Tuesday, June 25, 2013

ஹாலந்த் - 4

இன்று அலுவலகத்தில் ஏதோ யோசனையில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். ஹேய்  மேல பறக்காதடி கொஞ்சம் கீழே இறங்கு என்றாள் பாரதி. ஐயோ பாக்கலடா என்று அவள் பக்கம் சென்று அணைத்துக் கொண்டு, அவளின் மேடிட்ட வயிற்றை தடவிக் கொண்டே எப்படி டா இருக்கே என்றேன். ம்ம் நல்லா இருக்கேன், அப்றோம் என்றாள். அப்றோம் என்ன அப்டியே போகுது என்றேன். நீ பாக்கதான் டி ஹோம்லி ஆனா என்று இழுத்து சிரித்தாள். நானும் அவளைப் போலவே ஹோம்லி ஆனா என்று இழுத்து, ஆனா என்ன பெரிய கேடியா என்று முடித்தேன். செம அட்வென்ச்சரஸ் என்றாள். யாரும் என்ன முதல்ல ஹோம்லி ன்னு  தான் நினைப்பாங்க கொஞ்ச நாள் போனா கேடின்னு தெரிஞ்சுக்குவாங்க என்றேன். கொஞ்ச நாள் எல்லாம் இல்லே மூணு நாள்லயே தெரிஞ்சுதே நீ சரியான திருடி என்றாள். நான் சிரித்துக் கொண்டேன். நான் எங்க அப்பாகிட்ட சொன்னேன் உன்னைப் பத்தி என்றாள். என்ன சொன்னே என்றேன். நெதர்லாந்த்ல எப்படி சுத்தினோம் அதெல்லாம் சொன்னேன் என்றாள். திரும்பவும் நினைவில் அந்த கணத்துக்கு போனவளாக நம்ம நைட் சுத்தும்போது எதாச்சும் ஆயிருந்தா என்று கேட்டு நிறுத்தினாள். அதெல்லாம்  நெதர்லாந்த்ல நம்மளவிட அழகான பொண்ணுங்க நிறைய இருக்காங்க அதனால நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்க என்றேன். இருந்தாலும் பணம் கேட்டிருந்தா என்றாள், கேட்டா என்ன கொடுக்க வேண்டியது தான் என்றேன்.ம்ம் நீ சொல்லுவே டி என்று விட்டு என் கையில் இருந்த வளையலை பார்த்து நல்லா இருக்கு டா தங்கமா என்றாள். இல்லை உனக்கு வேணுமா என்றேன். ம்ம் தங்கத்துல வாங்கி தா என்றாள்.அதனாலென்ன வாங்கிட்டாப் போச்சு என்று சிரித்தேன். இப்படியாக தொடர்ந்த சம்பாஷனை என்னுடைய சோம்பேறித்தனத்தால் நான் எழுதாமல் விட்டுப் போன நெதர்லாந்த் அனுபவத்தின் மிச்சத்தை நினைவில் கொணர்ந்தது. அப்படியே சைத்ராவையும்! எனக்கு பாரதியை பார்க்கும்போதெல்லாம் நெதர்லாந்தும் சைத்ராவும் நினைவுக்கு வருகிறார்கள். நவம்பரில் வேறொரு தேசத்தில் எங்களோடு சுற்றிய சைத்ரா ஏன் டிசெம்பர் முப்பத்தி ஒன்னு அதிகாலை தூக்கில் தொங்கினாள்? சொல்லப்போனால் அந்த அதிர்வை கடக்கத்தான் இதை எழுதத் துவங்கினேன். மீண்டும் எழுதத் துவங்குகிறேன், இப்போது அந்த அதிர்வை கடந்து விட்டேன் ஆனாலும் அந்த நாட்கள் என்னை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

