Thursday, June 16, 2011

அதீத மயக்கம்

நெடுநேரம் போராடி
நடுநிசியில் துய்த்த அவளுக்கு
அவனும்
நீராடியும் வடிந்திராத அவனுடற் சூடும்
கலைந்த சிகையும்
மதுவுண்டு சிவந்த விழிகளும்
அதை மறைக்காத இமைகளும்
காதோரம் இறைக்கும் நாசியும்
கிளர்த்தும் மீசையும்
சூழ்ந்த புகைக்கிடையில்,
சற்றே நடுங்கும் உதடுகளும்
அது கொடுத்த புகை முத்தமும்
அதன் சுகந்தமும்
இதழ் கடித்த பற்களும்
அதை தடவும் நாவும்
தன்னை சுமந்த மார்பும், அங்கே குருமுடிகளும்
விரல் துளைக்கும் விரல்களும்
கால் பின்னும் கால்களும்
துவங்கும் மிதமும்
வெடிக்கும் வேகமும்
முனகும் மோகமும்
கொடுத்த விழிப்பை
ஊளையிட்டு சபித்தன
உறக்கம் பிடிக்கா நாய்கள்

Thursday, June 2, 2011

பயணங்கள் முடிவதில்லை

அது என்னவோ தெரியவில்லை ஒரு காட்டை பார்த்துவிட்டால், ஓவியத்திலோ, புகைப்படத்திலோ அது எங்கேயானாலும் சரி பட்சியாகி விருட்டென்று அங்கே பறந்துவிடுகிறது மனது. அது மனதா, ஆத்மாவா,உயிரா,உள்ளா எதுவோ, ஆனால் நம்முள் உயிர்த்துக் கொண்டிருக்கும் ஒன்று. பறப்பது என்றால் பறப்பதே தான். ஒரு காடு காணக் கிடைக்கையில் புலன்கள் கூர்மையாகிறது. அப்பொழுது உணர்வதற்கு உடலெனும் ஊடகம் தேவைப் படுவதில்லை. அடர் இருள் கானகமோ, வெயில் சுமந்த காடோ, அருவி நனைக்கும் காடோ அந்தக் காட்சிக்கேற்ப ஆத்மாவால் அப்படியே இருளை, வெயிலை, குளுமையை உணர முடிகிறது. ஒரு நிமிடம் காடுகளை சுமக்கும் தொடர் மலையென அமைதி காக்கும் ஆத்மா, அடுத்த நிமிடம் எதற்கோ பறவையின் மிரளும் கண்களோடு காட்டிலேயே அடர்ந்து உயர்ந்த மரம் ஒன்றுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறது. என்னுள் தற்போது இருக்குமாத்மா ஒருவேளை காட்டுக்குள் அற்ப ஆயுளில் இறந்துபோன ஒரு பறவையின் ஆத்மாவாக இருக்கலாம். அதனால் தான் காடு பெரும் போதையாய் உள்ளிறங்குகிறது. இப்படி பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு தினத்தில் எனக்கொரு அழைப்பு வருகிறது, காட்டுக்குள் இரவு பயணம் வர விருப்பமா?

இரு தினங்களாகவே அப்படி ஒரு எதிர்பார்ப்பு. காட்டுக்குள் இரவு பயணம் இது இரண்டாவது முறை. முதலில் சென்றிருந்தாலும் அது கொஞ்ச தூரம் தான். இப்போது பயணம் முழுக்க இரவில் தான். நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. பயணத்திற்கு வேண்டியவைகளை தயார்படுத்திக் கொண்டிருந்தோம். பயண நாள் வேனுக்காக எம் ஜீ ரோடு லைப் ஸ்டைல் முன்னே காத்திருக்கையில் பெரிய பஞ்சு மிட்டாய் ஒன்றை வாங்கிக் கொண்டோம். தித்திப்பாய் இருந்தது. பிறகு கீது அவளுடைய ஆதர்ஷ சுட்ட சோளத்தை வாங்கி காரத்தில் ஸ் ஸ் என்று கொண்டே கொறித்தாள். மிக சரியாக ஒன்பது நாற்பதிற்கு வேன் வந்தது. நானும் கீதுவும் டிரைவருக்கு இடப்பக்கம் இருந்த இரண்டாவது சீட்டில் அமர்ந்தோம். கடைசீயாக எங்கள் மூவரை ஏற்றிக் கொண்டு வேன் பெங்களூரை விட்டு மைசூர் ரோட்டில் சென்றது. வேனில் எல்லோருமே சிறு சிறு குழுவாக இருந்தார்கள். பத்து பன்னிரண்டு வயதில் இரு சிறுவர்கள் கூட இருந்தார்கள். இந்தப் பயணத்தை ஒட்டிய அவர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைந்ததல்ல என்னுடையது.

