Sunday, December 19, 2010

விளைந்தவைகள்

ஒரு அழகிய மலரிலிருந்து
சிதறிய கருத்த விதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
கணிசமாக சேர்ந்து
கனத்த மடியினை
பூவரச மர நிழலில்
அவிழ்த்துக் கொட்டி
இரு பங்காய்ப் பிரித்தபிறகு
ஒரு பங்கை
உறவுகளுக்கு நேர்ந்துகொண்டு
செழிக்கவென விதைத்தும்
மற்றொன்றை
பிரிவுகளுக்கென்றழைத்து
வீசியெறிந்தும் சென்றேன்
அன்றிரவு பெய்த மழை
அடித்துக்கொண்டு போனது
விதைத்தவைகளை
வீசி எறிந்தவைகளோ
விளைந்துகிடக்கிறது மனதடைத்து

Tuesday, November 30, 2010

Thursday, November 18, 2010

காரணங்கள்

ஒன்று
இரண்டு
மூன்று என
ஆயிரம் காரணங்கள் வரை இருக்கலாம் என்னிடம்
பறவைகள் கூடடைவதை
இரைச்சல்கள் என சபிக்கவும்
ஒற்றைப் பனித்துளி ஏந்திய
ரோஜாவை அலட்சியித்தொதுக்கவும்
சம்பங்கி பூவினை சுற்றியாடும்
தேன்சிட்டை வெறுக்கவும்
கண்டதும் காலை நக்கும்
நாய்க்குட்டியை அருவெருக்கவும்
கலகலப்புகள் நிறைந்திருக்கும் கூடத்தில்
தனிமைப்படுத்திக்கொள்ளவும்
வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்
நீ மட்டுமே இருந்தாய்

Sunday, November 14, 2010

தாகம்

உன் முதல் தொடுகை
முதல் முத்தம்
முதல் அணைப்பு
எப்படி இருக்கும்
என்பதாய் துவங்குகிறது எண்ணங்கள்
இம்மாலையில்
தருணங்களுகேற்ப அமையுமா
அல்லாது மனநிலைகேற்ப?
இல்லையெனில்
சூழல் நிர்ணயிக்குமோ
இறுக்கத்தையும் நெருக்கத்தையும்

தருணங்களே எனில்
அடைமழை இரவில்
முழுக்க நனைந்து
உடல் சிலிர்த்து
உன்னை ஒரு உயர்
பார்வை பார்க்கையில்
நிகழட்டும் அது

மனநிலை எனில்
நான், நீ, நம் காதல்
தவிர்த்து மற்றவை மறைந்து போன
உன்னத நிலையில் அமையட்டும் அது

சூழல் எனில்
நடு வனத்தில்
பிணைந்தாடும் பாம்புகளின்
மோகன நடனத்தின்
அதிர்விலும் லயத்திலும்
இருக்க வேண்டும் அது

Saturday, October 9, 2010

ரோஜா

கல்லறைத் தோட்டத்தினை
கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அத்தனை நேரம்
உடன் வந்த எண்ணங்கள்
உறைந்துவிடுகிறது

தின்றுகொண்டிருந்த பொழுதின்
சூனியத்தை கழிக்கவென
ஓர் நாள்
உள்செல்ல விழைந்தேன்
ஒரு ரோஜாவோடு?

கல்லறை படுக்கைகளின்
உள்ளே
உடல்கள் உறங்குவதாயும்
வெளியே
உயிர்கள் அலைவதாயும்
பார்க்கும் நிலைகேற்ப
காட்சிகள்
மாறி மாறி புலப்பட

ஒரு நேரம் நிலவும்
உறக்கத்தின் அமைதியில்
புழுங்கியது
பாழ் நினைவுகள்

உயிர்கள் எழுப்பும்
விதிர்க்கும் ஓலத்திலோ
எழும்பிடும் துர் எண்ணங்கள்

இறுகப் பற்றிக்கொண்ட
அவைகளுக்கு
என்னிரு கரங்களை
துண்டித்து ஈய

மறுத்த இரண்டுக்கும்
தேவைப் பட்டதென்னவோ
இதுவரை
நான் பற்றி இருந்த
ஒற்றை ரோஜா

Thursday, October 7, 2010

விரைவில்

வாழ்தலுக்கோ
அல்லாது
இருத்தலுக்கோ
ஏதாவது ஒன்றுக்கு
பழகவேண்டும்

Tuesday, October 5, 2010

பெயர்

கிருபா
தயா
தாட்சண்யா
என் மகளுக்கென
தேர்வு செய்திருந்த பெயர்கள்
இவற்றுள்
ஒன்றுக்கும்
நட்சத்திரப் பொருத்தமில்லை

Monday, September 27, 2010

பிரியமோ சுமையோ நானறியேன்

தேன் கனிகள் சுமக்குமென
நட்டு வைத்திருக்கிறார்கள்
விதைத்தபோதோ முளைத்தபோதோ
நான் அருகிருந்து அறிந்ததில்லை

