Wednesday, March 13, 2013

ஹாலந்த் - 2

பஸ் புறப்பட்டதும் பரந்த நிலபரப்புகளை ஆசையாய் பார்த்துக் கொண்டு வந்தேன். வாகனங்கள் வெகு அரிதாக கடந்து சென்றபடி இருந்தது.  சாலை ஓரங்களில் வாய்கால் நிறைய தண்ணீர் நிற்கிறதா ஓடிக்கொண்டிருக்கிறதா தெரியவில்லை.



சாலையிலிருந்து பார்வையை விலக்கி மீண்டும் சுற்றிலும் நீண்டிருந்த லாண்ட்ஸ்கேப்பை  பார்த்தபோது தூரத்தில் செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. மனம் அந்த கணம்  தன் முன் நீண்டிருந்த காட்சிகளுக்கு   மிகவும் விசுவாசமாய் இருந்தது. இருந்த சோர்வும் தூக்கமின்மையும் எங்கேயோ மிக தொலைவிற்கு சென்றிருந்தது. தங்க வேண்டிய ஹோட்டல் வந்ததும் பஸ் நின்றது.

இறங்கியதும் மீண்டும் குளிரத் துவங்கியது. உள்ளே நுழைந்து ரிசெப்சன்னில் எங்கள் பெயரைக் கூறி பதிவாகி இருந்த அறையின் கீயை வாங்கிக் கொண்டு மேலே இரண்டாவது மாடிக்கு வந்தோம். மேலே வரும்போதே அப்போதே கிளம்பி ஆம்ஸ்டர்டாம் செல்ல நானும் லீனாவும் சைத்ராவும் முடிவு செய்தோம். பிரமிளா வரவில்லை தூங்க வேண்டும் என்றாள். பாரதி வரலாமா வேண்டாமா என்று அப்போது முடிவு செய்ய முடியாமல் எதற்கும் நீங்கள் கிளம்பும்போது என்னிடம் சொல்லுங்கள் நான் வர முயற்சிக்கிறேன் என்றாள். ஒரு நீண்ட ஹால் வேயைக் கடந்தபின் முதலில் இடது புறம் பாரதியின் அறை பின் ஒரு அறை விட்டி பிரமிளாவின் அறை  பின் வலது புறம் லீனாவின் அறை அவளுக்கு ஒரு அறை விட்டு சைத்ராவின் அறை, அதற்கு பிறகு அமீத்தின் அறை பின் என்னுடையது கடைசி அறையாய் இருந்தது.

அறையை திறந்துகொண்டு உள்ளே வந்தேன். எனக்கே எனக்கு மட்டுமான அந்த அறை  மிகப் பிடித்திருந்தது. அது ஒரு எல்லையற்ற சுதந்திர உணர்வைக் கொடுத்தது. சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓடவிட்டு பின் கண்ணாடியில் தெரிந்த என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இப்படியான அசட்டு தனங்களை செய்து பார்க்க ப்ரைவசி எவ்வளவு தேவைப் படுகிறது. அறையின் ஒருபுறம் சுவரற்று கண்ணாடி மட்டும் கொண்டு  மூடி இருந்தது. அதன் வெள்ளை  திரை சீலையை விலக்கி இலைகளை உதிர்த்து ஹோட்டலின் நடுவில் நின்றிருந்த மாப்பில் மரத்தை ஒரு படம் எடுத்தேன்.

கூடவே லேசாக பெய்திருந்த மழையின் ஈரமும் பதிவாகி இருந்தது. இப்படி அறையின் உள்ளிருந்த கட்டிலை, டேபிளை எல்லாம் சில நிமிடங்களில் எடுத்து விட்டு குளிக்க சென்றேன். வசந்தகாலத்தை வரவேற்க இலைகளை எல்லாம் உதிர்த்து புதிய இலைகள் கட்டி  மினுக்கும்  சாலையோர மரங்களைப் போல என்னிடம் களைப்பு உதிர்ந்து உற்சாகம் மின்னியது.