செல்லும் வழியில் ஓரிடத்தில் நிறுத்தி இரவு உணவை ஒரு குழு முடித்துக் கொண்டது. வேன் உள்ளே ஆங்காங்கே ஆங்கிலத்தில் தோய்த்த தமிழ் குரல்கள் கேட்டது. வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சம் இருளை கொஞ்சமே கொஞ்சம் ஊடுருவி விரைந்தது. மெயின் ரோட்டில் இருந்த பாதை பிரிந்த இடத்தில் மலைவாழ்/காடுவாழ் மக்களின் சிறு வீடுகள் இருப்பது தெரிந்தது. இப்பொழுது சிறு பாதையில் வாகனம் செல்கையில் ஒரு சுமைதாங்கிக்கல் மேல் வெளிச்சம் விழுந்தது. அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்தாள். அதுவும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இங்கிருந்துதான் சுவாரசியம் துவங்கியது. அந்த பெண் வெள்ளை சேலை உடுத்தி இருக்காவிட்டாலும் கண்களுக்கு முதலில் புலப்பட்டது அவளது விரிந்த கூந்தல்தான். அந்த வேளையில் வாகனம் வருகிறதென்ற சிறு துணுக்குறல், திரும்பிப் பார்க்கும் ஆர்வம் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது வெகு விநோதமாய் இருந்தது. ஒரு வினாடி வாகனத்துள் பெரும் அமைதி நிலவியது. ஒரு குரல் கோஸ்ட் என்றது மறு நொடி எல்லோரும் ஒரு சேர சிரிக்கத் துவங்கினோம். அன்றிரவு தங்கள் தங்கள் குழுக்களுக்கு வெளியாய் எல்லோருமாய் சேர்ந்து நடத்திய முதல் கூட்டு சம்பாஷனை அந்த சிரிப்பு.

சரியாக பனிரெண்டு மணிக்கு இடத்தை அடைந்தோம், வாகனம் நின்றது. சற்று முன் மலையும் கோவிலின் நுழை வாயில் கதவும் தெரிந்தது. கைடு எல்லோரையும் வாகனத்தை விட்டு இறங்க சொன்னார்கள். பேக்கை எடுத்துக் கொள்ள வேண்டாமா என்று கேட்டோம். இப்போது எடுக்க வேண்டாம் நான் சொல்கிறேன் கீழே இறங்குங்கள் என்றார். பேக் இல்லாமல் எப்படி என்று குழம்பிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கீழே இறங்கினோம். வெளியே கும்மிருட்டு. வாகனத்தின் உள்ளே இருந்த வந்த வெளிச்சம் ஒருவர் மேல் ஒருவரை இடித்துக் கொள்ளாமல் காப்பாற்றியதே தவிர முகங்களை காட்டிக் கொடுக்கவில்லை. கைடு அவர் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு இன்னொரு கைடையும் அறிமுகப் படுத்தினார். பெயர்களைத் தவிர இருவருக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை. எங்களை, எங்களால் ஒரு வட்டம் உருவாக்கச் சொன்னார். கலைந்து கிடந்த எல்லோரும் இப்படியும் அப்படியுமாய் நகர்ந்து வட்டமானோம். ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொள்ள சொன்னார். இந்த இருட்டுல போய் என்ன அறிமுகம் என்று நான் நினைத்தேன், யாரோ கேட்டார். பரவால்ல பெயரை தெரிந்து கொள்ளலாம் என்றார். ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொண்டோம். கூட்டத்தில் ஒருவர் டார்ச்சை அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவர் மீதும் அடித்தார். அவர் முறை வந்தபோது தெரிந்தது அந்த சிறுவர்கள் அவரோடு தான் வந்திருக்கிறார்கள். அவர் பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டே இந்த சிறுவர்கள் காட்டுக்குள் தொலைந்து போனால் தயவு செய்து என்னிடம் கூட்டி வந்து விடுங்கள். ஏனென்றால் இவர்கள் என் மைத்துனர்கள் பிறகு என் மனைவிக்கு பதில் சொல்ல முடியாது. ஐ கேன்'ட் டேக் சான்செஸ் வித் தெம் என்றார். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு சற்றே பெரிய குழு க்ரைஸ்ட் காலேஜில் இருந்த வந்திருந்தார்கள். பொதுவாகவே இள வட்டங்களின் குதூகலமும் உற்சாகமும் பிடிக்கும் என்றாலும் இம்மாதிரியான இயற்கை பயணங்களில் அமைதியாக இருக்கவே விரும்புவேன். கல்லூரி மாணவர்கள் இருக்கும்போது இந்த பயணம் எப்படி இருக்கும் என்பதாய் ஒரு சிறு அசௌகரியம் தோன்றியது. தற்போது ஒருவழியாக முப்பத்தி இரண்டு பேரின் அறிமுகமும் முடிந்தது.

