Friday, March 1, 2013

ஹாலந்த் - 1

என் முதல் பயணம் கொடுத்த உற்சாக அனுபவத்தை தொகுத்து சேமிக்கவெனவும், மாதங்களாகியும் இன்னும் மறக்க முடியாத எதிர்பாரா அதிர்வை கடக்கவெனவும் இதை எழுத துவங்குகிறேன்.

நெதர்லாந்த் பயணம் குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி  பயணத்திற்கு தேவையானவைகளை வாங்கிக் கொண்டிருந்தேன். நெதர்லாந்தில் ஒரு வார கால நெட்வொர்கிங் பயிற்சியை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பயணத்திற்கு  இன்னும் ஒரே வாரம் தான் இருந்தது அதற்குள் எல்லாம் வாங்கியாக வேண்டும் என்ற பரபரப்பு உள்ளூர ஓடியபடியே இருந்தது. முதல் முறை அயல் தேசப் பயணம் என்பதால் கொஞ்சம் தயக்கம், பயம் மற்றும் பயணத்தை ஒட்டிய இதர உணர்வுகள் எழுந்தெழுந்து அமிழ்ந்தது. அலுவலகத்தில் இன்னும் பலர் உடன் பயணிக்கிறார்கள் என்றாலும் என் டீமிலிருந்து நான் மட்டுமே பயணிக்கிறேன் என்பதால் அங்கே சென்று  தனியாக இருக்க ஓரளவு என்னையே நான் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். ஒருவகையில் அறிந்தவர்கள் எல்லோரையும் விட்டு தள்ளி இருக்கப் போவது கொஞ்சம் குதூகலமாகக் கூட இருந்தது. வழக்கமான அலுவலகம், வீடு என்றில்லாமல் ஒரு வாரம்  எல்லாமே புத்தம் புதுசாய் இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு உற்சாகம் ஊட்டிக் கொண்டிருந்தது.

மேலும் ஐரோப்பா செல்வது என்னுடைய நெடுங்கால கனவு என்பதால்  எனக்கு இந்தப் பயணம் உள்ளே  மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. நெதர்லாந்த் பயணம் முடிவான உடன் யார் யார் உடன் பயணிக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். ஐம்பதுக்கும்  மேற்பட்டவர் பயணிக்கும் பயண பட்டியலில் ஜோதி, பாரதி, சைத்ரா மற்றும் பிரமிளா இவர்கள்  பெயரைப் பார்த்தும் கொஞ்சம் இவர்களோடு அறிமுகம் இருக்கிறது என்று சற்று நிம்மதியாக இருந்தது. மற்றவர்களைக் காட்டிலும் ஜோதியோடு ஒரு சில முறை பேசி இருக்கிறேன். சமீபத்தில் கூட வேறு ஒரு பயிற்சி வகுப்பில் ஜோதி என்னோடு இருந்தாள். அதே வகுப்பில் விஷ்வா மற்றும் லீனா பழக்கமானார்கள். அவர்களும் எங்களோடு நெதர்லாந்த் பயணிப்பவர்கள் என்பதால் நாங்கள்  செல்ல இருக்கும் அந்தப் பயணம் குறித்து மதிய உணவு இடைவேளையில் பேசிக் கொண்டிருந்தோம். பயிற்சி ஞாயிறு துவங்குகிறது ஆனால் நாங்கள் சனிக் கிழமையே நெதெர்லாந்து சென்றடைவோம் என்பதால் அன்று ஆம்ஸ்டர்டாம் சென்று வரலாம் என்று பேசிக் கொண்டோம்.  ஆம்ஸ்டர்டாமில் பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்கி இருக்கும் ஹோட்டலிலிருந்து அங்கே எவ்வாறு செல்லலாம் என்பது  குறித்த தகவல்களை  எல்லாம்  கூகிள் செய்து பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன் என்றாள் லீனா. நானும் ஜோதியும் சரி நாங்களும் உடன் வருகிறோம் என்றோம்.

