Saturday, October 24, 2009

இறகுகள்

நான் வசிக்கும் குடியிருப்புக்கு
அன்று அவள் புதியதாய் குடி வந்தாள்
என் இடத்திலிருந்து
அவள் வீட்டின் சமையலறை தெரிந்தது
அவளை பார்த்ததும் எனக்கு பிடித்தது
தினமும் காலையில் அவளைப் பார்ப்பேன்
ஒரு நாள் அவள் என்னை பார்த்து விட்டாள்
சில நொடிகள் என் கண்களையே பார்த்திருந்தாள்
அவள் கணவன் அலுவலகம் சென்றான்
அவள் உண்ண அமர்ந்தாள்
என்ன தோன்றியதோ எனக்கு
சுற்றிலும் பார்த்தபடியே
அவள் வீடு நுழைந்தேன்
அவளும் அனுமதித்தாள்
எனக்கும் உணவிட்டாள்
எங்களுக்கு அன்றாட வாடிக்கையானது இது
எங்கள் தனிமையை பகிர்ந்துகொண்டோம்
ஒரு நாள் இன்னொருத்தி
இவளைத் தேடி வந்தாள்
அவள் என்னை கவனிக்கவில்லை
அல்லது கண்டுகொள்ளவில்லை
தன் கழுத்தை தடவி
ஒரு கயிறை இவளிடம் காட்டி
ஆவேசமாய் ஏதேதோ சொன்னாள்
எனக்கு புரியவில்லை
அவள் சென்றதும் இவள் நிறைய அழுதாள்
எனக்கு தேற்றும் வழி தெரியவில்லை
பரிதவித்து என் பாஷையில் ஏதேதோ சொன்னேன்
அவளுக்கு விளங்கவில்லை
அங்கும் இங்கும் மாறி மாறி அமர்ந்தேன்
அவள் சேலையின் நுனியை என் மூக்கால் பற்றினேன்
என்னை நிராகரித்து
ஒரு பெட்டி எடுத்து
தன் உடைகளை நிறைத்தாள்
கிளம்புவதற்கு முன்
ஒரு முறை திரும்பி என்னை பார்த்தாள்
மறுபடி பெட்டியை திறந்தாள்
இடமாறி அமர்கையில் விழுந்திருந்த
என் இறகுகள் இரண்டை
எடுத்து வைத்து பூட்டினாள்
தெருவை கடந்து மறைந்து போனாள்

10 comments:

Maddy said...

நட்பு, பிரிவு, ஞாபக சின்னம் எல்லாம் எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள்....

மண்குதிரை said...

nice.......

nithaanamaana vasippil purikirathu

மாதவராஜ் said...

அருமை. அற்புதமான சொற்சித்திரம். பறவையின் மொழியில் எல்லாம் விளங்குகிறது. வாழ்த்துக்கள்.

Sugirtha said...

நன்றிங்க Maddy! நன்றிங்க மண்குதிரை! நன்றிங்க மாதவராஜ்!
உங்களின் பாராட்டு எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

உயிரோடை said...

இதை ஒரு சிறுக‌தையாக‌ போல‌வே வாசித்தேன். ந‌ல்ல‌ க‌விதை. வாழ்த்துக‌ள்

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க சுகிர்தா

//ஒரு பெட்டி எடுத்து
தன் உடைகளை நிறைத்தாள்
கிளம்புவதற்கு முன்
ஒரு முறை திரும்பி என்னை பார்த்தாள்
மறுபடி பெட்டியை திறந்தாள்
இடமாறி அமர்கையில் விழுந்திருந்த
என் இறகுகள் இரண்டை
எடுத்து வைத்து பூட்டினாள்
தெருவை கடந்து மறைந்து போனாள்//

உணர்வு ரொம்ப அருமையாக காட்சியாகவும் வார்த்தைகளாகவும் வந்திருக்கிறது.

ராகவன் said...

அன்பு இனியா,

அழகான கவிதை, இந்த பதிவின் வாசிப்புக்கு பிந்தைய கனங்கள், கவிதையின் வீர்யத்தை இன்னும் அடர்த்தியாக்குகிறது.

வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

Sugirtha said...

நன்றி ராகவன் உங்க வருகைக்கும் பகிர்வுக்கும்.

ராஜா சந்திரசேகர் said...

சுகி
கவிதை அழகு.
அது தருகிற வலி ஆழம்.காலம் முறித்துப் போடும் பிரியங்களின் கூட்டுத்தொகை அதிகம்தான்.

Sugirtha said...

நன்றி ராஜா!