Friday, September 11, 2009

அன்பென்ற மழையிலே

அலுவலகம் முடிந்து எல்லோரும் வெளியேறி கொண்டிருந்தார்கள். நானும் அவர்களை தொடர்ந்தேன். இரண்டு நாட்கள் விடுமுறை என்பது நினைக்கவே சுகந்தமாய் இருந்தது. மானசா என்னை அழைத்து என்ன சரண்யா எதையோ யோசிச்சிட்டே நடந்துட்டிருக்கே என்றபடியே அவளது வாகனத்துக்கு விரைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாய் உதிர்த்து விட்டு தொடர்ந்து நடந்தேன்.

எனக்கு
தனியாக நடப்பது தற்போது மிகவும் பிடித்தமாயிருந்தது. கோர்வையற்று என்னென்னவோ யோசனைகள். இன்று ஆட்டோவைத் தவிர்த்து வீடு நோக்கி நடக்கலாம் என்று முடிவு செய்தேன். எப்போதும் செல்லும் தெருவை விடுத்து இன்று மரங்களடர்ந்த நடப்பதற்கு ஏதுவான அமைதியான தெருவை தேர்ந்தெடுத்து நடந்தேன்.

அந்த தெரு பணம் படைத்தவர்கள் வாழும் தெரு என்பதால் மற்ற தெருக்களை போல் வாகனங்கள் வீட்டுக்கு வெளியில் தெருவை அடைத்துக்கொண்டு இருக்கவில்லை. பெரிய பெரிய வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருந்தது. மனதில் நெருக்கியடித்துக் கொண்டிருந்த சிந்தனைகளுக்கு கொஞ்ச நேரம் விடுதலை கொடுத்து ஒவ்வொரு வீட்டின் அமைப்பையும் ரசித்தபடி நடந்தேன். இந்த வீடுகளை ரசிக்க மட்டுமே முடியுது யாராவது வாழ்கிறார்களா தெரியவில்லை.

மரங்கள் அடர்ந்திருந்ததாலும் மாலை வேலையானதாலும் குளுமை சற்று அதிகமாகவே இருந்தது. பெங்களூரில் எனக்கு மிகவும் பிடித்த விசயங்களில் இந்த சீதோஷணமும் ஒன்று. எப்போதுமே நீண்டதூரம் நடப்பதற்கு ஏதுவாய் ஒரு ரம்மியமான குளுமை. பிறகு அந்த குளுமையை கொடுக்கும் இந்த மரங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணப் பூக்களை தருகிறது. அவை என்னை வியக்க வைக்கிறது. இங்கு ஆப்பிரிக்கன் டியூலிப் என்ற வகை மரங்கள் நிறைய இருக்கிறது. ஆரஞ்சு வண்ணத்தில் அகல அகலமான பூக்களை தன்னை சுற்றி பரப்பி வைத்திருக்கிறது. பெங்களூர் வந்த புதிதில் இந்த மரம் என்னை ஆச்சர்யப் படுத்தியது. என்னோடு வசுதா வந்திருந்தால் ஒவ்வொரு மரத்தின் பெயரையும் கேட்டு என்னை துளைத்திருப்பாள். அவளுக்கு மரங்களின் பெயர்களையும் அதன் பூர்வீகத்தையும் அறிந்துகொள்வதில் அப்படி ஒரு விருப்பம்.

இப்போது எனக்கு என் ஊரில் என் வீட்டை ஒட்டி இருக்கும் சரக்கொன்றை மரம் நினைவில் ஆடியது. அப்படியே அமுதனும் என் நினைவில் வந்தார். அவருக்கு மிகவும் பிடித்த மரம் அது. சரண்யா இந்த சரம் சரமான மலர்கள் என் கண்களுக்குள் மஞ்சள் மழை பொழிகிறது என்பார். அவர் பேசக் கேட்பதே ஒரு ஆனந்தம் எனக்கு. ஒவ்வொரு விஷயத்தை பற்றிய அவரது ஆழமான பார்வையும் அதை பகிர்ந்து கொள்ளும் விதமும் என்னை மணிக்கணக்கில் கட்டி போடும். அடுத்த வாரம் ஊருக்கு போகணும் என்று எண்ணியபடியே எதிர்பட்ட பூங்காவுக்குள் சென்றேன். அங்கே அமர்ந்து கைய்யோடு கொண்டு வந்திருந்த பிரபஞ்சனின் புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.

2 comments:

யாத்ரா said...

நல்லா இருக்கு சுகிர்தா, தொடருங்கள்.

Sugirtha said...

நன்றி யாத்ரா!