முதல் இரண்டு நாள் நான் சைத்ரா லீனாவுடன் தான் இருந்தேன் என்றாலும் இரண்டாவது நாள் பின்பகுதியில் நான் பாரதி மற்றும் பிரமிளாவுடன் நெருக்கமானேன். அவர்கள் எங்கும் என்னை அழைத்துக் கொண்டு சென்றார்கள். லீனாவும், சைத்ராவும் தனித்தியங்குபவர்கள்
 எனவே நான் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. பிரமிளா பச்சரிசி பல்லழகி, சிரிக்க சிரிக்க பேசினாள். எனக்கு பாரதி, பிரமிளா இருவரையும் பிடித்துப் போனது. இரண்டாவது நாள் மதிய உணவுக்கு அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு லிப்ட்டில் நுழைந்தபோது அவர்களிடம் சொன்னேன் எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுருக்கு, உங்க கூட இருக்கும்போது கம்பர்ட்டபிளா  இருக்கு என்றேன். அவர்கள் அப்படியா என்று கேட்டு சிரித்தார்கள். நான் அப்படி சொன்ன பிறகு அவர்கள் என்னிடம் கம்பர்டபிளாக இருந்ததாக தோன்றியது. உணவை முடித்துக் கொண்டு மேலே வந்தபோது பாரதி எங்களை அறைக்குள் அழைத்தாள். அலுவலக நண்பர்களை குறித்தும் எங்கள் வேலையை குறித்தும்  பேசிக்கொண்டிருதோம். பிறகு பேச்சு திசை மாறி, பாரதி எங்களிடம் வாழ்கையிலேயே இப்போது தான் முதல் முறை தனியாக இருக்கிறேன், தனியா இருப்பது எனக்கு மிகுந்த பயத்தை கொடுக்கும் அதனால பாரு என்று கட்டிலை சுற்றிலும் செருப்பும்,  கடவுள்களையும் வைத்திருக்கிறேன் என்று சுட்டிக் காட்டினாள். நானும் பிரமிளாவும் அதை கேட்டு சிரித்தோம். தனிமை கொடுக்கும் சுதந்திரத்தை நேசிப்பவள் நான்,ஆனால் அது பாரதிக்கு பயத்தை கொடுக்கிறது என்கிற யோசனை என்னுள் ஓடியது. இப்படி ஏதேதோ கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, நானும் பிரமிளாவும் பயிற்சி அறிமுகத்திற்கு நேரம் ஆகிறது என்று சொல்லி விடை பெற்று அறைக்கு சென்று உடை மாற்றி கிளம்பி கீழே வந்தோம்.

அது பிரமாண்டமான அரங்காக இருந்தது. எல்லோரும் காமெராவும் கையுமாக இருந்தார்கள்.பணியாளர்களுக்காக இவ்வளவு மெனக்கெடுவதை எங்கள் கம்பனியில் தான் நிறையப் பார்கிறேன்.  அறிமுக விழா ஒரு இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த பயிற்சியின் நோக்கமே உங்களை உங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிப்பது என்றார்கள். நீங்கள் உங்கள் கம்போர்ட் ஜோன்னிலிருந்து வெளியே வந்து மற்றவர்களோடு நெட்வொர்க் செய்யவேண்டும் என்றார்கள். அதனால் வேறு வேறு தேசத்திலிருந்து வந்த இருபத்தி ஐந்து நபர்கள் கொண்ட வகுப்புகளை அமைத்திருக்கிறோம். விழா முடிந்து காக்டெயில் பார்ட்டி அதை தொடர்ந்து டின்னெர் இருக்கும், டின்னெர் முடிந்து வெளியே வரும்போது நீங்கள் எந்த வகுப்பு என்று நோட்டீஸ் போர்ட்டில் பாருங்கள் என்றார்கள். காக்டெயில் பார்டியில் அறிமுகம் அற்றவர்களோடு அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். இந்த நெட்வொர்கிங் என்கிற விஷயம் எனக்கு எப்போதுமே மிகவும் போலியாக தோன்றும். மேலும் இன்னொருவரிடம் பழக ஒருவரை ஃபோர்ஸ் செய்வது எத்தனை அபத்தம். ஒரு கூட்டத்தில்/சபையில் இருக்கும்போது முதலில் எப்போது வெளியே செல்லலாம் என்று தான் இருக்கும். அதனாலேயே நான் அப்படியான நிகழ்வுகளை தவிர்த்து விடுவேன். ஆனால் நான் இப்படி எப்போதும் ஒரே மாதிரி இருப்பது எனக்கு போர் அடிப்பதாலும், அலுவலகத்தில் வேறு வழி இல்லாமல் இந்த ஈவண்டில் மாட்டிக் கொண்டதாலும், இந்த நெட்வொர்கிங்கயும் தான் முயற்சித்து பார்க்கலாம் என்று நினைத்தேன்.