வருடங்களை உண்டு
வளர்ந்த அது
பூத்ததுமில்லை காய்ததுமில்லை
என அங்கலாய்த்த அவர்களிடம்
எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை

எதன் நிமித்தமுமில்லாமல்
விட்டு விலகி வந்து
வெகு நாட்கள் ஆனநிலையில்
போன வருடம்
மறுபடி பார்க்க நேர்ந்தது
அது இருந்திருந்த இடத்தில்
இருந்தது
பூமிக்கு மேல்
ஓர் இரண்டடி கட்டை

அருகே சென்று பார்கிறேன்
வலிகளோ காயங்களோ
இருந்த சுவடில்லை
ஒரு வேளை காய்ந்திருக்கலாம்
வெட்டுபட்டிருந்த போது
என்ன நினைத்திருக்கும்
இப்போதென் மனதை
பற்றிகொண்டது அவ்விருட்சம்

மாதங்களே இடைவெளியென
கவனித்தபடியே இருந்தேன் அதை

ஆறு மாதம் முன் பார்க்கையில்
ஒரு புறம்
கரையான்கள் பற்றி இருக்க
நின்றது நின்றபடியே இருந்தது
சில கணங்கள் பார்த்திருந்து திரும்பினேன்

இரண்டு மாதங்கள்
முன் பெய்த மழையில் தான்
அது மீண்டும் துளிர்த்திருந்தது
முதன் முறையென
என் மனமும் கூட

இன்றடித்த வெயிலுக்கோ
இலைகள் வாட்டமுற்றிருக்கின்றன
செய்வதற்கொன்றுமில்லை
இனி நான் பார்க்க போவதுமில்லை

Sunday, September 19, 2010

இப்பொழுது விடியுமா

இல்லாத ஒன்றை
இருக்கிறதாய் எண்ணி கொள்வதும்
இருக்கிற ஒன்றை
இல்லை எனக் கொள்வதும்
இதோர் வேடிக்கையான மனது

எனக்கு பிடித்த நானாய்
மற்றும் எல்லோருக்கும்
பிடித்த நானாய்
இருந்தே
அலுத்துப் போகிறது எனக்கு

தேகங்களை உரித்து போட்டு
அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்
உத்தி கற்பிக்கப்படுமெனில்
ஆங்கே முதல் மாணவியாய் நான்

அளந்து அளந்து பேசியது போதும்
வெட்கத்தை அவிழ்த்து விட்டே கேட்கிறேன்
வானை கிழித்து வரும்
மின்னலென வந்து தான்
எடுத்து போய்விடேன்
உன்னோடு என்னை

இந்நோய் முற்றிவிட்டது போல
பார்
ஏதேதோ பிதற்றியபடியே இருக்கிறேன்
உன்னை சேரும்
ஓர் வழி புலப்படுமா என

Monday, September 6, 2010

குட் மார்னிங் தாத்தா

பரீட்சை நேரத்து மணியோசை
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
மரங்களுக்கடியில்
புத்தகக் குவியல்கள்
இலைகளை மேயும்
பட்டு புழுக்களாய்
பத்திகளை மேயும்
சுந்தரும் சாந்தியும்
எனக்கு நேற்று பார்த்த சினிமா
இப்பத்தான் ஞாபகம் வரணுமா
சாந்தீ இழுக்கிறேன்
நிமிரக் கூட இல்லை
இந்த பிள்ளை
எப்போவுமே இப்பிடித்தான்
யாரிடம் சொல்ல
நேற்றுப் பார்த்த கதையை
சுற்றிலும் பார்க்க
ஒரே பரபரப்பு
குட் மார்னிங் தாத்தா
வந்து விட்டிருக்கிறார்
குட் மார்னிங் தாத்தா
மிக பிரசித்தம் என் பள்ளியில்
அவர் வாக்கு அப்படியே பலிக்குமென
அவரை நெருக்கிக் கொண்டு
தாத்தா குட் மார்னிங்
குட் மார்னிங் தாத்தா
கூட்டத்தில் நானும் தான்
இன்னிக்கு அந்த சனியம் புடுச்ச
சமூக அறிவியல் பரீட்சை வேறயா
தாத்தா வாக்கு என்னவோ எனக்கு
அட சீக்கிரம் இங்க பாருய்யா
ஆ என்னத்தான் பாக்குறாரு
இப்போ சொல்லிருவாரு
நீ பெயிலாப் போயிருவ
அடச்சீ
இந்த கார்த்தி முன்னால
ஏன்யா சொன்ன
மனசுக்குள்ள சொல்லிகிட்டாலும்
சத்தமாத்தான் சொன்னேன்
இந்த வாக்கெல்லாம் நான் நம்பறதில்லப்பா

