Thursday, June 2, 2011

பயணங்கள் முடிவதில்லை

அது என்னவோ தெரியவில்லை ஒரு காட்டை பார்த்துவிட்டால், ஓவியத்திலோ, புகைப்படத்திலோ அது எங்கேயானாலும் சரி பட்சியாகி விருட்டென்று அங்கே பறந்துவிடுகிறது மனது. அது மனதா, ஆத்மாவா,உயிரா,உள்ளா எதுவோ, ஆனால் நம்முள் உயிர்த்துக் கொண்டிருக்கும் ஒன்று. பறப்பது என்றால் பறப்பதே தான். ஒரு காடு காணக் கிடைக்கையில் புலன்கள் கூர்மையாகிறது. அப்பொழுது உணர்வதற்கு உடலெனும் ஊடகம் தேவைப் படுவதில்லை. அடர் இருள் கானகமோ, வெயில் சுமந்த காடோ, அருவி நனைக்கும் காடோ அந்தக் காட்சிக்கேற்ப ஆத்மாவால் அப்படியே இருளை, வெயிலை, குளுமையை உணர முடிகிறது. ஒரு நிமிடம் காடுகளை சுமக்கும் தொடர் மலையென அமைதி காக்கும் ஆத்மா, அடுத்த நிமிடம் எதற்கோ பறவையின் மிரளும் கண்களோடு காட்டிலேயே அடர்ந்து உயர்ந்த மரம் ஒன்றுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறது. என்னுள் தற்போது இருக்குமாத்மா ஒருவேளை காட்டுக்குள் அற்ப ஆயுளில் இறந்துபோன ஒரு பறவையின் ஆத்மாவாக இருக்கலாம். அதனால் தான் காடு பெரும் போதையாய் உள்ளிறங்குகிறது. இப்படி பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு தினத்தில் எனக்கொரு அழைப்பு வருகிறது, காட்டுக்குள் இரவு பயணம் வர விருப்பமா?

இரு தினங்களாகவே அப்படி ஒரு எதிர்பார்ப்பு. காட்டுக்குள் இரவு பயணம் இது இரண்டாவது முறை. முதலில் சென்றிருந்தாலும் அது கொஞ்ச தூரம் தான். இப்போது பயணம் முழுக்க இரவில் தான். நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. பயணத்திற்கு வேண்டியவைகளை தயார்படுத்திக் கொண்டிருந்தோம். பயண நாள் வேனுக்காக எம் ஜீ ரோடு லைப் ஸ்டைல் முன்னே காத்திருக்கையில் பெரிய பஞ்சு மிட்டாய் ஒன்றை வாங்கிக் கொண்டோம். தித்திப்பாய் இருந்தது. பிறகு கீது அவளுடைய ஆதர்ஷ சுட்ட சோளத்தை வாங்கி காரத்தில் ஸ் ஸ் என்று கொண்டே கொறித்தாள். மிக சரியாக ஒன்பது நாற்பதிற்கு வேன் வந்தது. நானும் கீதுவும் டிரைவருக்கு இடப்பக்கம் இருந்த இரண்டாவது சீட்டில் அமர்ந்தோம். கடைசீயாக எங்கள் மூவரை ஏற்றிக் கொண்டு வேன் பெங்களூரை விட்டு மைசூர் ரோட்டில் சென்றது. வேனில் எல்லோருமே சிறு சிறு குழுவாக இருந்தார்கள். பத்து பன்னிரண்டு வயதில் இரு சிறுவர்கள் கூட இருந்தார்கள். இந்தப் பயணத்தை ஒட்டிய அவர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைந்ததல்ல என்னுடையது.