பயணத்திற்கு இரு தினங்கள் முன்பு டிராவல் டீமிலிருந்து பயண வழி முறைகளை விளக்க அழைத்திருந்தனர். ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்டில் எங்களை வரவேற்க ஒரு டீம் இருக்கும் என கூறி பயணத்திற்கு தேவையான யூரோக்களையும் கொடுத்தனர். இந்த மீட்டிங்கில் நாங்கள் தங்கப் போகும் ஹோட்டல் ஆம்ஸ்டர்டாமிலிருந்து ஒரு முக்கால் மணி நேரப் பயணத்தில் லாங்கேலான்  என்ற இடத்தில் உள்ளது எனவும் அது நகர எல்லைக்கு சற்று வெளியே கன்ட்ரி சைட்டில் உள்ளது  அதாவது கிராமப்புறதில் உள்ளது என்றும் தெரிய வந்தது. நேரம் கிடைக்கும்போது அருகே உலாவ செல்லலாம் அங்கே விண்ட்மில்களைப் பார்க்கலாம் என்றும் கூடுதல் தகவல்களைக் கொடுத்தனர். இப்போது கிராமங்கள் வேகமாக தன்  அடையாளத்தை இழந்து கொண்டிருந்தாலும் நகரங்களைப் போல் அல்லாது கிராமங்களில் இன்னும் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் பழமையை பார்க்க முடியும். எனவே கிராமத்தைப் பார்க்கப் போகிறோம் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.பின்னர் பெங்களூரில் இருந்து செல்பவர்கள் எல்லோரும் ஒரே விமானத்தில் அல்ல 2 மணி மற்றும் 3 மணி என இரு வேறு விமானங்களில் பயணிக்கிறோம்  என்று தெரிய வந்தது. 2 மணி விமானம் எனக்கு ஏற்பாடாகி இருந்தது. அதில் ஜோதி இல்லை. அவள் எனக்கு பின்னால்  3 மணிக்கு தான் கிளம்பி வருகிறாள் என்றதும் கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. என் டிக்கெட்டில் அமித் மற்றும் பாரதியின் டிக்கெட்டும் சேர்ந்திருந்தது. பாரதியை பார்த்திருக்கிறேன் இருந்தாலும் ஜோதி அளவுக்கு கூட பழக்கம் இல்லை. அமித்தை பார்த்தது கூட கிடையாது.

பயண தினத்திற்கு முன் தினம் நான் எல்லா டாக்குமென்ட்களையும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருக்கும்போது சைத்ரா என்னை தொடர்பு கொண்டாள். சைத்ராவை ஒரு சில மாதங்கள் முன்பு ஒரு மீட்டிங்கில் சந்தித்திருந்தேன். அவளும் நான் செல்லும் அதே பிளைட் என்பதால் எதற்கும் என் செல் நம்பரை வாங்கிக் கொண்டாள். அதிகாலை இரண்டு மணிக்கு பிளைட். எனக்கு எப்போதும் பயணத்திற்கு முன் அதாவது பயணம் மேற்கொள்ளும் சில மணி நேரங்களுக்கு முன்  பயணம் குறித்த எல்லா சுவாரஸ்யங்களும் அமிழ்ந்து மிகுந்த பயம் எழும். பழகியவைகளுக்கு உள்ள  முக்கியத்துவம் அப்போதுதான் விளங்கும். பழகிய இடம், பழகிய அறை,  பழகிய படுக்கை உற்றார் உடன் இருக்கும் சௌகர்யம்  எல்லாம் கரைந்து தனியான உணர்வு பயத்தை உண்டு பண்ணியது. இதெல்லாம் ஒரு வாரத்திற்கு தான் என்ற கால அளவு/அறிவு மனதுக்கு புலப்படவில்லை.இப்போ இந்த பயணம் ரொம்ப அவசியமா என்று கேட்டது ஒரு பக்கம் மனம். பேசாம நான் இங்கேயே இருந்துடறேன் என்னை விட்டுடுங்களேன் என்று மானசீகமாக கெஞ்சியது. விமான விபத்துகளெல்லாம் அப்பொழுதுதான் நினைவில் வந்தது. திரும்பவும் இங்கே வருவோமா நேத்ராவை பார்ப்போமா என்று பயமாக இருந்தது. அப்பொழுது நேத்ரா வேறு ஊரிலிருந்ததால் ஒருவேளை நான் செல்லும் விமானம் விபத்துக்குள்ளானால் நான்  கடைசியாக ஒரே ஒரு முறை கூட நேத்ராவைப் பார்க்காமல் போய் விடுவேன் என்ற பயம் எழுந்தது. இப்படியான பயத்துடனும் கவலை உணர்வுடனும் ஏர்போர்ட் கிளம்பினேன்.