Sunday, September 5, 2010

உமாக்கா

உமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு
உமாக்கவை பார்த்த உடனேயே பிடித்தது
உமாக்கா என் அறைத் தோழி
உமாக்காவுக்கு மிக பெரிய கண்கள்
உமாக்கா பெரிய பொட்டு வைப்பாள்
உமாக்காவுக்கு அழகானதொரு தெத்துப் பல்
உமாக்கா ஒரு குஜராத்தி
உமாக்கா சென்னை வாசி
உமாக்காவுக்கு சிரிக்கும் உதடுகள்
உமாக்காவுக்கு அமைதியான முகம்
உமாக்காவுக்கு நைட் ஷிப்ட், எனக்கு பகலில் வேலை
உமாக்காவை நான் அரிதாய்ப் பார்ப்பேன்
உமாக்காவுக்கு குட் மார்னிங் நோட் எழுதி அவள் கட்டிலில் ஒட்டி வைப்பேன் தினமும்
உமாக்கா எனக்கு வேலை கிடைத்தபோது ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தாள்
உமாக்கா எல்லாரிடமும் ஜஸ்ட் கால் மீ உமா, டோன் கால் மீ அக்கா என்றாள்
உமாக்கா என்னை மட்டுமே அக்கா என அழைக்க அனுமதித்தாள்
உமாக்காவோடு ஒரு பத்து முறை பத்து நிமிடங்கள் பேசியிருப்பேன்
உமாக்காவுக்கு இரண்டு குழந்தைகள்
உமாக்கா தன் கராத்தே மாஸ்டரை காதல் கல்யாணம் செய்து கொண்டாள்
உமாக்காவுக்கு அப்போது பாய்ஸ் படம் பிடித்திருந்தது
உமாக்கா எப்போதும் ஆங்கிலப் புத்தகம் படிப்பாள்
உமாக்கா என்னிடம் ஹாரி பாட்டர் வாங்கிப் படித்து பிடித்திருந்தது என்று சொன்னாள்
உமாக்காவிடம் நான் செய்த தவறொன்றை சொன்னேன்
உமாக்கா நீ அதை செய்திருக்க கூடாது என்றாள்
உமாக்கா நானும் உன்னோடு வருகிறேன் நாம் இதை சரி செய்யலாம் என்றாள்
உமாக்கா என்னோடு வந்து எனக்காக பேசினாள்
உமாக்கா என் தவறை சரி செய்தாள்
உமாக்கா சென்னைக்கு மாற்றலாகி போய்விட்டாள்
உமாக்கா ஒரு தேவதை
உமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு

Monday, August 2, 2010

முகம்

அந்தப் பேருந்தில்
நீண்ட இரவு பிரயாணத்
துவக்கத்திலேயே பார்த்தேன்
கடைசி சீட்டுக்கு
முந்தைய சீட்டில்
எங்கேயோ பார்த்த முகம்
எங்கு பார்த்திருப்பேன்
பள்ளியிலா கல்லூரியிலா
அல்லாது உறவினர்கள் வீடுகளில்
ஏதோ ஒன்றிலோ
யோசித்தபடியே அமர்ந்திருந்தேன்
ஞாபகம் வந்தபாடில்லை
களைப்பில் உறங்கியும் விட்டேன்
பாதி தூரம் கடந்த பேருந்து
இளைப்பாற நின்றிட
கண்களை கசக்கியபடி
நிமிர்ந்து அமர்ந்தேன்
என்னை கடந்து இறங்கிப் போனாள்
மறுபடியும் அதே முகம்
எப்படியும் பிடித்துவிட
நினைவுகளை கசக்கிப் பிழிந்தேன்
பயணிகளுக்கென முளைத்திருந்த
பிரத்யேக டீக்கடை முன்
தேநீர் அருந்தபடியே
ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்
சடாரெனத் திரும்பிப் பார்த்தாள் என்னை
கண்டு கொண்டதன் அடையாளமாய்
புன்னகைத்து அழைத்தாள்
புரிந்தது அவளை
நெருங்கியதும்
நலமா கேட்டாள்
மேலும் கீழுமாய் அசைத்தேன் தலையை

Friday, July 30, 2010

நேத்ராவின் அம்மா பாட்டு

அம்மா இந்தே வா வா
ஆஷே முத்த தா தா
இலேயில் ச்சோறு போட்டு
.......................
உன்னேப் போலே நல்லா
ஊரில் யா..... உல்லா
என்னால் உனக்கு தொல்லே
ஏ இல்லே
அய்யம் .. சொல்லுவேன்
ஒற்றுமை என்னும் பலமா
ஓது செயலே ன்னலமாம்
அவ்வை சொன்ன மொலியா
...வே எனக்கு வலியாம்
சொல்லிவிட்டு அம்மா பேப்பாப்புல*
சின்ன சின்ன மொட்டே போட்டுடுன்கிறாள்
நான் இன்னும் தேடிட்டிருக்கேன்
அப்டி ஒரு பாட்டு இருக்கா?

*(லேப்டாப்ல)

Wednesday, July 28, 2010

சும்மா... சும்மா...

உங்களைத்தான் கேக்குறேன்
இது நம்மளோட எத்தனாவது சந்திப்பு?