செல்லும் வழியில் ஓரிடத்தில் நிறுத்தி இரவு உணவை ஒரு குழு முடித்துக் கொண்டது. வேன் உள்ளே ஆங்காங்கே ஆங்கிலத்தில் தோய்த்த தமிழ் குரல்கள் கேட்டது. வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சம் இருளை கொஞ்சமே கொஞ்சம் ஊடுருவி விரைந்தது. மெயின் ரோட்டில் இருந்த பாதை பிரிந்த இடத்தில் மலைவாழ்/காடுவாழ் மக்களின் சிறு வீடுகள் இருப்பது தெரிந்தது. இப்பொழுது சிறு பாதையில் வாகனம் செல்கையில் ஒரு சுமைதாங்கிக்கல் மேல் வெளிச்சம் விழுந்தது. அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்தாள். அதுவும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இங்கிருந்துதான் சுவாரசியம் துவங்கியது. அந்த பெண் வெள்ளை சேலை உடுத்தி இருக்காவிட்டாலும் கண்களுக்கு முதலில் புலப்பட்டது அவளது விரிந்த கூந்தல்தான். அந்த வேளையில் வாகனம் வருகிறதென்ற சிறு துணுக்குறல், திரும்பிப் பார்க்கும் ஆர்வம் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது வெகு விநோதமாய் இருந்தது. ஒரு வினாடி வாகனத்துள் பெரும் அமைதி நிலவியது. ஒரு குரல் கோஸ்ட் என்றது மறு நொடி எல்லோரும் ஒரு சேர சிரிக்கத் துவங்கினோம். அன்றிரவு தங்கள் தங்கள் குழுக்களுக்கு வெளியாய் எல்லோருமாய் சேர்ந்து நடத்திய முதல் கூட்டு சம்பாஷனை அந்த சிரிப்பு.

சரியாக பனிரெண்டு மணிக்கு இடத்தை அடைந்தோம், வாகனம் நின்றது. சற்று முன் மலையும் கோவிலின் நுழை வாயில் கதவும் தெரிந்தது. கைடு எல்லோரையும் வாகனத்தை விட்டு இறங்க சொன்னார்கள். பேக்கை எடுத்துக் கொள்ள வேண்டாமா என்று கேட்டோம். இப்போது எடுக்க வேண்டாம் நான் சொல்கிறேன் கீழே இறங்குங்கள் என்றார். பேக் இல்லாமல் எப்படி என்று குழம்பிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கீழே இறங்கினோம். வெளியே கும்மிருட்டு. வாகனத்தின் உள்ளே இருந்த வந்த வெளிச்சம் ஒருவர் மேல் ஒருவரை இடித்துக் கொள்ளாமல் காப்பாற்றியதே தவிர முகங்களை காட்டிக் கொடுக்கவில்லை. கைடு அவர் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு இன்னொரு கைடையும் அறிமுகப் படுத்தினார். பெயர்களைத் தவிர இருவருக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை. எங்களை, எங்களால் ஒரு வட்டம் உருவாக்கச் சொன்னார். கலைந்து கிடந்த எல்லோரும் இப்படியும் அப்படியுமாய் நகர்ந்து வட்டமானோம். ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொள்ள சொன்னார். இந்த இருட்டுல போய் என்ன அறிமுகம் என்று நான் நினைத்தேன், யாரோ கேட்டார். பரவால்ல பெயரை தெரிந்து கொள்ளலாம் என்றார். ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொண்டோம். கூட்டத்தில் ஒருவர் டார்ச்சை அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவர் மீதும் அடித்தார். அவர் முறை வந்தபோது தெரிந்தது அந்த சிறுவர்கள் அவரோடு தான் வந்திருக்கிறார்கள். அவர் பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டே இந்த சிறுவர்கள் காட்டுக்குள் தொலைந்து போனால் தயவு செய்து என்னிடம் கூட்டி வந்து விடுங்கள். ஏனென்றால் இவர்கள் என் மைத்துனர்கள் பிறகு என் மனைவிக்கு பதில் சொல்ல முடியாது. ஐ கேன்'ட் டேக் சான்செஸ் வித் தெம் என்றார். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு சற்றே பெரிய குழு க்ரைஸ்ட் காலேஜில் இருந்த வந்திருந்தார்கள். பொதுவாகவே இள வட்டங்களின் குதூகலமும் உற்சாகமும் பிடிக்கும் என்றாலும் இம்மாதிரியான இயற்கை பயணங்களில் அமைதியாக இருக்கவே விரும்புவேன். கல்லூரி மாணவர்கள் இருக்கும்போது இந்த பயணம் எப்படி இருக்கும் என்பதாய் ஒரு சிறு அசௌகரியம் தோன்றியது. தற்போது ஒருவழியாக முப்பத்தி இரண்டு பேரின் அறிமுகமும் முடிந்தது.