நண்பர்களுடன் டாக்சியில் ஏறி அமர்ந்ததும் கொஞ்சமாய்  மனம் பயணத்திற்கு தன்னை தயார் செய்தது. ஏர்போர்ட்டை நெருங்கத் துவங்கும்போது சைத்ரா என்னை அழைத்தாள். எங்கே இருக்கிறாய் என்றாள். நான் இன்னும் சற்று நேரத்தில் ஏர்போர்ட் சென்றடைவேன் என்றேன். அவள் தான் அப்போதுதான் வீட்டிலிருந்து கிளம்புவதாக சொன்னாள். நீ வந்து சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்றேன். அவள் இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும் என்றாள். பிறகு ஒரு வித வருத்ததுடன் என் நண்பர்கள் எல்லாம் 3 மணி ப்ளைட்டில் வருகிறார்கள் எனக்கு இந்த ப்ளைட்டில் யாரையும் தெரியாது என்றாள். கவலைப் படாதே நான்  உடன் இருக்கிறேன் என்று தைரியம் சொன்னேன். அது எனக்கே நான் சொல்லிக் கொள்வது போலவும் இருந்தது. அவள் தாங்க்யூ என்றுவிட்டு தொடர்ந்து நீ செக் இன் செய்து உள்ளே சென்று விடுவாயா என்றாள். இல்லை நீ வரும் வரை நான் வெளியிலேயே காத்திருக்கிறேன் என்றேன். அவள் மிக்க நன்றி என்றாள்.

என்ன இருந்தாலும் ஒரு கம்பெனியை மனம்  விரும்பத்தான் செய்கிறது. நான் ஏர்போர்ட் சென்று சைத்ரா விற்காக காத்திருந்தேன். பிரமிளா தன் கணவன் விஸ்வநாத் உடன்  நின்றிருந்தாள். விஸ்வநாத்தும் எங்கள் அலுவலகத்தில்  பணி புரிபவர் என்பதால் இருவரையும் பார்த்து புன்னகைத்து ஒரு ஹாய் சொன்னேன். சற்று நேரத்தில் சைத்ரா வந்தாள். செக்கின் முடித்து உள்ளே செல்லும்போது சைத்ரா பாத்ரூம் சென்று ரெப்ரெஷ் செய்யலாம் என்றாள். பாத்ரூம் சென்று விட்டு உன்னிடம் பேஸ் வாஷ் இருக்கிறதா என்றாள். நான் கொடுத்தேன் முகம் கழுவி கண்ணுக்கு கீழ் மை கசிந்துவிட்டது என்று சொல்லியபடி டிஸ்யுவை சற்றே ஈரப் படுத்தி கண்களுக்கு கீழே மை இடுவதைப் போல பாவனையுடன் அதை துடைத்தாள். நான் காய்ந்த உதடுகளில் லிப் கார்டை பூசிக் கொண்டிருந்தேன். இருவரும் வெளியே வந்தபோது அடுத்த விமானத்தை பிடிக்க அவள் நண்பர்கள் வந்துவிட்டிருந்தனர். விஷ்வாவை முதலில் பார்த்திருக்கிறேன் என்பதால் ஹாய் என்றேன். அவர்களின் உரையாடலைக் கலைக்க விரும்பாமல் சற்றே தள்ளி நின்றேன். கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என் பெயர் அடிபடவே என்ன என்று கேட்டேன். ஹேய் உனக்கு கன்னடா தெரியுமா என்றாள். நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றேன். நேரம் ஆகவே அவனிடம் பை சொல்லி விடை பெற்று அங்கே அமர்ந்திருந்த பாரதி மற்றும் பிரமிளாவுடன் உள்ளே சென்றோம். தயக்கத்தோடேயே கொஞ்சம் கொஞ்சம் பேசி பரீட்சியமானோம்.