முதல் பத்துவரை கணக்குல வந்துச்சு
இப்போ கணக்கு வெச்சுக்கறதில்ல
உனக்குத் தெரியுமா?

ஹ்ம்ம் தெரியும்
ஆனா இப்போத் தெரியாது

என்ன சொல்ல வர
எனக்கு புரியல

உடனே கேட்டா தெரியாது
யோசிச்சா சொல்லிடுவேன்

சரி யோசிச்சே சொல்லு பாப்போம்

அதுக்கு நிறைய நேரம் பிடிக்குமே

பரவால்ல ரூமுக்கு போய்
உருப்படியா ஒண்ணும் பண்ணப் போறதில்ல
நீயே கொஞ்ச நேரம் காதைக் கடி
ஸ்ஸ் அடிப்பாவி நிஜமாவே கடிச்சிட்டே

நீங்க சொல்லி
எத செய்யாம விட்டிருக்கேன்

அது சரி

அந்த ஹோட்டலுக்கு போனது
முதல் முறை

ம்ம்ம்

அப்போ நீங்க எனக்கு
bourneville சாக்லேட் கொடுத்தீங்க

ம்ம்ம்

கோவிலுக்கு ரெண்டாவது முறை

ஹ்ம்ம்
..........

உங்க முன்னால் காதலி
பற்றி சொன்னபோது
ஐந்தாவது சந்திப்பு
........
பிரபஞ்சன் புத்தகம் கொடுத்தது
பத்தாவது சந்திப்பில்
.......
பலூன் வாங்கித் தர சொன்னேனே
அது பதினைந்தில்
.........
Chocopie வாங்கி கொடுத்தீங்களே
பதினெட்டாவது சந்திப்பில்
......
உங்க ரூம்ல
நூடில்ஸ் செய்து கொடுத்தது
இருபதாவது சந்திப்பில்
.......
பசுவய்யா கவிதை வாசித்தது
முப்பதாவது சந்திப்பில்
.........
போதும் போதும்
பரவால்லையே இத்தனை
நினைவில் வெச்சுருக்கே
ஆனாலும் Dairymilk கணக்குல வரலையே இன்னும்
சரி சரி முறைக்காத வா
உனக்கு லேட் ஆயிடுச்சு
அப்றோம் ஆன்டி திட்டும்
ஆட்டுக்குட்டி திட்டும்பே

Tuesday, July 13, 2010

அது

வெகு நேரமாய்
பார்த்தபடி இருக்கிறேன்
அது அமைதியாய் நிற்கிறது
உள்ளே செல்வார்
வெளியே வருவார்
எவருமின்றி தனியாய் நிற்கிறது
என்னையே பார்த்தபடி
அதன் பழுப்பு நிறக் கண்களிலிருந்து
புறப்பட்ட அந்த நிசப்தம்
என்னை ஊடுருவித் துளைக்கிறது
உரையாடல்கள் எதுவுமின்றி
மொழிகளுக்கப்பாற்பட்ட
ஒரு புரிதல் நிகழ்கிறது ஆங்கே
யாருமற்ற மைதானத்தில்
சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே
அதன் ஒற்றைக் கர ஸ்பரிசம் தூண்டி
என்னில் கனிந்தவைகளை சுவைத்து
உப்பி பெருக்கிறது அது
முதலில் நான்
பிறகு அது
உச்சங்கள் தொட்டு விலகையில்
உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்

Monday, July 5, 2010

இயல்பு

மலர் வீழின்
இலகுவாய் சுமந்திருந்து
அமிழ்த்தும் பாரங்களை
மூழ்கடித்து வீழ்த்தி
அசூயைகள் ஒதுக்கி
பறவைகளின் எச்சங்கள் விழுங்கி
பழகியிராத வழிகளும்
பயங்களற்று பயணித்து
திசையறியா வனங்களிலும்
பாதைகள் அமைத்து
வளைந்து நெளிந்து
மேலேறி கீழிறங்கி
சலனமற்று பரவி
பரவசமாய் ஆர்பரித்து
என்னில் மகிழ்ந்திருந்தவனின்
தாகங்கள் தீர்த்து
முத்தமிட்டு கடந்து
விரைகிறேன் நெடுந்தூரம்
இலக்குகளற்று
பயணமே முதல் முடிவாய்

Thursday, June 24, 2010

பாப்பா பாட்டு

அந்த புதிய கட்டிடம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்

சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்

என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்

சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை

மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்

Wednesday, June 9, 2010

பாவண்ணன் சிறுகதை - அகநாழிகை ஜூன் இதழில்

பாவண்ணன் எழுதிய 'அடைக்கலம்' சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அவர் ஒவ்வொரு காட்சிகளையும், அது மனதுக்கு உள்ளே ஏற்படுத்தும் அலைகளையும் மிக அருமையாக விவரித்திருக்கிறார். படிக்க துவங்கியபோது ஒரு பாழான கோட்டையின் வரலாற்றைப் பற்றி தான் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். எனக்கு வரலாறுகள் படிக்குமளவுக்கு பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் இந்த கோட்டை பற்றி அவர் சொல்லிய விதத்தில் என்னால் அந்த கோட்டையையும் நெல், கரும்பு, வாழை கிராமங்கள் எல்லாவற்றையும் அழகாய் கற்பனை செய்ய முடிந்தது. ஆவலில் தொடர்ந்து வாசித்தேன்.

