Tuesday, December 6, 2011

பயணங்கள் முடிவதில்லை - 2

சமீபத்தில் பணி நிமித்தமாக ஓரிடம் சென்றபோது அந்தக் குழுவில் பாலா என்ற ஒருவரை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களை குறித்த பத்து நல்ல விஷயங்களை கூறி தங்களை விற்க வேண்டும். அதாவது நேர்முகத்தேர்வில் எப்படி ஒருவர் தன்னை பற்றிய strengths ஐ கூறி விற்பாரோ அது போல. பாலாவின் முறை வந்தபோது அவர் என்னை ஒரு பேனாவை போல சட்டை பையில் குத்திக் கொண்டு எங்கும் எடுத்து செல்லலாம் என்றார். என்னிடம் எந்த நிபந்தனைகளும் இல்லை, I am very adaptable என்றார். 'ஒரு பேனாவை போல' எத்தனை அழகாய் சொல்லி இருக்கிறார் என்று நினைத்தேன். அப்படியான என் பேனா என் தோழி ஸ்ரீ http://shriprajna.blogspot.com/ அவள் ஒரு பீனிக்ஸ். அவள் ஒரு பறவை. எனக்கு ஊர் சுற்ற மிக சரியான ஒரு கம்பானியன். அவளோடு போன ஒரு அற்புத பயணத்தை இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன்.

என்னை ஆட்கொள்ளும் பயணங்களின் முக்கிய அம்சம். எங்கு போகிறோம் என்று தெரியாமலே, எந்த எதிர்பார்ப்பும் அற்று கிளம்பி, மனதுக்கு தோன்றிய இடத்தில் எல்லாம் புகுந்து பார்த்து வர வேண்டும். அப்படியான ஒரு பயணம் தான் இது. முதல் நாள் இரவு வரை வேறோர் இடம் செல்ல நினைத்திருந்து காலையில் எழுந்ததும் ஒரு மலைப் பிரதேசத்தின் பெயரை சொல்லி இங்கு செல்லலாமா என்றேன். அவளும் ஒரு நொடியும் யோசியாமல் போகலாம் என்றாள். ஏன் அந்த இடம் மனதிற்கு வந்தது என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க intuitive trip.

பயணங்களின் போது எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், ரோட்டோர டீ கடை. அதுவும் காலை வேளையில் மங்கிய வெளிச்சத்தில் ஏதாவது பாடல் கேட்டுக் கொண்டே விழித்திருக்கும் டீ கடைகள். மலைப்ரதேசம் துவங்கும் முன்பே அப்படி ஒரு ரோட்டோரக் கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டு அது நல்லா இருந்தது என்று கூறி விட்டு கிளம்பினோம். எப்படியோ வழி கேட்டு கேட்டு ஒரு வழியாக அந்த மலைபிரதேசத்தை நெருங்கத் துவங்கினோம். மலை ஏறத் துவங்கிய முதல் கால் மணிநேரத்திலேயே ஒரு பாம்பு அந்தப் பகுதியின் குளிருக்கு இதமாய் நடு ரோட்டில் அப்போதுதான் முளைத்த இள வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது. எனக்கு பாம்புகள் மிக பயம் என்பதால் பாம்பு என்று கத்தி நான் அனிச்சையாய் கால்களை தூக்கிக் கொண்டேன். அவளும் பயந்து எங்கே எங்கே என்று சற்றே நிதானித்து பிறகு மீண்டும் தொடர்ந்தாள். வண்டி அதன் மேல் ஏறிவிட்டதோ என்று பயந்து திரும்பி பார்த்தேன். அது ஷேமமாக நெளிந்து நெளிந்து ரோட்டின் அந்தப் பக்கம் சென்றது. இந்த அதிர்வு அடங்கா இன்னும் சற்று தூரத்தில் இன்னொரு பாம்பு அதே போல. எனக்கு இந்த பயணம் திகிலாய் இருந்தது. அவள் தான் பாம்பை பார்கவில்லை பார்க்கணும் என்றதும் திரும்ப வந்து அதைப் பார்த்துப் போனோம். அதே இடத்தில் சற்றும் அசையாமல் இருந்தது இரண்டாவது பாம்பு. அதற்கு பிறகு சற்று நேரத்திற்கு கிடந்த குச்சிகளெல்லாம் எனக்கு பாம்பாய்த் தெரிந்தன. ரோட்டின் மேல் நீண்டிருந்த கிளைகளிளெல்லாம் பாம்புகள் தான் நெளிந்தன. அங்கே இருந்து மேலே விழுமோ என்ற எண்ணம் தேவை இல்லாமல் எழுந்தது.