இப்போது கைடு நான் உங்களை ஒரு மணி நேர பயணமாக காட்டுக்குள் கூட்டி செல்லப் போகிறேன். பிறகு திரும்பி வந்து உங்கள் பைகளை எடுத்துக் கொண்டு மலை ஏறலாம் என்றார். ஒரு டார்ச் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஏதாவது புலி சிங்கம் காட்டுக்குள் இருக்குமா என்று யாரோ கேட்டதற்கு ஆமா முப்பத்திரண்டு புலிகள் இருக்கின்றன என்று கைடு சொன்னார். எல்லோரும் சிரித்தபடி வாகனத்திற்குள் ஏறி தண்ணீரும் டார்ச்சும் எடுத்துக் கொண்டு திரும்பினோம். முந்தின இரவு பெய்த மழையில் மண் இன்னுமே ஈரமாக இருந்தது. கடைசியில் யாரும் தனியாக பின் தங்கி விடாதீர்கள் தொடர்ந்து நடங்கள் என்றபடி அவர் முன்னே நடக்க அது பெரிய பாதை இல்லாததால் எல்லோரும் பிரிந்து அவர் பின்னே நடந்தோம். விறுவென நடந்து போகும்போது ஆங்காங்கே பறவையின் சிறகுலர்த்தல் சத்தம் போல் கேட்டது. கல்லூரி மக்கள் கொஞ்சம் உரக்க பேசியதாலோ என்னவோ வேறு மென் ஒலிகள் கேட்கவில்லை. தொடர்ந்து நடந்து ஒரு இடம் அடைந்தபிறகு எல்லோரும் வந்து சேரும் வரை அங்கே அமர்ந்தோம். பிறகு திரும்ப நடக்கத் துவங்கினோம். இந்த பயணத்தில் ஒரே இடத்தில் சற்று நின்று நிலவைப் பாரதத்தை தவிர பெரிதாக எதுவும் ஈர்க்கவில்லை. அங்கே ஒரு பத்து நிமிடமேனும் தனியாக எந்த சத்தமும் இல்லாமல் கும்மிருட்டுக் காட்டை பார்த்து கொண்டிருந்திருந்தால் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். திரும்பி வாகனத்தை வந்தடைந்தோம். என் ஜெர்கின் முழுக்க நனைந்து விட்டிருந்தது. உள்ளே சென்று அவர்கள் கொடுத்த ஸ்லீபிங் பாக் மற்றும் எங்களின் பாக் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து ஒரு மரத்தின் சுற்றுசுவரில் எல்லோரும் கூடும் வரை அமர்ந்தோம்.

எல்லோரும் வந்ததும் கோவில் நுழை வாயில் வழியாக மலை ஏறத் துவங்கினோம். மலையில் ஒரு கோவில் இருந்ததால் படிக்கட்டுக்கள் இருந்தது. கொஞ்ச தூரம் போனதும் என்னால் ஏற முடியவில்லை கொஞ்சம் ஓய்வெடுத்து பிறகு நடந்தோம். யாரோ ஒருவர் இன்னும் எவ்ளோ தூரம் என்று கேட்க இன்னும் ஒரு மணி நேரம் என்றார். சொல்ப கம்மி மாடி (கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க) என்றதும் சிரிப்பு வந்தாலும் ஒரு மணி நேரமா என்று தோன்றியது . சுத்தமாக நடக்க முடியவில்லை வியர்த்துக் கொட்டத் துவங்கியது. நிஜமாகவே கொட்டத் துவங்கியது. கொஞ்ச தூரம் ஏறியதும் திரும்ப என்னால் ஏற முடியாததால் ஒரு படியில் அப்படியே அமர்ந்தேன். ராஜும் கீதுவும் ப்ரூட்டி குடிக்க சொல்லிக் கொடுத்தார்கள். அது குடித்ததும் சற்றும் தெம்பு வந்ததென நம்பிக்கொண்டு ஏறக்குறைய படிகளை தாவிக் கடந்தேன். பிறகு மறுபடியும் ஓயும் நிலையில் படிகள் முடிந்தது. படிகள் முடிந்ததும் என்னால் மலைப் பாதையில் ஏற முடிந்தது. கிட்டத்தட்ட இடத்தை நெருங்கிய நிலையில் ஒரு பெரிய குன்றை ஏறிக் கடந்து உச்சியை அடைய வேண்டும். அங்கே படிகள் இல்லை பாதிப் பாதங்கள் மட்டும் பதியும் வகையில் மலையில் குழி பறித்திருந்தார்கள். எனக்கு ஏறி வந்ததில் கால்கள் திறனிழந்து நடுங்கத் துவங்கி இருந்தது. இதில் எப்படி அல்லையில் இருக்கும் கடப்பாரைகளைப் பற்றிக் கொண்டு படி கூட அல்லாத குழியில் கால் ஊன்றி நடப்பது என்று பயமாக இருந்தது. அதில் எச்சரிக்கை பலகை வேறு இருந்ததை பார்க்கையில் ஒரே ஒரு முறை கிளம்புவதற்கு முன் மகளை கடைசியாக பார்த்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. மேலே ஏறி உச்சியில் நின்று கொண்டிருந்த கைடு பார்த்து வாருங்கள் ஏறும் போது கீழே பார்க்க வேண்டாம் என்றார். முதலில் கீது ஏறினால் அவள் பின் நான் சென்றேன். ராஜின் டார்ச் கொஞ்சம் வழி காட்டியது. எனக்கு இதை ஏறுவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. இருட்டில் இடது பக்கமிருந்த பள்ளத்தாக்கு பெரிதாய் பயமுறுத்த வில்லை. எல்லோரும் உச்சியை அடைந்தோம். கைடு காலையில் நான்கு மணிக்கு கீழிறங்க வேண்டும் என்றார்.

