Sunday, December 18, 2016

கண்ணம்மா

அன்று நேத்ராவும் நானும் அவளது சித்திர பயிற்சி வகுப்பு  முடிந்து வந்து கொண்டிருந்தோம். மாலை மணி ஆறரையிலிருந்து ஏழுக்குள் இருக்கும். குளிர்காலம் ஆதலால் சீக்கிரமே இருளத் துவங்கி இருந்தது. முன் சென்று கொண்டிருந்த வண்டியின் வேகத்தை பொறுத்து இயல்பாய் என் கைகள் வேகத்தை கூட்டி, குறைத்துக் கொண்டிருந்தது. மனமெல்லாம் அடுத்த நாள் வகுப்பிற்கான முன்னேற்பாடுகள், இரவு உணவுக்கான திட்டம், என் பள்ளியில், நேத்ராவின் பள்ளியில், வரவிருக்கும் நிகழ்வுகளை குறித்த எண்ணங்கள் என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தன. மேலும் மனம் அதற்கான நுணுக்கமான திட்ட மென்பிரதியை உருவாக்கிக் கொண்டிருந்தது.  எண்ண ஆக்ரமிக்குகள் கொடுத்த அழுத்தமும், முடிக்கவேண்டிய வேலைகளின் நீளமும், திட்டத்தை செயலாக்கும் தீவிரமும் என்னை இயக்கியது. ஆனாலும் நான் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்ததாகத்தான் நினைவு. இதோ இன்னும் அரை கிலோமீட்டர் சென்றால் வீடு சென்று அடையலாம் என்னும்போதில் தான் அது நடந்தது .

அது இரு-வழி சாலை, சற்று அகலமான  பாதையும் கூட. சாலை விளக்குகள் அற்ற பாதை எனவே இருண்டே கிடந்தது. வாகனங்கள் இப்புறம் சென்று கொண்டும், அப்புறம் வந்து கொண்டும் இருந்தன. இருபுறம் செல்லும் வாகனங்களை பிரிப்பதற்காக சாலையின் மத்தியில் இருந்த பிரியாயத்தின் மீது,  நடுத்தர வயது கொண்ட  பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அதை மனதின் ஏதோ ஒரு பகுதி கவனித்தது. அவர் நின்று கொண்டிருந்த விதம் நாங்கள் சென்று கொண்டிருந்த பாதையை கடப்பதற்கான ஆயத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் தலையை பின்புறம் திருப்பி வந்து கொண்டிருந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தார். மிக சரியாக நான் அந்தப் பகுதியை கடக்கும் தருவாயில் அவர் எதிர்புறம் பார்த்துக் கொண்டே துரிதமாக ஓடி வந்து என் இருசக்கர வாகனத்தில் பாய்ந்தார்.  எவ்வளவு தான் பிரேக்கை அழுத்தினாலும் வண்டி அவரில் மோதியது, நானும், அவரும் மற்றும் நேத்ராவும் நிலை தடுமாறி கீழே விழுந்தோம். வினாடிக்கு குறைவான நேரத்தில் சுதாரித்து எழுந்தேன். முதல் நினைவு நேத்ரா. ஓடிப் போய் அவளைப் பார்த்தேன். அவள் நல்ல படியாக இருந்தாள். நல்லவேளையாக அவளுக்கும் தலைக்கவசம் அணிவித்திருந்தேன். அவளை மேலும் கீழுமாக உற்று நோக்கினேன். அந்த குறைந்த வெளிச்சத்தில் சரியாக பார்க்க முடியவில்லை என்றாலும் அவளுக்கு பெரிதாக அடி எதுவும் இல்லை என்பது புரிந்தது. அந்த விபத்தின் அதிர்விலிருந்து நிதானிப்பதற்குள்ளாகவே எங்களின் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் பொறுமையை இழந்து ஆரனை அடிக்கத் துவங்கினர். நான் நேத்ராவின் கையைப் பற்றி இருந்தேன். தங்கள் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் எங்களை சாலையின் ஓரத்திற்கு கொண்டுவந்தார்கள். வண்டியில் பாய்ந்த அந்த பெண் கூட ஒரு சித்தாளைப் போலத்தான் இருந்தாள்.

ஓரத்திற்கு வந்த நான் நடை பாதையில் அமர்ந்தேன். நேத்ராவை என் அருகே அமர்வித்தேன். எனக்கு கை, கால் மூட்டுகளில் சிராய்ப்பு. அந்த பெண்மணிக்கும் பெரிதாக எதுவும் இல்லை. என்னுள் மிகுந்த கோபம் மூண்டிருந்தது. அந்த பெண்ணின் படு முட்டாள் தனத்தால் விளைந்த விபத்து இது. எங்கள் மூவரின் உயிரையும் ஒரு கணத்தில் இழந்திருப்போம். நான் அந்தப் பெண்ணை கடுமையாக கடிந்துகொண்டேன். எங்களை சூழ்ந்த கூட்டம் நல்லவேளையாக எங்களுக்குப் பின்னால் எந்த வாகனமும் அப்போதைக்கு வரவில்லை என்றும், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும் ஒருவருக்கொருவர் கூறி நிம்மதித்துக் கொண்டிருந்தது.  அவர்கள் குறிப்பிட்ட பிறகு அப்படி தப்பித்துக் கொண்ட அசம்பாவிதத்தை எண்ணி மனம் திடுக்குற்றது. சுறு சுறுவென அழுகை மூண்டது. திரும்ப திரும்ப அந்த பெண்ணை சுட்டி கடிந்து கொண்டிருந்தேன்.


