Sunday, August 25, 2013

How to Name it???

எழுதுவதற்கான நேரமும் மனநிலையும் எப்போதாவது தான் இணைந்து வருகிறது. எழுத்தின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆசையும் நேசமும் உண்டு. எதிர்பாரா உணர்வுச் சுழியில் சிக்கிக்கொள்ளும்போதும், மனச் சிக்கலின் போதும் என்னை நான் மீட்டெடுக்க/புரிந்துகொள்ள எழுதிப் பார்க்கிறேன். பேச்சு கைகொடாத நேரங்களிலும் எழுத்து தான் துணை வருகிறது. அது எந்த நிபந்தனைகளும் அற்று நான் விரும்பிச் செய்கிற காரியமாக இருக்கிறது. வாசிப்பும், அறிதலும் முதிர்வைக் கொடுக்கிறதென்றால், எழுத்து என்னை தன்மையாக்குகிறது, கனியச் செய்கிறது. அப்போது மனம் பசும் பெருவெளியில் புற்களை மேயும் ஆட்டுக்குட்டிகளை வாஞ்சையோடு நாளெல்லாம் பார்த்திருக்கும் கிழ மேய்ப்பனின் தியான நிலையை எட்டுகிறது. அதெல்லாம் சரி இப்போது எதை எழுதிப் பார்க்க நினைக்கிறேன்? இப்போது மனம் ஏனோ ஒரு எதிர்ப்பு உணர்வில், ம்ம் யோசிக்கிறேன் இது எதிர்ப்பு உணர்வா இல்லை குற்ற உணர்வா? இல்லை குற்ற உணர்வெல்லாம் இல்லை, நான் குழப்பத்திலும் இல்லை. இது ஒருவகை ஏமாற்ற உணர்வு என்றே நினைக்கிறேன்.

அது சரி யார் மீது? எதனால் இந்த ஏமாற்றம்?

எல்லாம் இந்த சமூகத்தின் மீது தான்.

அப்படியா, சமூகம் என்று எதை குறிக்கிறாய் நீ?

நான் புழங்கும் மனிதர்கள், புழங்காத மனிதர்கள், இதோ இந்த மனிதக் கூட்டம்.

சரி அவர்கள் மேல் என்ன ஏமாற்றம்?

எனக்கு சமூகத்தின் மீது எப்போதுமே ஒரு ஒவ்வாமை உணர்வு இருந்ததுண்டு. இப்போதும் இருக்கிறது.

அதுதான் ஏன்?

ஏன் ஏன் ஏன்? ஏனென்றால் அது மிக போலியானது, செயற்கையானது.

அதன் சுயநலத் தன்மையின் மீது, அதன் பயங்களின் மீது, அதன் பாதுகாப்பு உணர்வின் மீது, அதன் நிபந்தனைகளின் மீது, அதன் கட்டுப்பாடுகள் மீது,  அதன் ஆசைகளின் மீது, இதோ இந்த கணம் என்னுள் மிகுந்த வெறுப்பு எழுகிறது. இந்த அழுகிப் போன சமூகத்தை விட்டு, ஏதாவது காட்டுக்குள் சென்று தனியாக வாழ முடியாதா?

வாழலாமே உன்னை யார் பிடித்து வைத்திருக்கிறார்கள்?

இதோ இந்த சமூகம், அது கட்டமைத்திருக்கும் குடும்பம், பொறுப்புகள்.

தெளிவாக சொல் சமூகமா நீயா?

ம்ம்ம்...???

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏன்...ஏன்... ஏன்...?

shri Prajna said...

என் அன்பு சுகி,
போலியான, அழுகிப்போன செயற்கையான சமூகம் உலகில் ஆங்காங்கே தென் பட்டாலும், இங்கு அதன் வீச்சு அதிகம்.. நாம் இச்சூழலில் இருப்பதுவும் ஒரு காரணம், இதை அதிகமாய் உணர்கிறோம்.. ஆனால் யாருமே எல்லாவிஷயத்திலும் சமுகத்துடன் ஒத்துச்செல்ல முடியாது.. முரண்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது.. வெளிப்படையாய் எதிற்பதற்கு அஞ்சி சரி சரியென்று போய் விடுகிறார்கள்... அல்லது இப்படியே இருந்தால் அவர்களுக்கும் எதோஒரு விதத்தில் செளகர்யம் என்பதால் இருந்துவிடுகிறார்கள்..இந்த தூரம் வருவதற்கே..இத்துனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.. இதுவும் கடந்து போய் வேறுமாதிரியான தனிமனித விருப்புகளுக்கு மதிப்பளிக்கும் சமூகமாய் மாறும்.. மாற்றம் மட்டுமே மாறாதது.. என்ன நாம் சுயத்தை இழக்காதிருக்க வேண்டும் அதுவரையில்...