத ஒரு நேரத்தில் பரீட்சயமில்லாத ஒரு பெண்ணை எந்தளவுக்கு வரவேற்பார்களோ அதே தயக்கமான வரவேற்ப்பை அவர்கள் மகன்,கணவரிடம் கண்டேன். ஜூஸ் சாப்பிட சொன்னவர்களிடம் வேணாம் நீங்க டயர்ட் ஆ இருப்பீங்க கிளம்பறேன் என அவர்கள் விடாமல் கொடுத்தார்கள். கிளாசில் பாதி நிரப்ப நிரப்ப முதல்ல தண்ணி குடிக்கிறியாமா என்றார்கள். இல்லை பரவால்லை என்று அதை வாங்கிக் குடித்தேன். அங்கிள் பேசவே இல்லை. பனியனோடு இருந்த பையனுக்கு கூச்சம் மேவ அவன் எழுந்து உள் சென்றான். இங்க வாப்பா என்று ஆன்டி அழைக்க சூழலை சுமூகமாக்கும் முயற்சியில் நானும் வாங்க நாந்தான் உங்களுக்கு பொண்ணு பாக்கப் போறேன் என்றேன். ஆன்டி நாக்கை கடித்து கொண்டார்கள். அச்சூ இந்த ஓவரா உரிமை எடுத்துக்கறது நான் எப்போ விடப் போறேனோ,கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் நான் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கையிலே அதை ஊர்ஜிதப் படுத்தும் ஒரு பார்வையோடு அவன் திரும்ப வந்து அமர்ந்தான். சில பல தகவல்களை கேட்டுப் பெற்றுக் கொண்டபின் உங்களை பாத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் வரேன் என்று கிளம்பினேன். ஆன்டி கேட்க்கு வழியனுப்ப வந்தார்கள். சாரி நான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமா பேசிட்டேன் என இல்ல பரவால்ல அவன் கல்யாணம் இப்போ வேண்டாங்கறான். வீடு கட்டிட்டு பாக்கலான்னு சொல்றான் என்றார்கள். நான் என்ன சொல்றேன்னா அது பாட்டுக்கு அது நல்லா குணமான பொண்ணு கிடைச்சா பண்ணிட வேண்டியதுதானே என்கிறேன் என்றார்கள். நானும் நீங்க சொல்றது சரிதான் என்று, நானும் முயற்சிக்கிறேன் என்றேன்.எனக்கு ஜாதி முக்கியமில்லம்மா நல்ல குணமான பொண்ணு இருந்தா போதும். உன் பிரண்ட்ஸ் யாரும் இல்லையா என்றார்கள். இல்ல ஆன்டி எல்லோருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு என்றேன். உன்னைப் பார்த்ததுல எனக்கும் சந்தோஷம் என்றார்கள். நான் திரும்ப உங்களை பாத்தது எனக்கும் ரொம்ப சந்தோஷம் என்று கிளம்பினேன். இரண்டடி நடந்த பிறகு இன்னும் ஒரு சில நொடிகள் இதை நீட்டிக்கவோ என்னவோ சற்று உரக்க குட் நைட் மா என்றார்கள். திரும்பி குட் நைட் ஆன்டி என்றுவிட்டு நகர்ந்தேன்.

Thursday, February 3, 2011

முதல் கடிதம்

மனு,

நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்லையா? அது நிஜம் தானா? மாயை அல்லவா? உன்னால் தற்போது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா? என் ஞாபகங்களை விலக்க முடிகிறதா? மறுபடியும் கேட்கிறேன் மனு நீ எப்படி இருக்கிறாய்?

இந்த நடு நிசியில் உனக்கு முதல் கடிதம் எழுதுகிறேன் மனு. எனக்கு என்னைப் பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கிறது. எனக்கு நிறைய வேளைகளில் என்னை சமாளிப்பது கடினமாய் இருக்கிறது. அப்படியான நேரங்களில் நான் எவரையும் பார்க்க தவிர்க்கிறேன். என்னால் மனமுவந்து அளவளாவ முடியாமல் போய் விடுகிறது. என் எதையும் அடுத்தவர் மேல் திணிப்பதை நான் விரும்புவதில்லை. இந்த குழப்ப மனநிலையும் தான். குழப்பம் என்பதை விட ஒரு உறுமும் மனநிலை. எதற்கென்றே தெரியாமல் கோவம், எதையாவது போட்டு உடைக்கும் மனநிலை.அப்போது யாராவது என்னை தொந்தரவு செய்யும்போது நான் அவர்களை மிகவும் காயப் படுத்துகிறேன். அதுவும் நெருக்கமானவர்கள் என்றால் ஐ டேக் தெம் பார் கிராண்டட். அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை குத்தி விட்டது போல் அவர்கள் மேல் பொழிந்து விடுகிறேன். பிறகு மிகவும் வருந்துகிறேன். அன்று நமக்குள் நடந்ததற்கு இதை ஒரு விளக்கமாக கூட கொடுக்க முடியவில்லை என்னால். ஆனால் நான் வருந்துகிறேன் மனு.