ஆனால் அதையே நினைத்துக் கொண்டிராமல் செய்ய, வழி இன்னும் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருந்தது. மலை என்றாலே குரங்குகள் இருக்கனும் இல்லையா, அதற்கு சற்றும் முரணாமல் இப்போது பக்கத் தடுப்பு சுவர்களெல்லாம் நிறைய குரங்குகள் தென்பட துவங்கின. இந்தக் குரங்கு குட்டிகள் தான் எத்தனை அழகு நான் வியந்தேன். அது அத்தனை அழகாக நம்மை immitate பண்ணிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு செல்லயிலேயே பல வண்ணத்து பூச்சிகள் வழியோரம் முளைத்திருந்த சிறு சிறு மலர்களில் அமர்ந்து அமர்ந்து சென்றன. கொஞ்சம் நிதானித்து அதன் வண்ணங்களை பார்த்து கொண்டே சென்றோம். இந்த பயணத்தின் இன்னொரு முக்கிய அம்சம் நினைத்த இடத்தில் நிறுத்த முடிவது. இது ஒரு புதிய உலகம். இதுவரை நான் அறிந்திராத உலகம். இங்கே அழைத்து வந்த என் தோழிக்கு நிறைய நிறைய நன்றிகள் என் மனம் சொல்லிக் கொண்டது. நான் அவளிடம் சொன்னேன் இந்த இடத்தை விட அருமையான விஷயம் உன் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

இதோ இப்போது தான் கொண்டை ஊசி வளைவுகள் ஒவ்வொன்றாய் முளைக்கத் துவங்கின. அந்த வளைவுகளை கடக்கும் போதெல்லாம் கீழிறங்கும் வாகனங்களின் வேகம் அச்சமூட்டுவதாய் இருந்தது. சமீபத்தில் பெய்திருந்த மழையில் சீர் குலைந்திருந்த இடங்களெல்லாம் இப்போது சீர் செய்யும் வேலை ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று தூரம் சென்றதும் தேயிலை தோட்டத்தின் ஊடே ஒரு சிறு நீர் ஊற்று வழிந்து கொண்டிருந்தது. அதை ஒட்டி ரோட்டோரமாய் ஒரு சிறு கோயிலும். அங்கே ஒரு சிறு பாலம் அதன் ஓரமாய் வண்டியை நிறுத்தி, மேடேறி தோட்டத்தின் அடிவாரத்தில் இருந்த சிறு மேட்டில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தோம். கண்ணுக்கு எட்டிய இடமெல்லாம் தேயிலை தோட்டங்களும் ஊடே சில்வர் ஓக்குகளுமாய் இருந்தது. அப்படியே ஆழமாய் ஒரு முறை மூச்சை இழுத்துக் கொண்டேன். பச்சை தேயிலை மணம். ஒரு அறை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு திரும்ப தொடர்ந்தோம்.

முழுதுமாய் வேறு உலகத்திற்கு சென்றதை இன்னும் இன்னும் பூரணமாக நான் உணர்ந்தேன். வழியெல்லாம் கூடவே இப்போது மஞ்சள் பூக்கள். கொடி போல் இருந்த அந்த செடி, மலை சரிவை முழுதாய் ஆக்கிரமித்து பூத்துக் குலுங்கியது. சூரிய காந்தியை ஒத்திருந்த அது ஏதோ ஒரு காட்டுச்செடி என அறிந்தோம்.







அங்கங்கே தோட்டத்தின் ஊடே நீர் வடிந்து கொண்டிருந்தது.





இப்போது இடப் பக்கம் பார்க்கையில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு. பக்கசுவரை தாண்டி விழுந்தால் ஒரெலும்பு கூட தேறாது என்று நினைப்பு ஓடியது. அப்போது தொற்றிய பயம் பயணத்தை இன்னும் திகில் நிறைந்த சுவாரஷ்யம் ஆக்கியது. இதையெல்லாம் மீறியும் பள்ளத்தாக்கின் அமானுஷ்யம் ஒரு நிறைவான அழகாய் இருந்தது.











பார்த்து நிமிர்கையில் கவனம் யானைகள் சாலையை கடக்கும் பகுதி என்று ஒரு எச்சரிக்கை போர்டு வைக்கப் பட்டிருந்தது. சற்று முன் இருந்த செக் போஸ்டில் நிறுத்தி வரி செலுத்திவிட்டு யானை வருமா என்று கேட்டோம். வரி வசூலகர் மிக இனிமையாக பேசினார். இப்போது வராது நேற்று தான் ஒரு குட்டி யானையோடு நாலைந்து யானைகள் வழியில் நின்று இருந்தது. நாம் எதுவும் செய்யாவிட்டால் அது எதுவும் செய்யாது என்றார். பிறகு தனக்கு முன்னே இருந்த இடத்தை காட்டி இங்கே தான் பைசன்கள் காலையில் மேயும் என்றார்.