அரங்கை விட்டு வெளியே வரும்போது ஹோட்டலின் கீழ் தளத்திலிருந்த  இருந்த பார் நிரம்பி வழிந்தது. கூட்டத்தோடு கூட்டமாக பாரினுள் நுழைந்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. அங்கே எங்கள் முன் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் எங்களிடம் பேச முன் வந்தார். பாரதியும் அவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் என்பதால் அவர் அவளிடம் திரும்பி திரும்பி ஏதேதோ கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாரதியின் காதில் என்னடா ரொம்ப ஆர்வமா இருப்பாரு போல என்று கிசுகிசுத்தேன். அவள் என்னை ஏதோ சொல்லி திட்டினாள். வரிசை முன்னேறி பார்டெண்டெரிடம் பாரதியும் நானும் வைட் வைனை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். பாரதி எவ்வளவு வற்புறுத்தியும் பிரமிளா குடிப்பதில்லை என்றாள். அவளுக்கு என அவள் ஒரு கோக்கை வாங்கிக் கொண்டாள். பாரிலிருந்து வெளியே வந்து நின்று பார்த்தால் யாரும் அறிமுகம் அற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தது போல தெரியவில்லை. எல்லோரும் தத்தம் நண்பர்களோடு தான் இருந்தார்கள்.

 கொஞ்ச நேரம் சுற்றிலும் பார்த்துவிட்டு பாரதி என்னிடம் நம்ம பெட் வெச்சுக்கலாம் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள ஒரு அஞ்சு பேர் கிட்ட பேசிடனும் சரியா என்றாள். எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருந்ததால் சரி என்றேன். பிரமிளா சரியான லூசுங்க என்பது போல சிரித்து அங்கேயே நின்று கொண்டாள். நாங்கள் இருவரும் வேறு வேறு திசையில் சென்றோம். தனியாக யாரேனும் நின்றிருக்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹூம் அப்படி யாரையும் காணோம் வேறு வழி இல்லாமல் பேசிக் கொண்டிருந்த இரண்டு வெளி நாட்டு தோழிகளுக்கு இடையில் புகுந்து ஹாய் என்றேன். அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்து ஹாய் என்றார்கள். இருவரும் சொன்னதால் அதை ஒண்ணுன்னு கணக்கில் எடுத்துக்கவா இல்லை அது ரெண்டாகுமா என்று யோசித்தேன். அப்படி இப்படி எப்படியோ ஐந்து சேர்ந்ததாக நியாபகம். திரும்ப பிரமிளா நின்றிருந்த இடத்திற்கு வந்தேன். பாரதியும் திரும்பி வந்தாள். ஸ் ஸ் முடியலடா யாரும் முகம் கொடுத்தே பேசல என்றாள். ஆமா ஒரு மாதிரி தான் பார்த்தாங்க என்றேன். என் கையில் வைட் வைன் அப்படியே இருந்தது. ஏன் குடிக்கலயா என்றாள். இல்ல பிடிக்கல என்றேன். சரி உன்னோட டேபிள்க்கு எடுத்துட்டு போ அதான் டேபிள் மானேர்ஸ் என்றாள். நான் பிரமிளாவிடம் திரும்பி அப்படி ஒன்னு இருக்கா என்ன என்றேன். அவள் தெரியாது எனவே அங்கேயும் இங்கேயும் நடந்து கிளாஸ்களை வாங்கி கொண்டிருந்தவரை அழைத்து  க்ளாஸை திரும்ப கொடுத்தேன். நான் சொல்றத சொல்லிட்டேன் எனக்கென்ன உன் இஷ்டம் என்றாள்.