இப்போது கைடு நான் உங்களை ஒரு மணி நேர பயணமாக காட்டுக்குள் கூட்டி செல்லப் போகிறேன். பிறகு திரும்பி வந்து உங்கள் பைகளை எடுத்துக் கொண்டு மலை ஏறலாம் என்றார். ஒரு டார்ச் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஏதாவது புலி சிங்கம் காட்டுக்குள் இருக்குமா என்று யாரோ கேட்டதற்கு ஆமா முப்பத்திரண்டு புலிகள் இருக்கின்றன என்று கைடு சொன்னார். எல்லோரும் சிரித்தபடி வாகனத்திற்குள் ஏறி தண்ணீரும் டார்ச்சும் எடுத்துக் கொண்டு திரும்பினோம். முந்தின இரவு பெய்த மழையில் மண் இன்னுமே ஈரமாக இருந்தது. கடைசியில் யாரும் தனியாக பின் தங்கி விடாதீர்கள் தொடர்ந்து நடங்கள் என்றபடி அவர் முன்னே நடக்க அது பெரிய பாதை இல்லாததால் எல்லோரும் பிரிந்து அவர் பின்னே நடந்தோம். விறுவென நடந்து போகும்போது ஆங்காங்கே பறவையின் சிறகுலர்த்தல் சத்தம் போல் கேட்டது. கல்லூரி மக்கள் கொஞ்சம் உரக்க பேசியதாலோ என்னவோ வேறு மென் ஒலிகள் கேட்கவில்லை. தொடர்ந்து நடந்து ஒரு இடம் அடைந்தபிறகு எல்லோரும் வந்து சேரும் வரை அங்கே அமர்ந்தோம். பிறகு திரும்ப நடக்கத் துவங்கினோம். இந்த பயணத்தில் ஒரே இடத்தில் சற்று நின்று நிலவைப் பாரதத்தை தவிர பெரிதாக எதுவும் ஈர்க்கவில்லை. அங்கே ஒரு பத்து நிமிடமேனும் தனியாக எந்த சத்தமும் இல்லாமல் கும்மிருட்டுக் காட்டை பார்த்து கொண்டிருந்திருந்தால் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். திரும்பி வாகனத்தை வந்தடைந்தோம். என் ஜெர்கின் முழுக்க நனைந்து விட்டிருந்தது. உள்ளே சென்று அவர்கள் கொடுத்த ஸ்லீபிங் பாக் மற்றும் எங்களின் பாக் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து ஒரு மரத்தின் சுற்றுசுவரில் எல்லோரும் கூடும் வரை அமர்ந்தோம்.

