Saturday, March 6, 2010

தேநீர் வாடிக்கை

மணி அதிகாலை ஐந்தைத் தொட்டது. இன்றைக்கான என் பணி முடிந்தது. என் இருக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடி எழுந்தேன். சில வருடங்களாக இரவு வாழ்க்கை எனக்கு பழகி விட்டிருந்தது. அதன் தனிமையும் எனக்கென்று தன்னை முழுமையாய் கொடுக்கும் அதன் பரிவும் எனக்கு எப்போதுமே மிக பிடிக்கும். இப்படித் தான் இரவில் விழித்திருப்பவர்கள் எல்லாம் உணர்வார்கள் என நினைக்கிறேன். தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது. ஒரு வேளை அந்த நிசப்தத்தில் வழிகிற ஒரு வித சோகம் பிடிக்கிறதோ. இரவு விழித்திருக்கும் ஒவ்வொருவரையும் முழுமையாய் கவனிக்கிறது. பகல் முழுக்க பரவிக் கிடந்தவர்களை காட்டிலும் இரவில் விழித்திருந்து தன்னை உணர்பவர்களை நேசிக்கிறது என்றே தான் தோன்றுகிறது எனக்கு. சன்னல் வழி பார்க்கையில் தூரத் தெரியும் இருட்டு மெல்ல மெல்ல பக்கம் வருகிறது. அது நெருங்க நெருங்க என்னுள் அது என்னை ஆட்கொண்டுவிடும் என்ற ஒரு பயமும் என்னையே தொலைத்து விடுகிற ஒரு வித ஆர்வமும் ஒரு சேரவே எழுகிறது. முதலில் என்னை சுகிக்கும் இருட்டு பின் தன்னோடு அணைத்து எடுத்துப் போகிறது. நானும் ஒரு சில நிமிடங்களேனும் இருட்டோடு பயணித்து கரைந்து போகிறேன். எப்போது இருட்டை பார்த்தாலும் இந்த உணர்வே மேலிடுகிறது.

சுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசாத பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.

இன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.

என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.

8 comments:

உயிரோடை said...

எப்படி இப்படி. நம் உணர்வை எழுதுவது எளிது. ஒரு ஆண் இப்படித் தான் உணர்வான் என்று உணர்ந்து எழுதுவது மிக கடினம். அழகா கை வந்திருக்கு. ஆனா முடியாது போல இருக்கு. இன்னும் எழுதி இருக்கலாம்

அண்ணாமலையான் said...

இது புனைவா ? சுயமா? தெரியல.. ஆனா நல்ல ரசிப்புடன் இருக்கு... வாழ்த்துக்கள்.

யாத்ரா said...

ஒருவர் மனதிற்குள் புகுந்து அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்தது மாதிரி எழுதி,,,,,,,, எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல, என்ன சொல்றதுன்னும் தெரியல, இந்த எழுத்திற்குள் இருப்பவனின் மனநிலை என்னன்னு என்னால இன்னும் ஆழமா புரிஞ்சாலும் தெரிஞ்சாலும் என்னால இவ்ளோ துல்லியமா அழகா யதார்த்தமா எழுத முடியுமா தெரியல, நிறைய இடங்கள் ரொம்ப கவித்துவமா இருந்தது, அந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தற மாதிரி அவ்ளோ அழகா சித்தரிச்சிருக்கீங்க, மனசோட பேச்சுக்கள், மனசு என்ன நினைக்குது அதன் பின்புலங்கள் என்ன இப்படி எல்லாத்தையும் ரொம்ப யதார்த்தமா,

//என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது//

//என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன்.//

//அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது.//

//தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது.//

//யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி//

//அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.//

இப்படி நான் quote பண்ணா நான் முழுக்க முழுக்க பண்ணிகிட்டே இருப்பேன்.

இந்த அனுபவம், இந்த எழுத்தில் இருப்பவனோட கேரக்டர் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு சுகி, இந்த கேரக்டர் கற்பனையா நிஜமான்னு லாம் நான் கேட்க மாட்டன், நீங்களும் இங்கு சொல்ல வேண்டாம், இந்த கேரக்டர் உண்மையெனில் இந்த கேரக்டரைப் பற்றி இன்னும் தெரிந்தால் எழுதுங்களேன். அல்லது கற்பனையாகவேணும் தொடருங்க, எதுவும் கற்பனை இல்ல, எல்லா கற்பனையும் எங்கயோ ஒரு இடத்துல உண்மையா நடந்துகிட்டு தானே இருக்கு.

லேபிள் ல சிறு பயணம் னு போட்டு இருக்கீங்க. இதை பெரிய பயணமா எழுதுங்க சுகி, இந்த கேரக்டரைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கு னு தான் நினக்கறன், படிக்க ரொம்ப நிறைவா இருக்கு, என் வேண்டுகோள், இதை நீங்க தொடர்ந்து எழுதணும்.

Li. said...

உண்மைய சொல்லுங்க, நீங்க ஒரு ஆளா இல்ல பல பேரா?

Sugirtha said...

லாவண்யா, அண்ணாமலையான், யாத்ரா, Li,

உங்கள் அனைவரின் வருகைக்கும் என் நன்றி! நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த பதிவு இது. இன்னொருவரின் மன நிலையிலிருந்து என்னால் யதார்த்தமாக எழுத முடியுமா என்ற ஐயம் இருந்து கொண்டே இருந்தது. இது ஒரு சிறு முயற்சி தான். உங்கள் அனைவரின் வருகையும் கருத்து பகிர்வும் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.மறுபடியும் நன்றி!

லாவண்யா - முடியாத மாதிரி இருக்கா? பகுதி 2 போடலாமா? :)

யாத்ரா - நிச்சயம் தொடர முயற்சிக்கிறேன்.

Li - நான் ஒரு ஆளுதாங்க :)

Li. said...

:-) எங்க பதிவுக்கும் கொஞ்சம் வாங்க ... 'தட்டு ,திட்டு ' இல்லாமல் போர் அடிக்குது ...

ஆயில்யன் said...

//எப்படி இப்படி//

இதுதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்!

அருமை!

Sugirtha said...

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க ஆயில்யன்.