மறுபடியும் மேலேறத் துவங்கினோம்.வழியிலிருந்த சிறு சிறு ஊருகளை கடந்து மேலேறிக் கொண்டிருந்தோம். நிறைய நிறைய அழகு தாண்டி ஒரு வியூ பாய்ண்டை அடைந்தோம். அதில் மேலேறி சற்று நேரம் நின்று பார்த்து கீழிறங்கி செல்ல முயல்கையில் இன்னுமொரு வாகனத்தில் வந்திருந்த சில ஆண்கள் தங்களுக்கு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சொல்லுங்க பாக்காம போகப் போறாங்க என்றார்கள். பிறகு ஒருவர் இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம் கீழிறங்கி பாருங்க ஒரு பள்ளத்தாக்கு இருக்கு. ரொம்ப நல்லா இருக்கும் என்றார். எங்களுக்கு மிகுந்த தயக்கமாய் இருந்தது. எங்கே பார்த்தாலும் ஆண்கள் மட்டுமே. எங்கள் தயக்கத்தை உணர்ந்து அவரே ஒரு பாமிலி கூட போயிருக்கு ஸேப் தான் போகலாம் என்றார். நாங்க அந்த வழியில் இறங்கத் துவங்கினோம். கீழே போக போக சட்டென இறங்கும் பள்ளம், கண்ணெட்டும் தூரத்தில் ஒரு அருவி, கீழே தெரிந்த கிராமங்கள். அத்தனை அழகு அழகு அழகு. அங்கே ஒரு செக்யூரிட்டி இருந்தார். நீங்கள் இங்கேயே இருப்பவரா என்றதற்கு ஆமாம் என்றார். கார்ல வந்தீங்களா கேட்டார் நாங்கள் டூ வீலேரில் வந்தோம் என்றதும் ஆச்சர்யத்தில் சட்டென முகம் மலர அப்படியா என்றார். நாங்கள் அங்கேயே அமர்ந்தோம். சற்று நேர அமைதிக்குப் பிறகு I am the happiest person in the world என்று கத்த வேண்டும் என்று சொன்னேன். நீ சொன்ன பிறகு தான் நாம் இங்கிருந்து கிளம்பலாம் என்றாள் ஸ்ரீ. எனக்கு சங்கோஜமாக இருந்தது. சற்று நேரத்தில் வெளிநாட்டு தம்பதி தங்கள் காரோட்டியோடு வந்திருந்தார்கள். ஹலோ என்றேன். அவர் மைக்கல் என்று தன்னையும் லூயிஸ் என்று மனைவியையும் அறிமுகப் படுத்தினார். பிறகு என்னோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறாயா என்றார் நானும் சரி என்று எடுத்துக் கொண்டேன். பிறகு இந்தியன் டிரைவிங் பார்த்து பயந்ததை சொன்னார். கூட வந்த டிரைவர் இதுல தாம்மா நம்ம ஆளுங்க பேரக் கெடுத்துக்கறாங்க என்றார். நான் மெதுவாதாம்மா போவேன் ஏன்னா இவங்க போய் நெட் ல எழுதிட்டா என் பேரு கெட்டு போயிடும் என்றார். சற்று நேரம் பேசி விட்டு அவர்கள் சென்ற பிறகு இன்னொரு வட இந்திய குடும்பம் வந்தது. இப்போது  ஸ்ரீ எழுந்து குன்றின் உச்சியில் நின்று கொண்டு 'I am the happiest person in the world' என்று சத்தமாய் சொன்னதும் நாங்கள் கீழிறங்கத் துவங்கினோம்.

7 comments:

shri Prajna said...

மலை ஒரு அற்புதம் என்றால்,மலைப் பயணம் ஒரு குதூகலமான சந்தோசம்.கடவுள் துணையோ வேறு ஒன்றோ பயணத்தின் போது நல்லவர்களாகவே நல்லவைகளாகவே பார்க்கமுடிவது கூடுதல் சந்தோசம்.இப்பவும் சொல்றேன் “im the happiest person in the world" bcoz என் நண்பர்களே என் சந்தோசம்..நல்லா எழுதிருக்கே சுகி..ஆமா பயணங்கள் முடிவதில்லை..

Sugirtha said...

Me too ஸ்ரீ :-)

Unknown said...

நான் முதன் முதலில் இலங்கையின் நுவரெலியாவிற்குப் போயிருந்தபோது இதே அழகான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டேன்... மழை தூறும் சாலைகளில் மலைமேல் பயணிப்பது வாழ்வின் உன்னதமான தருணங்களிலொன்று.... அழகான பதிவு... படங்கள் எடுத்து இணைத்திருந்தால் இன்னும் அழகாகியிருக்கும்...

Sugirtha said...

நன்றி சுரேந்தர் தங்களின் வருகைக்கும், கருத்துக்கும். என்னால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை. கைபேசியில் எடுத்த சில புகை படங்களை இங்கே இணைத்துள்ளேன்.

Unknown said...

கைபேசியில் எடுத்தாலும் படங்கள் அழகாகவே இருக்கின்றன!! படங்களை இணைத்ததற்கு நன்றி சுகிர்தா!!

அன்பேசிவம் said...

//நாங்கள் இருவரும் புறப்பட முடிவு செய்தவுடனே, ஏற்கனவே திட்டமிட்டபடி எங்களுடன் வரவிருந்த ஒரு நண்பரை கழற்றிவிட்டுவிட்டு கிளம்பினோம்//

இந்தக்கட்டுரையில் இந்தவரி மிஸ்ஸாயிடுச்சு போலவே? :-)

Sugirtha said...

முரளி, இதானே வேணாங்கிறது, எங்களப் பாத்தா கழட்டி விடற மாதிரியா இருக்கு? :-)