அறையைப் பூட்டி வந்து சைத்ரா தயாரா என தெரிந்து கொள்ள அவளின் அறைக் கதவை தட்டினேன். சைத்ராவிற்குப் பதில் பக்கத்துக்கு அறை திறந்தது. அமீத் எஸ் என்றான். நான் என் தோழிக்கு காத்திருக்கிறேன் என்றேன். அவன் ஓகே என்று விட்டு பின் என்ன சொல்வது எனத் தெரியாமல் யு குட் வெயிட் இன்சைட் என கதவுகளை விரியத் திறந்து வைத்தான். நான் இட்ஸ் ஓகே ஷி வில் பீ அவுட் இன் எ மினிட் என்றேன். அவன் ஓகே என்று விட்டு கதவை மூடிக் கொண்டான். எங்கே மீண்டும் அவனை தொந்தரவு செய்து விடுவேனோ என்று திரும்பவும் கதவை தட்ட தயக்கமாக இருந்தது. கதவுக்கு மிக அருகில் சென்று சைத்ரா என்றேன். இதோ வருகிறேன் என்று பதில் வந்தது.

அதற்குள் பாரதி வருகிறாளா எனத் தெரிந்து கொள்ள அவள் அறையை தட்டினேன். இணையத் தொடர்புடன் யாருடனோ கால் செய்து பேசிக் கொண்டிருந்த பாரதி அறையை திறந்து கொண்டு வெளியில் வந்தாள். லௌட் ஸ்பீக்கர் போட்டிருப்பாள் போல கதவை திறந்ததும் சரியாக யாரோ 'எங்கே அந்தப் பொண்ணு சுகிர்தாவை காட்டு' என்று கேட்டார்கள். பாரதி என்ற பெயரைக் கேட்டதும் முன் ஒரு முறை அவள் தமிழாக இருக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் அப்பொழுதான் அவள் தமிழ் என உறுதியானது.  எனக்கு கேட்டதைக் காட்டிக்  கொள்ளாமல் ஆர் யு கமிங் வித் அஸ் என்று கேட்டேன். நோ யா யாம் வெரி டயர்ட் என்றாள். ஆனால் எனக்குப் பசிக்கிறது நீங்கள் சாப்பிட்டு கிளம்புவதானால் உங்களுடன் சாப்பிட கீழே வருகிறேன் என்றாள். நாங்கள் கீழே வந்து ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு டேபிள் முழுக்க கலர் திரவங்களை ஆடர் செய்து உற்சாகமாக இருந்தார்கள் அலுவலக நண்பர்கள். நாங்கள் சாப்பிடுவதற்குள் லீனா ரிசெப்சன் பெண்ணிடம் ஆம்ஸ்டர்டாம் எப்படி செல்வது என்றும் ரூட் மாப்பும் வாங்கி இருந்தாள். எங்களிடம் குறிப்பிட்ட தூரம் வரை ஹோட்டலிலிருந்து டாக்ஸியில் செல்லலாம் என்றும் பின் அங்கே இருந்து ட்ரைன் பிடித்து இன்னொரு இடம் பின் அங்கிருந்து ட்ராமில் ஆம்ஸ்டர்டாம் என்றாள். ரிசெப்சன் பெண்ணிடம் சொல்லி டாக்ஸி ஏற்பாடானது. டாக்ஸி வந்ததும் நாங்கள் மூவரும் கிளம்பினோம்.

டாக்ஸி எங்களை ஸ்டேசனில் விட்டு சென்றது. உள்ளே நுழைந்து முன் டிக்கெட் எடுத்து ட்ரைனுக்காக காத்திருந்தோம். காற்று சில வினாடிகளுக்கு ஒரு முறை வீசியபடி இருந்தது.  காற்று மேலே படும்போது குளிர் ஊசியாக துளைத்தது. நானும் லீனாவும் குளிர் குளிர் என்றபடி இருந்தோம். சைத்ரா எனக்கு இந்தக் குளிரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல்  எங்களை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள். ட்ரைன் வந்ததும் ஏறி டாம் ஸ்கொயர் வந்தோம். அங்கே இருந்து ட்ராமிற்காக காத்திருந்தோம். சில நிமிடங்கள் கடந்த பிறகும் அந்த பிளாட்போர்மில் நாங்கள் செல்ல வேண்டிய ட்ராம் வரவில்லை. பக்கத்தில் இருந்த சைன் போர்டில் குறிப்பிட்ட ட்ராம் வரும் சரியான பிளாட்போர்ம் நம்பரை பார்க்க அது நாங்கள் நின்றிருந்த பிளாட்போர்ம்க்கு நேர் எதிர்புறம் சற்று தொலைவில் இருந்தது. அங்கே நாங்கள் செல்ல வேண்டிய ட்ராம் நின்றிருந்தது.