நாங்கள் ஸ்லீபிங் பாக்கை பிரித்து விரித்தோம். ஜெர்கின் நனைந்து விட்டிருந்ததால் குளிரத் துவங்கியது. எடுத்து வந்திருந்த பிஸ்கட் கொஞ்சம் கொறித்து விட்டு கீது உறங்கினாள். நானும் படுத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு தாங்க முடியாது குளிரியது. குறுகிக் குறுகிப் படுத்தாலும் முடியவில்லை. முதலிலெல்லாம் எத்தனை முறை மழையில் நனைந்திருக்கிறேன். ஒரு முறை கல்வீராம்பாளையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பல்கலைக் கழகம் வரை நானும் காயுவும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே சென்றிருக்கிறோம். அப்போதெல்லாம் குளிர் ஒரு பொருட்டாகவே இல்லை. இப்போது தாங்க முடியும் என்று தோன்றவில்லை எழும்புக்குள் வரை குளிர்ந்தது. யாரோ பேசிக் கொண்டிருந்ததுபோல் கேட்டது. எனக்கும் கீதுவோடு பேசிக் கொண்டிருந்தால் நன்றாய் இருக்குமென்று தோன்றியது.

ஒரு கட்டத்தில் உண்மையாகவே இங்கு வந்தது பெரிய பிழை போலும் அதுவும் நேத்ராவை பார்க்காமல் வந்தது மிகப் பெரிய பிழை என்று இப்போது பார்க்காமலே போய் விடப் போகிறேன் என்றும் தோன்றத் துவங்கியது. உளவியலில் ஏதாவது கை கொடுக்குமா என்று எனக்கு மிக அருகில் திகு திகு வென்று நெருப்பு எரிவது போல் கற்பனை செய்து கொண்டேன். குச்சிகள் உடைக்கும் சத்தம் நெருப்பின் சத்தம் எனக்கு காதுக்கு உண்மையில் கேட்கத் துவங்கியது. நிஜமாகவே திரும்பி பார்த்தேன் அப்படி ஒன்றும் இருக்கவில்லை. ஏற்கனவே கைடு மழையில் விறகுக் குச்சிகள் நனைந்து விட்டிருந்ததால் நெருப்பு போட முடியாது என்றிருந்தார்.பிறகு ஒரு சில நிமிடங்கள் எதுவும் பயனளிக்கவில்லை எழுந்து திரும்பிப் பார்த்தேன். கல்லூரிக் குழு கேம்ப் பையர் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். முதன் முறையாக நல்ல வேளை இவர்கள் வந்தார்கள் என்று அவர்கள் வருகை அவ்வளவு பிடித்தது. உடனே எனக்கு அங்கே ஓடத் தோன்றியது. கீதுவை எழுப்பினேன் அவள் எழவில்லை, ராஜை எழுப்பினேன் அவனும் எழவில்லை. மறுபடியும் கீதுவை எழுப்பி எனக்கு குளிருது வா அங்கே போகலாம் என்றேன். அவள் எழுந்தால் நாங்கள் இருவரும் அங்கே சென்று நின்றோம். பாதி பேர் சுள்ளி பொறுக்கிக் கொண்டு வந்து நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.அது நனைந்திருந்ததால் மெதுவாகவே எரிந்தது. அறை மணி நேரம் அப்படியே நின்றேன் உயிர் வந்தது.

