Monday, September 2, 2013

ஒரு நாளும், நீயும் - நானும்



உன்னிடம் இப்படி என் நாட்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதில் எத்தனை நிறைவு தெரியுமா? நேற்று ஒரு முழுமையான நாள், மதியம் 'நீரின்றி அமையாது உலகு' என்பதை வலியுறுத்தி, அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு உணர்த்தவென திரையிடப்பட்ட படங்களைக் காண  குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு (Water Film Festival)  சென்றேன். அதில் 1984 ல் வெளியான 'Hen in a Boat' (Flußfahrt mit Huhn) என்ற ஜர்மன் படம் திரையிடப் பட்டது.




 
நீர் சேமிப்பை பற்றிய வெளிப்படையான வலியுறுத்தல்கள் இல்லை என்றாலும், நீர்நிலைகள் மாசுபடுதலுக்கான காரணிகள் குறித்த சில ஸட்டிலான காட்சிகள் இருந்தன. ரோபேர்டின் திட்டப்படி ஜோஹன்னா என்ற சிறுமி உட்பட 4  குழந்தைகள், ராபர்ட் ஜோஹன்னாவின் தாத்தாவை ஏமாற்றிவிட்டு அவரின் படகை எடுத்துக் கொண்டு, ஆற்றின்  வழி  கடலைச் சேரும் பாதையை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் சாகசப் பயணம் தான் இந்த படம். கடலின் துர்சக்திகளிடமிருந்து தங்களை ஒரு கோழி பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கோழியையும் படகில் கொண்டு செல்கிறார்கள். அவர்களோடு ஒன்றரை மணி நேரம் மீண்டும் குழந்தையானேன்.

பிறகு மாலை 'Short + Sweet Dance Festival' finale க்கு சென்றேன். Ballet, Hindustani/classical, Flamenco போன்ற பல நடன வடிவங்களை பயிற்சி செய்யும் நடனருக்கான போட்டி. ஒரு பத்து பர்ஃபார்மென்ஸ் இருந்தது.பத்து  நிமிடங்களுக்குட்பட்ட எல்லாமே நன்றாக இருந்தது. இருந்தாலும், அதில் எனக்கு ஸோலோ பர்ஃபார்மென்ஸ் இரண்டு மிகப் பிடித்தது. ஒருவன், மனவளர்ச்சி குன்றியவரின் உலகை பிரதிபலிக்கும் வகையில் மனம் பிறழ்ந்தவர்களின் சிதைந்த உணர்வுகளை முகத்திலும், அவர்களின் குலைந்த அசைவுகளை டான்ஸிலும் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்தான். இன்னொருத்தி, கட்டுக்கடங்காத உணர்வுகளை, கொந்தளிப்பை, இயலாமையை, அலைக்கழியும் மனத்தை, ஐயோ! அத்தனை அற்புதமாக வெளிப்படுத்தினாள். நான் இதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். நீர் மட்டுமா, நம்மைப் போன்றவர்களுக்கு கலை தான் எத்தனை ஆறுதல்?

நீ 'Groundhog Day' படம் பார்த்திருக்கிறாயா? இப்போது அந்தப் படத்தைப் பற்றி உன்னிடம் ஒன்றும் பேசப் போவதில்லை. ஒரே நாள் திரும்ப திரும்ப வருகிறது என்ற இந்த எண்ணம் மனதில் வந்தபோது அந்தப் படமும் நினைவில் வந்தது. அதாவது ஒரே நாளையே திரும்ப திரும்ப எந்த வித விரக்தியும், வெறுப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உணர்வைக் கூட விடு ஒரே நாளையே வருடக் கணக்கில் வாழ்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் இவர்கள் நம் மனச் சிக்கல்களை  எல்லாம் எப்படி புரிவார்கள்? நான் இவர்களிடம் மனதின் முதல் தளத்தில் நின்றுகொண்டுதான் பேசுகிறேன். மேல் தளத்தில் நின்று கொண்டு ஆன்மாவின் பேச்சை எப்படி பேச முடியும்? இவர்களோடு உன்னாலும் என்னாலும் பொருந்த முடிவதில்லை

இன்று உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது நீ காரணம் அறியா வெறுப்புணர்வில் இருப்பதாக சொன்னாய். இன்றைக்கு நீ பார்த்த மனிதர்களை எல்லாம் சபித்தாய். எல்லாவற்றிலிருந்தும் பெரும் விடுதலையை நாடினாய். அதற்கு மேல் எதுவும் நீ விளக்காமலே அந்த உணர்வை நான் நன்கறிந்தேன்.அந்தக் கணம் மானசீகமாய் உன் தலை முடிகளை கோதினேன். உஷ்ணத்தில் வியர்திருந்த உன் உச்சந்தலையை விரல் நுனிகளால் அழுந்தத் துடைத்தேன். கண்ணாஉன் மூர்க்கங்களை சாந்திக்கும் வழியறிவேன் - என் மடியில் இளைப்பாறுவாய் வாஆழ முத்தத்தில் உன் கசப்புகளையும் வெறுப்புகளையும் உறிஞ்சி, உனை நான் மீட்பேன்!

1 comment:

shri Prajna said...

ஒரே நாளையே திரும்ப திரும்ப எந்த வித விரக்தியும், வெறுப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உணர்வைக் கூட விடு ஒரே நாளையே வருடக் கணக்கில் வாழ்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் இவர்கள் நம் மனச் சிக்கல்களை எல்லாம் எப்படி புரிவார்கள்? "

அற்புதமான வரிகள்...நீ மாறிட்டே அப்டிங்கிறதெல்லாம் நான் repeated ஆ கேக்கிறது..but என்னாலயும் ஒரே மாதிரி இருக்க வாழ முடிந்ததில்லை...