Saturday, October 24, 2009

இறகுகள்

நான் வசிக்கும் குடியிருப்புக்கு
அன்று அவள் புதியதாய் குடி வந்தாள்
என் இடத்திலிருந்து
அவள் வீட்டின் சமையலறை தெரிந்தது
அவளை பார்த்ததும் எனக்கு பிடித்தது
தினமும் காலையில் அவளைப் பார்ப்பேன்
ஒரு நாள் அவள் என்னை பார்த்து விட்டாள்
சில நொடிகள் என் கண்களையே பார்த்திருந்தாள்
அவள் கணவன் அலுவலகம் சென்றான்
அவள் உண்ண அமர்ந்தாள்
என்ன தோன்றியதோ எனக்கு
சுற்றிலும் பார்த்தபடியே
அவள் வீடு நுழைந்தேன்
அவளும் அனுமதித்தாள்
எனக்கும் உணவிட்டாள்
எங்களுக்கு அன்றாட வாடிக்கையானது இது
எங்கள் தனிமையை பகிர்ந்துகொண்டோம்
ஒரு நாள் இன்னொருத்தி
இவளைத் தேடி வந்தாள்
அவள் என்னை கவனிக்கவில்லை
அல்லது கண்டுகொள்ளவில்லை
தன் கழுத்தை தடவி
ஒரு கயிறை இவளிடம் காட்டி
ஆவேசமாய் ஏதேதோ சொன்னாள்
எனக்கு புரியவில்லை
அவள் சென்றதும் இவள் நிறைய அழுதாள்
எனக்கு தேற்றும் வழி தெரியவில்லை
பரிதவித்து என் பாஷையில் ஏதேதோ சொன்னேன்
அவளுக்கு விளங்கவில்லை
அங்கும் இங்கும் மாறி மாறி அமர்ந்தேன்
அவள் சேலையின் நுனியை என் மூக்கால் பற்றினேன்
என்னை நிராகரித்து
ஒரு பெட்டி எடுத்து
தன் உடைகளை நிறைத்தாள்
கிளம்புவதற்கு முன்
ஒரு முறை திரும்பி என்னை பார்த்தாள்
மறுபடி பெட்டியை திறந்தாள்
இடமாறி அமர்கையில் விழுந்திருந்த
என் இறகுகள் இரண்டை
எடுத்து வைத்து பூட்டினாள்
தெருவை கடந்து மறைந்து போனாள்

Thursday, October 15, 2009

வெற்றிடமாய்

இலக்கில்லா பயணம்

உதிர்ந்து கிடக்கும் இலைகள்

சோம்பிக்கிடக்கும் பொழுதுகள்

நாட்களை விழுங்கும் வயது

அன்பில்லா மனிதர்கள்

புதைந்து கிடக்கும் நான்

Saturday, October 10, 2009

அன்பென்ற மழையிலே - 4

அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் காத்திருக்கும் இருக்கையின் ஒன்றில் அமர்ந்தேன். இன்னும் சென்னை பேருந்து கிளம்புவதற்கு நேரம் இருக்கிறது. சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மறுபடியும் படிக்கத் துவங்கினேன். முதலில் நான் இந்த புத்தகம் படித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வின் நினைவு வந்தது. அப்போது எனக்கு சுஜாதா கதைகள் மீது அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. ஆண்களுக்கு சுஜாதாவைத் தவிர வேறு யாரையும் தெரியாது. அப்படி என்ன அந்த எழுத்தில் இருக்கிறது இப்படி உருகுவதற்கு என்று தோன்றும். ஆனால் இப்போது என்னாலும் அந்த எழுத்தின் ஊடே ஓடும் நகைச்சுவையை ரசிக்க முடிகிறது. அவர் பெண் வேடம் போட்ட பகுதியை படித்து என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் சற்று இருமி ஆசுவாசப் படுத்திக்கொண்டேன். அந்த காட்சியை தொடர்ந்து கற்பனை பண்ணிய எனக்கு சிரிப்பை கட்டுபடுத்துவது சற்று சிரமமாய் இருக்கவே அதை மாற்றிக்கொள்ள சுற்றிலும் பார்வையை ஓட்டினேன்.