திரும்பி வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தோம். பிறகு படுத்ததும் உடனே நான்கு மணி என்று கைடு எல்லோரையும் எழுந்துக்கச் சொன்னார். நாங்கள் முதலில் எழுந்து இறங்கத் துவங்கினோம். கால்கள் இப்போது வலிக்கத் துவங்கி இருந்தது. அந்தக் குன்றை கவனமாகக் கடந்து எல்லோரும் இறங்கட்டும் என காத்திருந்தோம். எல்லோரும் வந்ததும் கீழே நடந்து வந்து வாகனத்தை அடைந்தோம். கீழிறங்குவது கடினமாக இருக்கவில்லை. பிறகு இன்னொரு பாறைக்கு வாகனத்தில் அழைத்து சென்றார்கள். அங்கே ரேப்பெல்லிங் இருந்தது. கயிறை பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக மலையில் இருந்து கீழே இறங்க வேண்டும். நிறைய நேரம் பிடிக்கும் என்பதால் நாங்கள் மூவரும் அங்கே ஒரு சிறு குட்டைக்கு அருகே செல்லலாமென சென்றோம். சுற்றிலும் மாந்தோப்புகள் இருந்தது. மாங்காய்கள் கண்ணை பறித்தது.ராஜை சென்று பறித்து வர சொன்னேன். அவன் பறித்து வந்தான். அவன் மேலேறி வந்ததும் ஒரு தாத்தா வந்து ஏதோ சத்தம் போட்டார். அதற்குள் அவன் மாங்காய்களை என் கையில் கொடுத்து விட்டு மறைச்சு வெய்யுங்க என்றான். அடப் பாவி என்று நினைத்துக் கொண்டு ஒரு குட்டி பாறைக்கு பின்னால் வைத்து விட்டு வந்து அமர்ந்தேன். அவர் கீழேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு பறித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.

கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்திருந்து விட்டு திரும்பினோம். எல்லோரும் மலை இறங்கியதும் கீத்து கடைசியாக சென்று வந்தாள். பிறகு எல்லோரும் வாகனத்தில் ஏறினோம். மிக சோர்வாய் இருந்தது. அப்படியே உறங்கத் துவங்கினோம்.

Friday, May 13, 2011

ஒற்றைச் செம்பருத்தி

மையிட்டு, மலர் சூடி
உறங்குவதற்கு முன்
உறக்கத்தின் இடையில்
உறங்கி எழுந்ததும்

என எத்தனை கனவுகள்
அப்போதெல்லாம்

தொலையுமெனில்,
கலையுமெனில்,
எல்லாமே எல்லாமே
எல்லாமே எதற்கு?

வாசச் செடியில்
ஒற்றைச் செம்பருத்தி
அதனாலென்ன
இருந்துவிட்டு போகட்டும்

அடுக்களை ஜன்னலைத்தான்
திறப்பதேயில்லை
அந்தப்புரம் ஜோடிப் புறாக்கள்

Saturday, May 7, 2011

இறுக்கம் கழைந்து

மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந்து விழுந்த கேள்வியை எதிர்கொள்ள அவகாசம் வேண்டி இறுக்கமென எதை சொல்கிறாய் திருப்பி அவளிடமே கேட்டேன். ஒரு நேசத்தை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயங்குகிறோம், நேசம் மட்டுமல்ல எல்லா உணர்வுகளையுமே ஏன் இப்படிக் கட்டுப் படுத்திக் கொண்டு இறுகிக் கிடக்கிறோம். இலகுவாக எதையும் வெளிப்படுத்த ஏன் அஞ்சுகிறோம். இப்படி எங்கேயோ பார்த்துக் கொண்டு கேட்ட தொடர்ச்சியான கேள்விகளை அவள் உரக்கச் சிந்திக்கிறாள் என்று ஒன்றும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டு என் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு காட்சி தான் அவளை பாதித்து இந்த ரீதியில் சிந்திக்கத் தூண்டி இருக்கும் அது எதுவாய் இருக்கும் என்று தனி கோட்டில் அலையத் துவங்கிய மனதை அவள் என்னை பார்த்துக் சொன்ன அடுத்த வாக்கியம் திருப்பிக் கொண்டுவந்தது. நீ கூடத் தான் அப்படி இருக்கிறாய் என்றாள். எதை வைத்து சொல்கிறாய் கேட்டுவிட்டு எது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னேயே பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாய் அப்படி இல்லையென எப்படி நிரூபிப்பது என்பதாய் மனம் சிந்திக்க துவங்கியது. அவள் என் கேள்வியில் ஆர்வமில்லாமல் நான் கூடத்தான் அப்படி இருக்கிறேன் என்றாள். துரித கதியில் சென்று கொண்டிருந்த மனம் சற்று நிதானமாகி அவள் என்ன சொல்கிறாள் என்று கவனிக்கத் துவங்கியது. தனியாக குற்றம் சாட்டப் படும்போது வருகிற பதற்றம் நானும் கூட இருக்கிறேன் எனும்போது ஆசுவாசம் அடைகிறது. குற்றம் என்பதை விட வரவேற்கப்படாத ஒரு செயல் அல்லது பழக்கம். எப்போதுமே பிடித்தமானவர்களின் குட் புக்ஸில் இருப்பதைத்தான் விரும்புகிறோம். யார் என்ன நினைத்தால் என்ன இது தான் நான் என்று வெளிக்காட்டிக் கொள்கிற தைரியம், தெளிவு எப்போதும் கூடவே இருப்பதில்லை.