அப்போது என் வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தன் அலுவலகப் பணி முடிந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். நான் பேசியதை கவனித்து என்னை புரிந்து கொண்டவராக அந்தப் பெண்ணை நோக்கி நிதானமாக, "பார்த்து வந்திருக்கக் கூடாதா, பாருங்கள் கூட குழந்தையும் இருக்கிறது. ஏதாவது மோசமாக ஆகி இருந்தால்..." என்றார். சற்று என்னை ஆற்றுப் படுத்தினார். அந்தப் பெண்ணும் நான் பார்க்க வில்லை என்று சொல்லிக் கொண்டே தன் மூட்டை அழுத்திக் கொண்டிருந்தார். இவர் என்னிடம் நீர் வேண்டுமா என்று வினவ நான் இல்லை என்றேன். யாரோ வண்டியை சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். என் வண்டி சாவியை என் கையில் கொடுத்த ஒருவர் நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு பிறகு விடைபெற்றார். நானும் நேத்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினேன். கால்கள் நடுக்கமுற்றிருந்தன. வண்டியின் முன்புற பிரேக் உடைந்திருந்தது. மெதுவாக உருட்டிக் கொண்டே வீடு வந்தேன்.


வீட்டுக்குள் நுழைந்து நேத்ராவை நன்றாக அளந்தேன். நல்லவேளையாக அவளுக்கு ஒரு சிறு கீறலும் இல்லை. அந்த நிம்மதி என்னை சற்றே ஆற்றுப்  படுத்தியது. அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால்.. என்றே சிந்தித்ததில் தீவிரமான வலி மனமெல்லாம் பரவியது. அவள் தனக்கு ஒன்றுமில்லை என்று திரும்ப திரும்ப என்னிடம் உறுதி படுத்திக் கொண்டிருந்தாள். நான் அழத் துவங்கி இருந்தேன். இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் போய் அழலாமா என்று என் கண்ணீரைத்  துடைத்தாள். பிறகு அவள் எனக்கெங்கே அடிபட்டது என்று அறிந்து கொள்ள விளைந்தாள். என்னுடைய பாண்டை மேழே இழுத்து மூட்டில் இருந்த புண்ணை ஆராய்ந்த அவள் ஓடி சென்று டெய்ட்டால் மற்றும் பஞ்சு எடுத்து வந்து காயத்தை சுத்தம் செய்தாள். என்னை அமைதிப் படுத்தினாள். பிறகு அவளிடம் நான் அவள் கீழே விழுந்தபோது தலைக்கு அடிபட்டதா என்றேன். இல்லையே நாந்தான் ஹெல்மெட் போட்டிருந்தேன் என்றாள். பிறகு அவள் விழுந்த விதத்தை விவரித்தாள். வண்டி சாயும்போது அவள் கால்களை மேலே தூக்கி கொண்டதாக கூறினாள். தலையின் ஹெல்மெட் மட்டும்தான் சாலைக்கு முட்டியது என்றாள். அவளின் இந்த நிதானம், விபத்து அதிர்ச்சியிலும் கூட செயல்பட்ட முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவள் வயதுக்கு மீறின, அந்த நேரத்தில் எனக்கு தேவைப்பட்ட ஒத்துழைப்பை  முழுமையாக எனக்கு கொடுத்தாள். என் தாயின் ஆறுதலையும், தந்தையின் பாதுகாப்பையும் எனக்கு அவள் கொடுத்தாள். பிறகு அவள் தன் தோழியோடு விளையாட சென்றாள். நான் அந்த அனுபவத்தைக் குறித்த என் அணுகுமுறை பற்றியும் அவளின் அணுகுமுறை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நேத்ரா எனக்குப் புதிதாகத் தெரிந்தாள். 


~விபத்தில் அவளை பாதுகாத்த சக்திக்கும், அவளை புதிதாக அறியக் கொடுத்த அனுபவத்திற்கும், கூடி உதவிய கூட்டத்திற்கும் என் நன்றிகள்~


சுய  பிரதிபலிப்பு: நிதானத்திற்கு வந்த பிறகு, கோபத்தில் அந்த பெண்மணிக்கு என்னவாயிற்று என்று கூட சரியாக தெரிந்து கொள்ளாமல் வந்த என் சுயநலத்தை எண்ணி வெட்கினேன்.