என் அருகே அமர்ந்திருவர் அவரது குழந்தைக்கு விளையாட்டுக் காமித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அதை ரசித்தபடி இருந்தேன். அன்றைய நாளிதழை சுருட்டி ஒரு குழலைபோல அமைத்தார் பிறகு அந்த குழந்தையிடம் ஊவென மென்மையாய் ஊதிக் காட்டினார். அதுவும் அவரிடம் இருந்து அதை வாங்கி அதையே செய்து காட்டியது. குழந்தைகள் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் எவ்வளவு அழகாய் கற்றுக்கொள்கிறார்கள். இன்னொரு சிறுவன் போர் அடிக்குது என்று அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தான். நமக்கு காத்திருப்பு என்பது எவ்வளவு சுமையாகிப் போய் விட்டது. ஒவ்வொரு நிமிடத்தையும் ஓடிக் கடப்பதே பழகிப் போய் விட்ட நமக்கு நின்று நிதானமாக பார்க்கவும் பேசவும் பழகவும் பொறுமை வற்றிப் போய் விட்டது.

பேருந்து வந்து அதில் ஏறி அமர்ந்தாயிற்று. என் கைப்பேசியை எடுத்து அமுதனை அழைத்தேன்.
ஹலோ.
சரண்யா சொல்லுங்க.
நான் கிளம்பிட்டேன் அமுதன்.
நானும் வந்திட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்.
சரி, பத்திரமா வாங்க என்றுவிட்டு வைத்தேன்.

ஒரு வருடம் முன் ஒரு மழை நாளின் குளுமையில் பார்த்தேன் அமுதனை முதலில். அதற்கு பிறகு ஒரு விடுமுறை நாளின் மதியம் என் குடியிருப்பு பகுதிக்கு பக்கத்திலிருந்த நூலகத்தில். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டதற்கு அடையாளமாக பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். 'எனக்கென்றொரு முகம்' என்ற புத்தகம் என்னைக் கவர்ந்தது. சில பக்கங்களை புரட்டையில் எனக்கு பிடித்திருந்தது. அதை பதிவு செய்து எடுத்துக் கொண்டு திரும்பையில் அமுதனும் கிளம்பிக்கொண்டிருந்தார்.

என்ன புத்தகம் என்றார். அட்டையை திருப்பிக் காட்டினேன். உங்கள் பெயர் என்று ஒரு சிறு இடைவெளி கொடுத்தார்.
சரண்யா என்றேன்.
நான் அமுதன் என்றார்.
ரொம்ப நல்ல பெயர் என்றேன்.
நன்றி என்று புன்னகைத்தார்.
என்ன படிக்கறீங்க சரண்யா?
எம்.பீ. கடைசி வருடம் என்றேன்.
இப்படியாக நாங்கள் அறிமுகமாகிக் கொண்டோம். எனக்கு அவர் பேசிய விதமும் அணுகுமுறையும் பிடித்திருந்தது. பிறகு ஒவ்வொரு வாரமும் நூலகத்தில் சந்தித்து பேசினோம். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தேர்ந்த அனுபவத்தோடும் முதிர்ந்த பக்குவத்தோடும் விளக்கியதும் பகிர்ந்து கொண்டதும் என்னைக் கவர்ந்தது.