எல்லோரும் வந்ததும் கோவில் நுழை வாயில் வழியாக மலை ஏறத் துவங்கினோம். மலையில் ஒரு கோவில் இருந்ததால் படிக்கட்டுக்கள் இருந்தது. கொஞ்ச தூரம் போனதும் என்னால் ஏற முடியவில்லை கொஞ்சம் ஓய்வெடுத்து பிறகு நடந்தோம். யாரோ ஒருவர் இன்னும் எவ்ளோ தூரம் என்று கேட்க இன்னும் ஒரு மணி நேரம் என்றார். சொல்ப கம்மி மாடி (கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க) என்றதும் சிரிப்பு வந்தாலும் ஒரு மணி நேரமா என்று தோன்றியது . சுத்தமாக நடக்க முடியவில்லை வியர்த்துக் கொட்டத் துவங்கியது. நிஜமாகவே கொட்டத் துவங்கியது. கொஞ்ச தூரம் ஏறியதும் திரும்ப என்னால் ஏற முடியாததால் ஒரு படியில் அப்படியே அமர்ந்தேன். ராஜும் கீதுவும் ப்ரூட்டி குடிக்க சொல்லிக் கொடுத்தார்கள். அது குடித்ததும் சற்றும் தெம்பு வந்ததென நம்பிக்கொண்டு ஏறக்குறைய படிகளை தாவிக் கடந்தேன். பிறகு மறுபடியும் ஓயும் நிலையில் படிகள் முடிந்தது. படிகள் முடிந்ததும் என்னால் மலைப் பாதையில் ஏற முடிந்தது. கிட்டத்தட்ட இடத்தை நெருங்கிய நிலையில் ஒரு பெரிய குன்றை ஏறிக் கடந்து உச்சியை அடைய வேண்டும். அங்கே படிகள் இல்லை பாதிப் பாதங்கள் மட்டும் பதியும் வகையில் மலையில் குழி பறித்திருந்தார்கள். எனக்கு ஏறி வந்ததில் கால்கள் திறனிழந்து நடுங்கத் துவங்கி இருந்தது. இதில் எப்படி அல்லையில் இருக்கும் கடப்பாரைகளைப் பற்றிக் கொண்டு படி கூட அல்லாத குழியில் கால் ஊன்றி நடப்பது என்று பயமாக இருந்தது. அதில் எச்சரிக்கை பலகை வேறு இருந்ததை பார்க்கையில் ஒரே ஒரு முறை கிளம்புவதற்கு முன் மகளை கடைசியாக பார்த்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. மேலே ஏறி உச்சியில் நின்று கொண்டிருந்த கைடு பார்த்து வாருங்கள் ஏறும் போது கீழே பார்க்க வேண்டாம் என்றார். முதலில் கீது ஏறினால் அவள் பின் நான் சென்றேன். ராஜின் டார்ச் கொஞ்சம் வழி காட்டியது. எனக்கு இதை ஏறுவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. இருட்டில் இடது பக்கமிருந்த பள்ளத்தாக்கு பெரிதாய் பயமுறுத்த வில்லை. எல்லோரும் உச்சியை அடைந்தோம். கைடு காலையில் நான்கு மணிக்கு கீழிறங்க வேண்டும் என்றார்.

நாங்கள் ஸ்லீபிங் பாக்கை பிரித்து விரித்தோம். ஜெர்கின் நனைந்து விட்டிருந்ததால் குளிரத் துவங்கியது. எடுத்து வந்திருந்த பிஸ்கட் கொஞ்சம் கொறித்து விட்டு கீது உறங்கினாள். நானும் படுத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு தாங்க முடியாது குளிரியது. குறுகிக் குறுகிப் படுத்தாலும் முடியவில்லை. முதலிலெல்லாம் எத்தனை முறை மழையில் நனைந்திருக்கிறேன். ஒரு முறை கல்வீராம்பாளையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பல்கலைக் கழகம் வரை நானும் காயுவும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே சென்றிருக்கிறோம். அப்போதெல்லாம் குளிர் ஒரு பொருட்டாகவே இல்லை. இப்போது தாங்க முடியும் என்று தோன்றவில்லை எழும்புக்குள் வரை குளிர்ந்தது. யாரோ பேசிக் கொண்டிருந்ததுபோல் கேட்டது. எனக்கும் கீதுவோடு பேசிக் கொண்டிருந்தால் நன்றாய் இருக்குமென்று தோன்றியது.