கதையில் வரும் சொக்கலிங்கம் என்கிற மனிதர் அந்தக் கோட்டைக்கு உள்ளே நடக்க தொடங்கியதும் கதை திசை மாறுகிறது. அதற்கு பிறகு நான் கண்களில் நீரோடு தான் படித்தேன். சொக்கலிங்கம் ஒவ்வொரு அறைக்குள்ளும் போய் பார்க்கையில் முதலில் முகம் சுழித்து பிறகு சுரக்கும் அனுதாபத்தில் அசூயைகள் மறைந்து இரக்கம் மேலிடுவது எதார்த்தம். அவர் சந்திக்கும் அந்த சுவாரஷ்யமான இளைஞன் கதாபாத்திரம் அவனது பேச்சு வெகு எதார்த்தமாய் மிகுந்த தெளிவோடு இருக்கிறது. முடிவில் நிதர்சனம் வலித்தாலும் இந்த மாதிரி இளைஞர்கள் வாழ்கையை ஏதோ ஒரு மூலையில் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற ஒரு சின்ன ஆறுதலும் கிடைக்கிறது. இதை நிச்சயம் என்னால் ஒரு கதை என்று பார்க்க முடியவில்லை.

அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாய் யோசித்துப் பார்கிறேன். நிச்சயமாக சொக்கலிங்கம் மனது பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும். அவரோட குழந்தைகளுக்கு இது இன்னொரு பாடமாக இருந்திருக்கும்.

எழுதிய பாவண்ணனுக்கும், வெளியிட்ட அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்.

Saturday, June 5, 2010

விழி(க்கு) எட்டா வானம்

நினைக்கவே கூடாதெனினும்
நம் காதலை எந்நாளும்
மறக்க முடிவதில்லை என்னால்
வெளிவராத நாள்பட்ட முள் ஒத்த
அந்த நினைவுகள் தடவுகையில்
வலிக்கிறது சுகமாய் உள்ளே

சர்க்கரை சீசாவினுள் நுழையும்
சிறு எறும்பின் ஆவலோடு
ரகசியப் பெட்டகம் திறந்து
உள்ளிறங்கி
எப்போதோ பதுக்கியிருந்த
புகைப்படம் எடுத்து
உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை

கலைந்து கிடக்கும்
நம் காதலின் மிச்சங்களை
கடந்து இன்னும் உள் செல்கையில்
தூசுபடிந்த வீணையிலிருந்து
நீயின்றி உயிரற்று
நீர்த்த கணங்கள் மீட்டிய
வார்த்தைகளற்ற இசை
வழிகிறது பெட்டகம் முழுக்க

என்றாவது வருவாய் என
காத்திருந்த நம்பிக்கைகள்
நசுங்கிக் கிடக்கிறது ஆங்காங்கே
அடி மனம் திறந்து கதறி
அவ்விடம் கடக்கையில்
கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்

Wednesday, June 2, 2010

காற்றிலாடிய இலை

மொட்டை மாடியின் பக்கச் சுவர்களை
பற்றியபடி இருந்தது
அண்டை வீட்டு மரத்தின்
கீழிறங்கிய இரண்டு வாதுகள்
காற்றின் ஓருரசலில்
விழுந்தது அதனின்றொரு பழுத்த இலை
காற்றின் சிறு வருடலுக்கும்
சிணுங்கியபடி தள்ளித் தள்ளிப் போனதவ்விலை
சிணுங்களை ரசித்த காற்று துரத்த தொடங்கியது
தப்பிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த இலை
மாடிப்பரப்பின் சிற்சிறு குழிகளின் ஒன்றில்
தன் கூர்முனை குத்தி நின்றது இளைப்பாற
இலையையே சுற்றி சுற்றி வந்த காற்று
தன் தீராத காதலை சொல்ல
நின்றபடியே மெல்ல காற்றின் ஆளுமைக்கு
இசைந்து கொடுத்தது இலை உடல் அசைத்து
வெட்கத்தில் மேகங்கள் கருத்தது
மழை ஜோடனைக்கு கச்சிதமாய் காற்றசைந்தது
உடன் இலை பரந்தாடியது
இலையிட்காற்றும் காற்றிலிலையும்
மாறி மாறி ஆடியபடியே கடந்து போகையில்
ஒற்றை துளி விசிறி மீட்டெடுத்தது என்னை
உன் நினைவுகளிலிருந்து