திடீரென்று அனு, ஜூலியட்டைப் பாரேன் ஒரு பறவை போல் இருக்கிறாள் என்றாள். ஜூலியட் எங்கள் பல்கலைகழகத்திற்கு வந்திருக்கும் கேரளத்துப் பெண். இதுவரை பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் அவளைப் பற்றி எதற்கு பேசுகிறாள் என்று தோன்றியது. இவள் இப்படிதான் ஒரு விசயத்திலிருந்து மற்றொரு விசயத்திற்கு தாவி விடுவாள். சில சமயம் சுவாரஷ்யமாய் இருக்கும் சில சமயம் எரிச்சலாய் இருக்கும். எங்கேயாவது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் முடிச்சிருக்கும் ஒரு கட்டத்தில் அவிழும்போதுதான் எதற்கு சொல்கிறாள் என்று புரியும். ஜூலியட் என்றதும் எனக்கு அவள் ஒரு நாள் ரூமில் திருட்டு தம்மடித்து கொண்டிருந்தது நினைவில் வந்தது. பயப்படாம தம்மெல்லாம் அடிக்கறா அதனால சொல்றியா என்றேன். நீயும் எல்லோர் மாதிரியுந்தான் அவளைப் பாக்கற எனக்கு இப்போ ஜூலியட் வேற மாதிரி தெரியறா என்றாள். வேற மாதிரின்னா? ஒரு வகையில் அவள் ஒரு தேவதை போலவும், பல வண்ணப் பட்டாம்பூச்சி போலவும், பறவை போலவும் இப்படி எல்லாம் என்றாள். ஏன் திடீர்ன்னு என்றேன்? நான் நிறைய நாள் அவளைப் பாத்திருக்கேன். ஏன் தேவதைன்னு சொல்றேன்னா, அந்த தாத்தா இருக்காரில்ல தகர வீட்டு தாத்தா என்றாள். நாங்கள் தினமும் நடக்கும் வழியில் நாலு தகர சுவர்கள் அமைந்த போன் பூத்தை ஒத்த தகர வீட்டில் ஒரு கண் தெரியாத தாத்தா இருப்பர். அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் மனம் மிகுந்த சங்கடம் கொள்ளும் ஆனால் ஒரு நாள் கூட அவரோடு பேசியதில்லை. அந்த தாத்தாவுக்கு என்ன என்பது போல் அனுவைப் பார்த்தேன். இன்று வகுப்பு முடிந்து வருகையில் ஜூலியட் தாத்தா கையை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். நமக்கு ஒரு நாள் கூட அவர்கிட்ட பேச தோணல இல்ல, உபயோகமில்லாத பரிவு அவசியமில்லாதது இல்லையா என்றாள். சட்டென நினைவு வந்தது போல் மஞ்சு கூப்ட்டா அப்போவே என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன் என்று சென்றேன்.

எங்கள் அறைக்கு நேர் எதிர் அறைதான் மஞ்சுவுடையது என்றாலும் நேருக்கு நேராய் போக முடியாது. தொட்டி வீடு போல இது தொட்டி விடுதி. வட்ட வடிவம் போல் இருக்கும் விடுதியில் எல்லார் அறைக்கு முன்னேயும் சுற்று கைச் சுவர் இருக்கும். இடையில் வட்டமாய் இருக்கும் வெற்று இடத்தில் செம்மண் போட்டு தோட்ட தாத்தா நிறைய செடிகள் வைத்திருப்பார். அதன் மத்தியில் தான் நடை பாதை இருக்கும். நான் சுற்றிக்கொண்டு மஞ்சுவின் அறை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். மஞ்சுவும் நானும் ஒரே துறை. அவள் அறையில் எப்போதும் என் துறைத் தோழிகள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவள் சகஜமாக, சரளமாக உரையாடுவாள். எப்படி வந்தது என்று தெரியாது அவளை எல்லோரும் சித்தி என்று அழைப்போம். நான் வகுப்பு முடிந்து அனேக தினங்கள் அனு வரும் வரை மஞ்சுவின் அறையில் இருப்பேன். அங்கே நிலவும் குதூகலம் எனக்கு பிடிக்கும். ஒரு கட்டத்துக்குமேல் எல்லாம் சலித்து அனு எப்போது வருவாள் என்றிருக்கும். அனு வேறு துறை வகுப்பு முடிந்ததும் நேராக அறைக்கு வர மாட்டாள். அவளுக்கு அவள் வகுப்பில் எல்லோருமே நெருக்கம். அவளிடம் எல்லோருமே எப்படி வெகு சீக்கிரம் பழகிவிடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும். அனுவும் நானும் பேசாத விசயங்களே இருக்காது. அனுவோடு யாராவது பேசினாலோ அவள் யாரை பற்றியாவது சிலாகித்து பேசினாலோ எனக்கு ஒருவித அமைதியின்மை வந்து விடுகிறது.