ஒரு கட்டத்தில் உண்மையாகவே இங்கு வந்தது பெரிய பிழை போலும் அதுவும் நேத்ராவை பார்க்காமல் வந்தது மிகப் பெரிய பிழை என்று இப்போது பார்க்காமலே போய் விடப் போகிறேன் என்றும் தோன்றத் துவங்கியது. உளவியலில் ஏதாவது கை கொடுக்குமா என்று எனக்கு மிக அருகில் திகு திகு வென்று நெருப்பு எரிவது போல் கற்பனை செய்து கொண்டேன். குச்சிகள் உடைக்கும் சத்தம் நெருப்பின் சத்தம் எனக்கு காதுக்கு உண்மையில் கேட்கத் துவங்கியது. நிஜமாகவே திரும்பி பார்த்தேன் அப்படி ஒன்றும் இருக்கவில்லை. ஏற்கனவே கைடு மழையில் விறகுக் குச்சிகள் நனைந்து விட்டிருந்ததால் நெருப்பு போட முடியாது என்றிருந்தார்.பிறகு ஒரு சில நிமிடங்கள் எதுவும் பயனளிக்கவில்லை எழுந்து திரும்பிப் பார்த்தேன். கல்லூரிக் குழு கேம்ப் பையர் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். முதன் முறையாக நல்ல வேளை இவர்கள் வந்தார்கள் என்று அவர்கள் வருகை அவ்வளவு பிடித்தது. உடனே எனக்கு அங்கே ஓடத் தோன்றியது. கீதுவை எழுப்பினேன் அவள் எழவில்லை, ராஜை எழுப்பினேன் அவனும் எழவில்லை. மறுபடியும் கீதுவை எழுப்பி எனக்கு குளிருது வா அங்கே போகலாம் என்றேன். அவள் எழுந்தால் நாங்கள் இருவரும் அங்கே சென்று நின்றோம். பாதி பேர் சுள்ளி பொறுக்கிக் கொண்டு வந்து நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.அது நனைந்திருந்ததால் மெதுவாகவே எரிந்தது. அறை மணி நேரம் அப்படியே நின்றேன் உயிர் வந்தது.

திரும்பி வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தோம். பிறகு படுத்ததும் உடனே நான்கு மணி என்று கைடு எல்லோரையும் எழுந்துக்கச் சொன்னார். நாங்கள் முதலில் எழுந்து இறங்கத் துவங்கினோம். கால்கள் இப்போது வலிக்கத் துவங்கி இருந்தது. அந்தக் குன்றை கவனமாகக் கடந்து எல்லோரும் இறங்கட்டும் என காத்திருந்தோம். எல்லோரும் வந்ததும் கீழே நடந்து வந்து வாகனத்தை அடைந்தோம். கீழிறங்குவது கடினமாக இருக்கவில்லை. பிறகு இன்னொரு பாறைக்கு வாகனத்தில் அழைத்து சென்றார்கள். அங்கே ரேப்பெல்லிங் இருந்தது. கயிறை பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக மலையில் இருந்து கீழே இறங்க வேண்டும். நிறைய நேரம் பிடிக்கும் என்பதால் நாங்கள் மூவரும் அங்கே ஒரு சிறு குட்டைக்கு அருகே செல்லலாமென சென்றோம். சுற்றிலும் மாந்தோப்புகள் இருந்தது. மாங்காய்கள் கண்ணை பறித்தது.ராஜை சென்று பறித்து வர சொன்னேன். அவன் பறித்து வந்தான். அவன் மேலேறி வந்ததும் ஒரு தாத்தா வந்து ஏதோ சத்தம் போட்டார். அதற்குள் அவன் மாங்காய்களை என் கையில் கொடுத்து விட்டு மறைச்சு வெய்யுங்க என்றான். அடப் பாவி என்று நினைத்துக் கொண்டு ஒரு குட்டி பாறைக்கு பின்னால் வைத்து விட்டு வந்து அமர்ந்தேன். அவர் கீழேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு பறித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.

கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்திருந்து விட்டு திரும்பினோம். எல்லோரும் மலை இறங்கியதும் கீத்து கடைசியாக சென்று வந்தாள். பிறகு எல்லோரும் வாகனத்தில் ஏறினோம். மிக சோர்வாய் இருந்தது. அப்படியே உறங்கத் துவங்கினோம்.

2 comments:

அன்பேசிவம் said...

சுகிர்தா! எந்த இடம்ன்னு சொல்லவேயில்லைன்னு நினைக்கிறேன். நல்ல ரைட்டப்... :-).
வெள்ளியங்கிரி மலை ஏறுவது கிட்டத்தட்ட இப்படியான அனுபவம்தான். வருடம் ஒருமுறை கிடைக்கும்.

Sugirtha said...

நன்றி முரளி. இடம் ராமநகரம். பெங்களூரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளியங்கிரி மலை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். போனதில்லை, அப்பா முன்னெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பார்கள் அங்கே கொஞ்சம் இடம் வாங்கிப் போய் செட்டில் ஆகணும்ன்னு :)