Thursday, May 20, 2010

வலை

இப்போது தான் பார்கிறேன்
மேல் செல்லும் படிக்கட்டில்
ஒரே இரவில்
இத்தனை அழகாய்
இழைத்திருக்கிறது அந்த வலையை
எல்லாத்திசைகளையும் அடைத்து
அளந்து வைத்த நேர்த்தியுடன்
காற்றின் போக்குக்கு அசைந்து
ஆனாலும் கலையாது
எப்படி சாத்தியம்
இந்த அசாத்திய நுண்கலை

எழு சூரிய ஒளியில்
ஒவ்வொரு நூல் இழையும்
மினுக்கிறது பிசு பிசுப்பாய்
ஆர்வம் தொற்ற
ஆராய்கிறேன் மெல்ல
அதன் ஓரங்களெல்லாம்
மூலைக்கொன்றாய் நீள்கிறது
ஒரு நூல் பற்றி
நான் தடுமாறி மேலேற
நீண்டுகொண்டே இருக்கிறது
அந்த ஒற்றை நூல்
முடிவு தெரியாமல்
வலை முழுக்க
சுற்றி வருகிறேன்
நடுவில் அமர்ந்தபடியே
அமிழ்ந்த புன்னகையுடன்
அனைத்தையும் பார்கிறதந்த
கருஞ் சிலந்தி

Tuesday, May 11, 2010

பணிப் பெண்

அலுவலகம் வரும் முன்
இன்னும் பால்மணம் மாறா
என் செல்லக் குழந்தையை
வழியில் காப்பகத்தில் விட்டு
என்றும் சொல்வதை போலவே
இன்றும் சொன்னேன்
பத்திரமா பாத்துக்கோங்க
நீல பாக்ஸ்ல இருக்கறத
இப்போ கொடுத்துடுங்க
பாலை பிரிட்ஜ்ல வெச்சுடுங்க
ஒரு மணி நேரம் கழிச்சு
மறக்காம கொடுங்க
கொடுத்த பிறகு தூங்க வெச்சுடுங்க
அப்பப்போ போன் பண்ணறேன்
ஆயாவும் பொறுமையாக கேட்டு
புன்னகைத்து வழியனுப்பினாள் இன்றைக்கும்

கலங்கிய கண்களுடன்
அலுவலகம் வந்து
பரபர வேலைகள் முடித்து
இ-மெயில் செய்துவிட்டு
குழந்தை என்ன செய்கிறதோ
என்ற எண்ணத்தின் முடிவில்
காப்பகத்துக்கு தொடர்பு கொள்ள
என் குழந்தையின் அழுகுரலில்
நனைகிறதென் மேலாடை

Thursday, April 29, 2010

பேசி(ய) பொழுது

எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா இடத்தில்
பேசியின் ஆளுமைக்குள்
இருந்த நீ
கவனியாத அப்பொழுதில்
பருகக் கொடுத்தாய் உன்னை
மறக்க முடியாத
ஆச்சர்யப் பரிசாய் எனக்கு

ஒரு நீண்ட புன்னகையில்
என்னை பார்க்க செய்யும்
முயற்சியில்
உன் முகம் பார்த்தே
கடந்தன அச்சில வினாடிகள்
என்னை பார்த்தும் உணராமல்
பேசியின் மறுமுனையில்
இயங்கியதோ உன் மனது

மனதில் அடையாளமிட்டுக் கொண்ட
உன் வெளிர்நிற ஆடை
உறுதிபடுத்துமா
நான் பார்த்ததை
நிஜமென
உனக்கும் எனக்கும்

Sunday, April 25, 2010

நீயில்லாத நானில்லை

அந்த மழை நாளின்
ஓர் இரவில்
நீர்சொட்டும் மரத்தடியில்
ஒருவரை ஒருவர்
மௌனித்து பார்த்திருந்தோம்
தாழ் கிளையின்
ஒரு இலை விளிம்பை பற்றி
மெதுவாய் வழுக்கி விழுந்தது
நம் காதல்

முத்தமிட ஓரிடம் தேடி
எல்லைகள் கடந்து
ஓடிக் களைத்து
ஓரிடம் நிற்கிறோம்
திரும்பிப் பார்க்கையில்
யாரும் துரத்தவில்லை
நம்மை தவிர

மறந்து விடலாம் என்று
தீர்மானித்த பிறகும்
எத்தனை முறை
அணைத்தாலும்
மறுபடி பற்றிக்கொள்ளும்
அந்த மாஜிக் மெழுகுவர்த்தியாய்
உன் நினைவுகள்

இம்முறை எறிகிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி
ஒரு நீழ்குகையின்
ஆழக் குளத்துள்
விழுந்ததும் உணர்கிறேன்
கரையில் பாதி நீ
நீரில் பாதி நான்

