Sunday, December 19, 2010

விளைந்தவைகள்

ஒரு அழகிய மலரிலிருந்து
சிதறிய கருத்த விதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
கணிசமாக சேர்ந்து
கனத்த மடியினை
பூவரச மர நிழலில்
அவிழ்த்துக் கொட்டி
இரு பங்காய்ப் பிரித்தபிறகு
ஒரு பங்கை
உறவுகளுக்கு நேர்ந்துகொண்டு
செழிக்கவென விதைத்தும்
மற்றொன்றை
பிரிவுகளுக்கென்றழைத்து
வீசியெறிந்தும் சென்றேன்
அன்றிரவு பெய்த மழை
அடித்துக்கொண்டு போனது
விதைத்தவைகளை
வீசி எறிந்தவைகளோ
விளைந்துகிடக்கிறது மனதடைத்து

11 comments:

santhanakrishnan said...

பிரிவுகளுக்குமான நேசம்
மிக அபூர்வம். அது உங்களிடம்
காணக் கிடைப்பது அற்புதம்.
இன்றிரவு முழுவதும்
உங்கள் கவிதை
மழையெனப் பொழிந்து
கொண்டிருக்கும் என் மனதுக்குள்.
ஒரு விண்ணப்பம்:
முதல் பதிவுக்கும்,
அடுத்த பதிவுக்கும்
மிக நீண்ட இடைவெளி.
கொஞ்சம் குறைக்கலாமே?

Sugirtha said...

உங்கள் விண்ணப்பத்திற்கும் கருத்துக்கும் நன்றிங்க சந்தானகிருஷ்ணன். இடைவெளியை குறைக்க கண்டிப்பா முயற்சிக்கிறேன் :)
இதுல என்ன பிரச்சனைன்னா எனக்கு எப்போதும் எழுதும் மனநிலை தொடர்ந்து இருக்கறதில்லை. நானும் காத்துட்டு இருக்கேன் இனி அது எப்போ வரும்ன்னு. என்ன இருந்தாலும் எழுத்து கொடுக்கும் திருப்தியே அலாதி தான் இல்லையா? :)

Li. said...

இனியா முத்திரை. :-)

Sugirtha said...

நன்றி ஒளி :)

உயிரோடை said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகி. சில முறை பல முறை இப்படித்தான் வீசி எறிந்தததே எதிர்பாராமல் பயனளிக்கும். பெரும் தளத்திற்கு நகர்ந்து விட்டீர்கள் இனியா. வாழ்த்துகள்

Sugirtha said...

நன்றி லாவண்யா!

பா.ராஜாராம் said...

//பெரும் தளத்திற்கு நகர்ந்து விட்டீர்கள் இனியா. வாழ்த்துகள்//

yes! fantastic!

"உழவன்" "Uzhavan" said...

பெரும்பாலும் இப்படித்தான் நடந்துவிடுகிறது :-)
நல்ல நடை

Sugirtha said...

நன்றிங்க பா.ரா.!
நன்றிங்க உழவன்! :)

ஹ ர ணி said...

அருமை. இயற்கை வாரி கொடுக்கும். ஆனால் காத்திருக்கவேண்டும். வீசியெறிந்தால் தான் எந்த விளைச்சலும் விளையும். பொத்திப்பொத்தி பாதுகாத்தால் அது எதிர்பார்த்த விளைச்சலைத் தருவதில்லை. எதுவும் இயற்கையாகத்தான் முடிவு செய்யப்படவேண்டும். உங்களிடம் நல்ல கவிதைகயின் பொருண்மைகள் வார்த்தை சுத்தமாய் எதார்த்தமாய் மிளிர்கின்றன. தொடர்க. வாழ்த்துக்கள்.

Sugirtha said...

நன்றிங்க ஹரணி :)