நான் குளிரிலிருந்து தப்பிக்க எனவும் ட்ராமை பிடிக்கவும் சேர்த்து சற்று வேகமாக நடந்தேன். நான் முன்னால் சென்றால் அவர்கள் இருவரும் வரும் வரை சற்று ஹோல்ட் பண்ணி வைக்கலாம் என்று நினைத்தேன். பிளாட்போர்மில் நிறையப் பேர் நின்றிருந்தார்கள். வேறு ஏதோ ட்ராமிற்காக காத்திருக்கிறார்கள் என நினைத்தேன். அவர்களை எல்லாம் கடந்து சென்று ட்ராமின் டிரைவரிடம் ஆம்ஸ்டர்டாம் செல்லுமா என்றேன். அவர் ஆம் என தலை அசைத்து சற்று பொறு என சொன்னார். அவர் ட்ராமை இயக்கி என்னை கடந்து சென்று நிறுத்தினார். மூன்று வழிகள் இருந்த ட்ராமின் கடைசி வழிக்கருகே நான் நின்றேன். அங்கே நின்றிருந்த எல்லோரும் ட்ராமில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

நான் லீனாவையும் சைத்ராவையும் பிடிக்க வேக வேகமாக முன் வழிக்கருகே சென்றேன். அவர்கள் இருவரையும் காணோம். ஒரு கணம் என்ன செய்வதென திகைத்து பின் ட்ராமில் ஏறி தேடினேன். கண்ணுக்கு தெரிந்தவரை தேடியும் அவர்களைக் காணோம். திரும்ப இறங்கி பிளாட்போர்மில் தேடினேன் அங்கும் இல்லை. பிளாட்போர்ம் வெறிச்சோடிக் கிடந்தது. எப்படியும் அவர்கள் ட்ராமில் இருக்கலாம் என ஒரு குருட்டு நம்பிக்கையுடன்  திரும்பவும் ட்ராமில் ஏறிக் கொண்டேன். ட்ராம் கிளம்பியது. சற்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ம்ம்ஹூம்  நான் அவர்கள் இருவரையும் தொலைத்து விட்டிருந்தேன். அப்பொழுதான் என்னிடம் ஹோட்டல் அட்ரெஸ், மொபைல், ரூட் மாப் என எதுவும் இல்லை லீனாவை நம்பி மட்டுமே வந்திருக்கிறேன் என உரைத்தது. மெதுவாக பயம் என்னுள் இறங்கத் துவங்கியது.
 மேலும்...

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அனுபவம் என்று சொல்ல முடியவில்லை... ஏனென்றால் முடிவில் திக்... திக்... என்னாச்சி...?

படங்கள் அருமை....

Sugirtha said...

நன்றி தனபாலன். சீக்ரமா சொல்றேன்...

shri Prajna said...

"வசந்தகாலத்தை வரவேற்க இலைகளை எல்லாம் உதிர்த்து புதிய இலைகள் கட்டி மினுக்கும் சாலையோர மரங்களைப் போல" ம்ம்..நல்ல வார்த்தைப் பிரயோகம்..அப்புறம் photos நல்லாருக்கு..வழக்கமா நம்ம போறப்போ பண்ற மாதிரி நீ கேமரா மறக்கல..சீக்கிரம் எழுது.. its interesting..

Sugirtha said...

ம்ம் மறக்கல. sure :-)