Saturday, March 6, 2010

தேநீர் வாடிக்கை

மணி அதிகாலை ஐந்தைத் தொட்டது. இன்றைக்கான என் பணி முடிந்தது. என் இருக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடி எழுந்தேன். சில வருடங்களாக இரவு வாழ்க்கை எனக்கு பழகி விட்டிருந்தது. அதன் தனிமையும் எனக்கென்று தன்னை முழுமையாய் கொடுக்கும் அதன் பரிவும் எனக்கு எப்போதுமே மிக பிடிக்கும். இப்படித் தான் இரவில் விழித்திருப்பவர்கள் எல்லாம் உணர்வார்கள் என நினைக்கிறேன். தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது. ஒரு வேளை அந்த நிசப்தத்தில் வழிகிற ஒரு வித சோகம் பிடிக்கிறதோ. இரவு விழித்திருக்கும் ஒவ்வொருவரையும் முழுமையாய் கவனிக்கிறது. பகல் முழுக்க பரவிக் கிடந்தவர்களை காட்டிலும் இரவில் விழித்திருந்து தன்னை உணர்பவர்களை நேசிக்கிறது என்றே தான் தோன்றுகிறது எனக்கு. சன்னல் வழி பார்க்கையில் தூரத் தெரியும் இருட்டு மெல்ல மெல்ல பக்கம் வருகிறது. அது நெருங்க நெருங்க என்னுள் அது என்னை ஆட்கொண்டுவிடும் என்ற ஒரு பயமும் என்னையே தொலைத்து விடுகிற ஒரு வித ஆர்வமும் ஒரு சேரவே எழுகிறது. முதலில் என்னை சுகிக்கும் இருட்டு பின் தன்னோடு அணைத்து எடுத்துப் போகிறது. நானும் ஒரு சில நிமிடங்களேனும் இருட்டோடு பயணித்து கரைந்து போகிறேன். எப்போது இருட்டை பார்த்தாலும் இந்த உணர்வே மேலிடுகிறது.

சுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசாத பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.

இன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.

என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.

Friday, March 5, 2010

வெட்க நிலாக்கள்

கீழ் மூக்கில்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க

கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்

எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்

கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்

தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்

Sunday, February 28, 2010

என் ஆழ்மன காதலை

வருவதற்கு முன்னே
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்

பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்

தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்

ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்

பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்

Wednesday, February 24, 2010

நினைவுகள் நிறைகுகை

நான் அறியா ஏதோ ஒரு மிக நெருக்கமான புள்ளியில் உன்னை நீ என்னோடு இணைத்திருக்கிறாய். எத்தனை முறை நான் அதைக் கண்டறிய முயன்றபோதும் எனக்கு புலப்பட்டதே இல்லை அந்தப் புள்ளி. இனியும் புலப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அது எனக்கு தன்னை அன்றாடம் நினைவு படுத்த தவறுவதில்லை. அந்த புள்ளியிலிருந்து வெளிப்படும் நினைவின் கதிர்கள் என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. பிறகு நான் இயங்க திறனின்றி, நினைவுகள் நிறைந்த குகைக்குள் விழுகிறேன்.

எவ்வழி விழுகிறேன் என்பதோ, எப்படி வெளியேறுவது என்றோ எதுவும் தெரியாமல் குகைக்குள் கேட்கும் நினைவின் குரல் ஒலிக்கும் திசை நோக்கி நடக்கிறேன். அது என்னை உள்ளே உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நினைவின் சித்திரமும் அதன் பக்கச் சுவர்களில் வரையபட்டிருப்பது எனக்கு மிகத் தெளிவாய் தெரிகிறது. அந்த சித்திரங்களைப் பார்க்கும் போது அதை சார்ந்த இன்ன பிற நினைவுகள் என்னை வந்தடைகிறது. ஒரு காட்டாற்றின் வேகத்தோடு நினைவுகள் என்னை அடித்து செல்கிறது. அதன் முடிவில் எங்கோ விட்டு செல்கிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன் இன்னொரு சித்திரம், இன்னொரு பயணம். பிறகு ஒருவழியாய் என்னையறியாமலே எப்படியோ வெளிவருகிறேன்.

நான் வெளிவந்த பிறகும் நான் அறியா ஒரு கணத்தில் என்னில் அந்த புள்ளியை இயக்க என்னைத் தொடர்கிறது. நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன். அது என்னுள் அந்த புள்ளியை மறுபடி இயக்குகிறது. நான் மறுபடி விழுகிறேன். பின் என்னை தொடரும் நம் நினைவுகள்.

Friday, February 19, 2010

எனக்கு அறிமுகமான நான்

எழுதுவதற்கான மன நிலையிலிருந்து சில நாட்களாய் விலகியிருந்த என்னை எழுத வைத்த லாவண்யாவுக்கு நன்றி ! :)

அந்த நாட்களை யோசிக்கும்போது என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை எழுதறேன். அப்போது தான் என்னை நானே புரிந்து கொள்ள தொடங்கினேன்னு நினைக்கறேன்.அதில் முக்கால் பங்கு நான் பெண்கள் பள்ளி/கல்லூரி விடுதியில் தான் கழித்தேன். வீட்டிலிருந்த போதெல்லாம் நான் நிறைய பேசியதாக நினைவில்லை. இப்போதும் கூட நான் அப்படித் தான். என் நண்பர்களிடம் பேசும் அளவுக்கு வீட்டில் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் விடுதியில் நான் நிறைய குறும்பு (அ) சேட்டைகள் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் அப்பா பயம் எனக்கு அப்போது அதிகம் ஆதலால் எந்த சேட்டையும் முன்னால் நின்று பண்ணியதில்லை.