உணவு மேஜையிலும் தெரிந்தவர்கள் இருந்துவிடாதபடி  சிரத்தையாக பிரித்திருந்ததால் எங்களுக்கு வெவ்வேறு உணவு மேஜைகள் வழங்கப் பட்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டே கூடத்துள் நுழைந்து எங்கள் உணவு மேஜைக்கு செல்வதற்காக பிரிந்தோம். எனக்கு அறியாதவர்களோடு அமர்ந்து சாப்பிட கொஞ்சம் உதறலாக இருந்தாலும், எங்கேயோ ஒரு மூலையில் அது கொஞ்சம் பிடித்தும் இருந்தது. அங்கே பெரும்பாலும் பாரதி சொன்னதுபோல் மக்கள் தங்கள் ட்ரிங்க்கை கையில் வைத்திருந்தார்கள். அட டா அவள் சொன்னதை கேட்டிருக்கலாமே என்று நினைத்தேன். நான் என்னுடைய இருக்கையை தெரிவு செய்து அமர்ந்தேன். என் வலப் பக்கத்தில் இருந்தவர் என்னை வரவேற்று என்னுடைய பெயர் மற்றும் நாட்டை தெரிந்து கொண்டார். என்னுடைய இடது இருக்கைகள் இரண்டு காலியாக இருந்தது. அதற்குள் என் கையில் எதுவும் இல்லாததை கவனித்த பணிப்பெண் கேன் ஐ கெட் யூ எ ட்ரிங்க் என்றாள். நான் நோ தேங்க்ஸ் என்றேன். இந்த பதிலை சற்றும் எதிர்பாராதவள் போல ஆர் யூ ஆன் எ ஸ்பெஷல் டயட் என்றாள். நோ ஐ டோன்ட் ட்ரிங்க் என்றேன். அவள் என்னை ஒரு விதமாக பார்த்துக் கொண்டு சென்றாள். எனக்கு நேர் எதிர்புற இருக்கையில் ஒரு இத்தாலியனும், அவனுக்கு அருகில் லி என்ற சீனப் பெண்ணும் அமர்ந்திருந்தனர். லியும், இத்தாலியனும் ஏதோ முன்னேயே அறிமுகமானவர்களைப் போல பேசி பழகிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவனை பார்த்துக் கொண்டிருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. அவன் பேசும் விதம், அவன் மானரிசங்கள் பிடித்திருந்தது. ஓரிரு நிமிடங்களில் ஒரு பெண்  வந்து என்னருகில் அமர்ந்தாள், தொடர்ந்து இன்னொருவன் வந்து அவளருகில் அமர்ந்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டோம். அவள் ஹங்கரி என்று தெரிந்தது அவன் சொன்ன நாட்டின் பெயர் பிடிபடவில்லை. அவள் ஹங்கேரி என்றதும் வி ஆர் நெய்போர்ஸ் அங்கேயும் இங்கேயும் என்று சிரித்தான். அவளும் சிரித்தாள். அவனுடைய நாடு ஹங்கரியின் அண்டை நாடாக இருக்க வேண்டும் என புரிந்து கொண்டேன். ஆனால் ஏனோ அவள் அவனை விடுத்து என்னோடு பேசுவதில் தான் ஆர்வமாக இருந்தாள். அவள் பேசிக் கொண்டே இருந்தது எனக்கு ஒரு வகையில் வசதியாக இருந்தது. என்னிடம் அவள் எங்களுக்கு அண்டை நாட்டோடு சுமுகமான உறவில்லை என்றாள். எல்லா இடத்திலும் அப்படித்தான் என்றேன் நான். அவளின் அந்த கருத்துக்கு/எண்ணத்துக்கு ஏன் என்று ஏதோ விளக்கமும் கொடுத்தாள். நான் அப்படியா என்று கேட்டுக் கொண்டேன். அவளுக்கு இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய இருந்தது. அவள் மிதமாக குடித்துக் கொண்டே என்னோடு பேசிக் கொண்டிருந்தாள். எங்களை வெட்டி வேறு ஒரு பணிப்பெண் திரும்பவும் அதே கேள்வியை என்னிடம் கேட்டதும்  விட்டால் போதும் என்று ப்ளீஸ் கெட் மீ எ கோக் என்றேன். இரவு பன்னிரண்டு மணி வரை டின்னெர் நீடித்தது.


...இன்னும்

2 comments:

shri Prajna said...

very interesting da.. சீக்கிரமா எழுது... wait panitrukken....

Sugirtha said...

sari da :)