ஒரு முறை தன் அம்மாவுக்கு தங்க வளையல்கள் வாங்க வேண்டும் என்று வந்து தேர்வு செய்து தருமாறு அழைத்தார். எனக்கு அதில் அவ்வளவு அனுபவம் இல்லாவிடிலும் நான் உடன் சென்றேன். அவர் அம்மாவிடம் கொடுக்க ஊருக்கு போய் வந்த பிறகு அம்மாக்கு பிடிச்சிருந்ததா என்று கேட்டேன். பிடிச்சிருந்துச்சுன்னு நினைக்கறேன் என்றார். என்ன சொன்னாங்க என்றேன். ஒண்ணும் சொல்லல என்றார். நான் விடாமல் எப்படி கொடுத்தீங்க சந்தோசப்பட்டாங்களா என்றேன். அம்மாவுக்கு கண்ணாடி வளையல்களும் பிடிக்கும் அதனால ஒரு வித்யாசமா அது ஒரு பாக்ஸ் வாங்கி அதன் நடுவில் இதை வைத்துக் கொடுத்தேன். முதலில் கண்ணாடி வளையல்களைப் பார்த்தார்கள் அதுவே அவங்களுக்கு சந்தோஷம். பிறகு இடையில் இதைப் பார்த்தாங்க. அப்புறம் ஒவ்வொன்னா எடுத்து கைகள்ல போட்டாங்க. கண்ணாடி முன்னாடி ஒரு நிமிடம் நின்னு பார்த்துட்டு கலட்டி வெச்சுட்டாங்க என்றார். எனக்கு கண்களில் சிறு ஈரம் ஊறிய உணர்வெழுந்தது அப்படியே ஒரு சில நிமிடங்கள் மௌனமாய் அமர்ந்திருந்தேன். அவரை அவர் அன்பை நிறைய புரிந்தது. அதைகாட்டி கொண்ட விதம் என்னைக் கவர்ந்தது.

அதற்கு பிறகு எனக்கு அமுதனுடன் எத்தனையோ வருடங்கள் பழகிய உணர்வு ஏற்பட்டது. என்னால் அவரோடு இயல்பாய் பழக முடிந்தது. அவ்வப்போது என் வீட்டுக்கு வருவார். அம்மா அப்பாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். சிறுது நேரம் இருந்து விட்டு சென்று விடுவார். அப்பாவுக்கு நான் நிறைய நேரம் அவரோடு பேசுவதில் இஷ்டம் இல்லாததால் வெளியில் பார்த்து பேசிக்கொள்வோம். பிறகு படிப்பதற்கென்று கோவை சென்று விட்டார். நான் இங்கு வந்து விட்டேன். அவ்வப்போது போனில் பேசிக் கொள்கிறோம். மூன்று மாதமாயிற்று பார்த்து நாளை பார்க்க போகிறேன். அப்படியே உறங்கிப்போனேன்.

வன மோகினி

அந்த வீட்டின் அருகே
மூங்கில் மரங்களுண்டு
அதில் மாலை நேரத்தில்
கூவித் திரியும்
குயில்களை தொடர்ந்து
ஒரு நாள் நானும் செல்ல
என்னை அடர் வனத்தின்
உச்சியில் விட்டு விட்டு

தொலைந்து போயின குயில்கள்
சுற்றிலும் பார்க்கையில்
புகையாய் இறங்கி நிற்கும்
பொதி மேகங்கள்
பெரும் பாறைகள்
அருகேயே அதன் குட்டிகள்
நிறைய மரங்கள்
அதில் சிவந்து நின்ற
சிறு சிறு பழங்கள்
என்றோ வடிந்திருந்த
அருவியின் தடம் பற்றி
நடந்தேன் நடந்தேன்
நீர் அடித்து வளு வளுப்பாய்
கிடந்த கற்களை பொறுக்கியபடி
மேல் செல்கையில்
ஒரு பெரும் பாறையின்
சிறு பிளவில் சிக்கிக்கொண்டு
பட படத்தது ஒரு நீண்ட சிறகு
மெல்ல விடுவிக்க
வெளியே வந்தது
ஒரு தேவதை

உற்றுப் பார்க்கையில்
நொடிக்கொரு முறை
மாறியததன் முகம்
பார்த்திருந்த ஒரு நொடியில்
வந்து போனதென் முகமும்