ஒரு நாள் எனக்கு மழையில் நனைந்து கொண்டே பாட்டுக் கேக்கணும் என்றேன் அனுவிடம். ஆசையை வெளியிட்ட அடுத்தநாள் லேசாகத் தூறியது அவள் வாக்மேனை எடுத்துக் கொண்டு வா போகலாம் என்றாள். நாங்கள் தூறலில் இயர் போனை ஆளுக்கொரு காதில் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் பாட்டுக் கேட்டுத் திரும்பினோம். அதென்ன ரோட்டோர டீ கடைல பசங்க தான் டீ குடிக்கனுமா ஏன் நாம குடிக்கக் கூடாதா என்ற மறு நாள் ஆண்களுக்கு மத்தியில் நாங்கள் இருவர் மட்டும் டீ குடித்துக் கொண்டிருந்தோம். அனுவின் வார்த்தைகளில் மற்றுமின்றி செயல் படுத்தும் தைரியம் எனக்கு மிகப் பிடிக்கும். அனு என்னை நிறைய வேளைகளில் கூட்டை கிழித்து விட்டு வெளியே அழைத்து சென்றிருக்கிறாள்.இப்போது மஞ்சு கூப்பிட்டாள் என்று எதற்கு பொய் சொன்னேன் என்று என்னையே திட்டிக் கொண்டு சென்றேன். என் வாழ்வில் அனு போன்ற ஒரு ஆத்மாவை கண்டெடுத்தது அதிர்ஷ்டம், மனம் அதை பாதுகாக்க வேண்டுமே என்று அலைமோதித் தவித்தது. ஏன் இப்படி? யார் அன்பை திருடி விட முடியும். எனக்கானது எப்போதும் எனக்கு இருக்கும் இல்லையா? அவள் அன்பு மொத்தமும் எனக்கே வேண்டும் என்று நினைக்கிறேனா? இது இயல்பா இல்லை இதனால் அவளைமுற்றிலும் இழந்து விடுவேனா? ஓரிருமுறை இந்த உரிமை நிலைநாட்டலை நான் வெளிகாட்டிக் கொண்டபோதே அவள் அதை ரசிக்கவில்லை. மாறாக அது அடிமைத் தந்திரம் என்றாள். வென் யு ரியல்லி லவ் சம்திங் யு ஹாவ் டூ லெட் தட் ப்ரீ என்பாள். அதனால் நான் அவள் யாரோடு பேசினாலும் உள்ளுக்குள் எத்தனை பயந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். அவளுக்கு இதெல்லாம் புரிவதே இல்லை. இப்போதும் அவள் ஜூலியட்டை பற்றிப் பேசுகையில் எங்கே வெளிக்காட்டி விடுவேனோ என்று பயந்து மஞ்சு அழைப்பதாய் பொய் சொல்லி வந்தேன்.

மஞ்சுவின் அறைக்கு சென்று பார்க்கையில் மஞ்சு அறையில் இல்லை துணி துவைக்க சென்று விட்டாள் என்று கல்பனா சொன்னாள். திரும்பி வருகையில், ஜீ 50 அனுராதா என்று மூன்று முறை ரிசப்சன் போன் பூத் மைக்கில் அழைத்தார்கள். எங்களுக்கு போன் வந்தால் அறை எண், பேரை சொல்லி அப்படிதான் அழைப்பார்கள். நான் ரிசப்சனை கடக்கையில் அனு போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளை கடந்து வந்து வெறுமனே மூடி இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். மூடி இருந்ததால் அறையும் இறுக்கமாகவே இருந்தது. ஒரு மூன்று நிமிடத்தில் போன் பேசி முடிந்து அனு வந்தாள். முகத்தில் ஒரே சந்தோச களை. மஞ்சு கிட்ட பேசிட்டியா என்றாள். முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அவ ரூம்ல இல்லே என்றேன். அதை அவள் கவனிக்காமல் அக்கா கூப்டாங்க பெரியக்கா என்றாள். அப்டியா என்றேன். ம்ம் கன்சிவா இருக்காங்க என்றாள். எல்லாவற்றையும் மறந்து என்னது என்றேன் சற்று உரக்க நம்ப முடியாமல். அவள் பெரியக்காவுக்கு பத்து வருடமாய் குழந்தைகள் இல்லை. சின்னக்காவுக்கு ரெண்டு குழந்தைகள். எனக்கும் தாள முடியாமல் சந்தோஷம். ரொம்ப சந்தோசமா இருக்குடீ என்றேன். ஆமா என்னால கூட முதல்ல நம்பவே முடில எவ்ளோ நாள் ஏக்கம் தெரியுமா என்றாள். எனக்கும் தெரியும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு வாட்டியாவது புலம்பி விடுவாள். அக்கா இப்போவே ரெண்டு பெட்டி நிறைய துணி சேத்த ஆரம்பிச்சாச்சு என்றாள். ஒன்னு பொண்ணு துணி இன்னொன்னுல பையனுக்கு என்றாள்.ம் இருக்காதா பின்னே என்றேன் சிரித்துக் கொண்டே. அன்று வெளியே சென்றபோது அனு இரண்டு மர பொம்மைகள் வாங்கினாள். திரும்பி வருகையில் ஜூலியட் தகர வீட்டு தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தாள். அனு வா நாமும் பேசலாம் என்றாள். எங்கிருந்து தான் வந்ததோ அத்தனை இறுக்கம், நீ வேண்டுமானால் பேசிவிட்டு வா நான் இங்கேயே இருக்கிறேன் என்றேன். அவள் எதையும் கண்டுக்காமல் ரோட்டை கடந்து சென்று ஐந்து நிமிடம் தாத்தாவோடும், ஜூலியட் உடனும் பேசிவிட்டுத் திரும்பினாள்.