தனியாக இருக்க நான் பிரியப் படுகிறேன். ஐ ஆம் எ வெரி குட் கம்பானியன் பார் மைசெல்ப். இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நினைத்த பாட்டை கேட்டுக் கொண்டு, ஆடத் தோன்றினால் ஆடிக் கொண்டு, படித்துக் கொண்டு இப்படி தோன்றியதை எல்லாம் செய்து கொண்டு எல்லாம் முடிந்த பிறகு மனம் எதையோ நாடுகிறது. அது நீதான் மனு. என்னை யாரும் மிக நெருங்கி வந்தால் எனக்கு ஒரு வித பாதுகாப்பின்மை தோன்றுகிறது. திஸ் இஸ் யுவர் லிமிட் என்று சொல்கிறேன். ஆனால் உன்னிடம் அப்படி இல்லை மனு. நீ விலகி சென்றால் நெருக்கம் வேண்டுகிறேன். நீ ஏன் சொல்லாமலே சென்று விட்டாய் மனு? எது உன்னை மிக பாதித்தது?

சில சமயங்களில் ஐ ஆம் ஸெல்ப் ஒப்செஸ்ட் என்று தோன்றுகிறது மனு. என்னை நான் பார்த்து கொண்டே இருப்பது எனக்கு அவசியமாகிறது. என் மனநிலை தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணதிற்கு, இந்த வாழ்க்கையை ஒரு உடை மாற்றும் லாவகத்துடன் கழைந்திட முடிந்தாலோ, தொடர் ஓட்ட பொருளாக யாரிடமாவது கை மாற்ற முடிந்தாலோ எத்தனை நன்றாக இருக்கும் யோசித்து கொண்டே இருக்கிறேன். பின் நீ நினைவில் மிதக்கிறாய். வாழ்க்கையே மாறினார்போல உனக்கு சொல்கிறேன். இந்த வாழ்கை தான் எத்தனை சுவாரஷ்யங்களை உள்ளடக்கி இருக்கிறது மனு. ரோஜாக்களின் அடுக்கு இதழ்களை பாரேன். எத்தனை நேர்த்தி, எத்தனை அழகு. இந்த வெயில், இந்த பூக்களின் சுகந்தம் எல்லாம் எல்லாம் என்ன அதிசயம் இல்லையா மனு என்கிறேன். இதில் எதை நான் என்பது. இது தான் நான் என்று ஒரு வகையில் நம்பிக் கொண்டே வருகையில் அந்த நானுக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு செயலை செய்கிறேன். ஒரு கட்டத்தில் மிகுந்த சோர்வுற்று என்னையே நான் கை விட்டு விடுகிறேன். இந்த நானை இரு காதுகளைப் பிடித்து எங்கேயாவது தூக்கி வீசி விடலாம் போல் இருக்கிறது மனு.

நீ எனக்கு மிக முக்கியம் மனு. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட நீ என்னொடு இருக்கவே பிரியப் படுகிறேன் மனு. இது கூட எனக்கு சுய நலமாகவே படுகிறது. என் நம்பிக்கையின்மையை உன் மேல் திணிக்கிறேனோ? ஒரு நிலையற்றவளோடு நீ எப்படி இருப்பாய் மனு? ஆனாலும் எனக்கு நீ வேண்டும் மனு. உன்னோடு இருக்கும்போது எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல் இருக்கிறது. உன்னை இழுத்துக் கொண்டு ஏதாவது ஒரு காட்டுக்குள் போய் விடனும் போல் கூட இருக்கும். அதெல்லாம் முடியாது எனும்போது ஒருவித சலிப்பு வருகிறது. சலிப்பென்ற உணர்வு ஒருவர் இடம் கொடுப்பதற்கு முன்னேயே வந்து ஆக்கிரமித்து கொள்கிறது. இங்கிதமென்று எதுவுமில்லை அதனிடம்.

நீ இல்லாத இந்த சமயங்களில் நாம் பேசிகொண்டிருந்த போது, சிதறியிருந்த உரையாடல் துணுக்குகளை உண்டே என் நேரம் செல்கிறது மனு. என்னால் எதுவுமே செய்ய முடிய வில்லை மனு. புது இடத்துக்கு சென்று விடலாம் என்று தோன்றினால் கூட எத்தனை நாளைக்கு ஓட முடியும் என்றே தோன்றுகிறது. நான் என்ன செய்யட்டும் மனு? இப்படி யோசித்து யோசித்து நான் சிதறிக் கொண்டிருக்கிறேன் மனு. இதையெல்லாம் படித்துவிட்டு நீ என் மேல் பரிதாபப் படாதே. நீ எனக்கு இடம் கொடுக்காதே மனு. நான் காற்றிலாடும் கொடி, நீ இடம் கொடுத்தால் இறுகப் பற்றிகொள்வேன். உனக்கு மூச்சு முட்டும். எனக்கு அன்பை எந்த இடத்தில் நிறுத்துவது தெரியாது? அதற்கு பெயரெல்லாம் கிடையாது. எல்லா கோடுகளையும் அழித்து விட்டு, திசை காட்டிகளை கழற்றி விட்டு நடப்பதே எனக்கு சௌகர்யம். உனக்கு எந்த உத்திரவாதமும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. உன் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை.

காதலின் இதயம் நீ மனு. உன்னை காதலிக்கிறேன் மனு.