எனக்கு பிடிக்காத நாட்கள் ன்னா அது பரீட்சைக்கு முன்னாடி படிக்கறதுக்கு விடுமுறை விடுவாங்களே அதான். அப்போ எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியாது. பரீட்சைக்கு முந்தய நாளை தவிர மற்ற நாட்களில் படிப்பது பிடிக்காது. அதனாலே வம்புக்கிழுக்க யாராச்சு கிடைச்சாங்கன்னா எனக்கு கொண்டாட்டம் தான். ஆனா ஓரளவுக்குதான் வம்புக்கிளுப்பேன் நம்புங்க.

நான் படித்த பெண்கள் கல்லூரி விடுதியில் எங்களுக்கு எந்த கடிதம் வந்தாலும் அதை வார்டன் படிச்சுட்டுதான் கொடுப்பாங்க. அப்போ ஏப்ரல் 1 க்காக ஒரு அறைத் தோழிய ஏமாத்த ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தின் மேலுறையை எடுத்து அதற்குள் நாங்கள் எழுதிய ஒரு காதல் கடிதத்தை வைத்து கொடுத்துவிட்டு இதை படிச்சுட்டு மேம் உன்னை வந்து பார்க்க சொன்னாங்கன்னு சொல்லிட்டு போய் ஒளிஞ்சு நின்னு அவளோட உணர்வுகளை நோட்டம் விட்டோம். அவள்முகம் மாறியவுடன் தற்செயலா போறமாதிரி என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு போனோம்.அவள் எனக்கு இது யாருன்னே தெரியல எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொன்னாள். பெருந்தன்மையா சரி வா நானும் வரேன் போய் பேசலாம் இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லி, அவளை கூட்டிட்டு மேம் ரூம் முன்னாடி போனதும் இந்த நாடகத்தை முடிச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு கூட்டிட்டு போனேன். ஆனா ரூம் பக்கத்துல போனதும் மேம் வெளிய வந்துட்டாங்க. அவங்களை பார்த்து ஒரு புன்னகைய உதிர்துட்டு, அங்க பக்கத்துல இருந்த தண்ணி குடிக்க வந்த மாதிரி பாவலா பண்ணிட்டு, அவள எதுவும் பேச விடாம அவளுக்கு விளக்கி கூட்டிட்டு வரதுக்குள்ள எனக்கு தான் வேர்த்துருச்சு.

அப்றோம் இன்னொரு ஞாபகம், அப்போ எல்லாம் எனக்கு ஆங்கிலத்துல அவ்வளவு ஞானம் கிடையாது. இப்போ கொஞ்சம் பரவால்லன்னு நினைக்கறேன். அப்போ என்னையும் மதிச்சு என்னோட தோழி தமிழ் செல்வி அக்கா அவங்க சித்தி சித்தப்பா க்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத என் உதவிய நாடினாங்க. எனக்கு இப்போதும் சித்தி சித்தப்பாவை ஆன்டி, அங்கிள் ன்னு கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்மா அப்பாவுக்கு இணையாக நான் அவர்களை மதிப்பதால் எனக்கு ஆன்டி, அங்கிள் என்பது அன்னியமாகப் படும். அதனால அப்போ தமிழுக்கு சொன்னேன் 'Step Mother, Step Father' ன்னு எழுத சொல்லி அவங்களும் எழுதினாங்க. பிறகு அந்த வார விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து என்ன துறத்தி துறத்தி அடிச்சாங்க. எனக்கு என் தப்பு புரிந்தாலும் என்னால் ஏனோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவங்கள் கோபம் இன்னும் அதிகம் தான் ஆச்சு. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வருது :))

முதல் முறை அந்த மாதிரி ஜோக் ஒன்று ஸ்ரீதேவி சொன்னாள், சவிதா எனக்கு சொன்ன அவள் ரகசிய காதல், பதிலுக்கு நான் அவளிடம் பகிர்ந்து கொண்ட என் ரகசிய காதல்.

அப்றோம் நாவல்கள் படிக்கத் தொடங்கினேன், முதல் கவிதை மாதிரி ஏதோ எழுதினேன்.
கிரிக்கட் பைத்தியமா இருந்தேன். நிறைய சிரித்திருக்கிறேன். நிறைய விளையாடி இருக்கிறேன்.

அம்மா அருகாமைக்காக ஏங்கி இருக்கிறேன் பல நாட்கள்,சமயங்களில் அனாதை போல உணர்ந்திருக்கிறேன்,தனிமை பழகியிருக்கிறேன்,போர்வைக்குள் புதைந்து நிறைய அழுதிருக்கிறேன்.

இந்த மாதிரி நிறைய இருக்குங்க. இப்போதைக்கு இது போதுமா? :)