சமீபமாக ஜூலியட் அனுவைப் பார்க்க அறைக்கு வருகிறாள். எவ்வளவு தான் நான் பேச தவிர்த்தாலும் ஜூலியட் என்னையும் எப்படியாது அவர்கள் சம்பாசனையில் இணைத்து விடுவாள். அவளின் கொஞ்சும் தமிழ், கலகலப்பு என எனக்கும் ஜூலியட்டை பிடிக்கதுவங்கியது.எனக்கு எப்போதும் மலையாள மொழி மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது. நீங்க பேசினாலே பாட்டுப் பாடற மாதிரி இருக்கு என்பேன் ஜுலியட்டிடம். ஜூலியட் எனக்கு சில வார்த்தைகள் சொல்லிக் கொடுத்தாள். நானும் அவளோடு ஆர்வமாய் பேசினேன். நான் உணர்ந்து முடிக்கும் முன்னேயே எனக்கும் அவள் நல்ல தோழியானாள். தூய அன்புக்கு முன்னால் வேறு எது நிற்கும்?அதற்குதானே சதா ஓயாத தேடல். கிடைக்கும்போது பற்றிக் கொள்ளத்தானே துடிக்கும் மனது.

வகுப்பு முடிந்து மாலையில், தற்போது ஊருக்கு போயிருக்கையில் பார்த்த அக்காவின் வீங்கிய வயிற்றையும், உப்பின கன்னங்களின் அழகையும் வியந்து சொல்லிக் கொண்டே இருந்தாள் அனு. இன்னும் ஒரு வாரத்தில் டெலிவரி என்றாள். கோவை முழுக்க சுற்றி நிறைய குட்டி குட்டி துணிகள் வாங்கினோம். அந்த நாளுக்கென ஆர்வமாய் காத்திருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து அனுவிற்கு போன் வந்தது சென்றாள்.போன் என்ற அழைப்பைக் கேட்டு ஜூலியட் அறைக்கு வந்தாள். ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள என்னிடம் அனுவுக்கு போனா என்றாள். ம்ம் இப்போ அனு திரிச்சு வரும் என்று புன்னகைத்தேன். சில நிமிடங்களில் அனு அழுது கொண்டே திரும்பி வந்தாள். இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் என்னாச்சு என்றோம் ஒரு சேர பதறி. குழந்தை இறந்துடுச்சு என்றாள். எப்புடி என்றேன். அசைவில்லாம இருக்குன்னு டாக்டர் கிட்ட போனப்ப தெரிஞ்சுருக்கு, தொப்புள் கொடி சுத்திடுச்சாம், அதனால குழந்தை இறந்துடுச்சு. ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்திருக்காங்க. அக்கா என் குழந்தையப் புதைக்காதீங்க, என்கிட்டே குடுத்துடுங்க, வயித்துக்குள்ளேயே வெச்சுகறேன்னு, எடுக்க விடாம பைத்தியமா கத்திட்டிருக்காளாம் என்று சொல்லி வெடித்து அழுதாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜூலியட் அவளை கைகளை பிடித்து இழுத்து மடியிலிட்டு, அவள் அழுது ஓயும் வரை ஒன்றுமே பேசாமல் முதுகை தடவிக் கொண்டே இருந்தாள். நடுக்கம் குறையாத நான் எழுந்து ஜூலியட்டிற்கு வெகு அருகே சென்று அவளை ஒட்டி அமர்ந்து கொண்டேன்.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...