சைத்ரா நாங்கள் இருவரும் அருகருகே இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள். என் இருக்கைக்கும் மூன்று வரிசைகள் தள்ளி அவள் இடம் இருந்தது.அவள் எனக்குப் பின்னால் சென்றுவிட்டாள். பாரதி எனக்கு வலது புறமும் அமித் எனக்கு இடது புறமும் அமர்ந்தனர். அமித்திடம் மாறி அமரக் கேட்கலாம் என்று நினைத்து அமித் என்றேன். அவன் எஸ் என்றான். என்னவோ பிறகு அவனிடம் கேட்கத் தோன்றவில்லை. சைத்ராவை திரும்பிப் பார்க்க அவள் சௌகர்யமாகத் தான் இருப்பதாகப் பட்டது. நான் பிறகு பேசாமல் அமர்ந்து கொண்டேன். பாரதி என்னுடன் பேசியபடி வந்தாள்.பிறகு அவளருகில் நானும் சௌகர்யமாக உணர்ந்தேன். நாங்கள் பாரிஸ் சென்று வேறு பிளைட் மாறி ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டும். ப்ளைட்டில் சுத்தமாக தூக்கம் வரவில்லை. மிக சோர்வாக இருந்தது. ஒரு வழியாக பாரீஸ் வந்து விமான நிலையத்தில் கொஞ்சம் அலைந்த பிறகே செல்ல வேண்டிய விமானத்தை கண்டுபிடித்தோம். இந்த டச் விமானம் மிக சௌகர்யமாக இருந்தது. இதில் சைத்ரா என்னருகில் அமர்ந்தாள்.  எனக்கு எப்போது ஹோட்டலுக்கு போவோம் என்றிருந்தது போனதும் நன்றாக தூங்க வேண்டும் என்றிருந்தது. தலை பயங்கரமாய் வலித்தது. பணிப்பெண் வந்ததும் நீர் வாங்கி மாத்திரையைப் போட்டுக் கொண்டேன். சைத்ரா முன்பே விமானத்தில் நன்றாக தூங்கியதால் எந்தக் களைப்பும் இல்லாமல் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். நான் கொஞ்சம் வேடிக்கை பார்த்தபடி வந்தேன். வெயில் விமான ரெக்கையில் படரத் துவங்கியது. அரைமணி நேரத்தில் ஆம்ஸ்டர்டாம் அடைந்தோம். ஆம்ஸ்டர்டாம்  விமான நிலையத்தில் எங்களுக்கு உதவ என அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் அங்கிருந்து நாங்கள் வேறே பஸ்ஸில் ஹோட்டலுக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். விமான நிலையம் விட்டு வெளியே வந்ததும் குளிர் தாக்கியது. பஸ்ஸில் அரை மணி நேரப் பயணம் என்றார்கள். நாங்கள் பஸ்சில் ஏறி அமர்ந்ததும் பஸ் கிளம்பியது.
                                                                                                                                              .....மேலும்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயணம்...

பயண படங்களுடன் அடுத்த பகிர்வு வருமா....?

Sugirtha said...

நன்றி தனபாலன்.

உயிரோடை said...

குழுவாக அலுவலக பயணம் என்றால் மிகவும் ஜாலியாக இருக்கும். என்ஜாய் மாடி

Sugirtha said...

ம்ம் லாவண்யா, என்ஜாய்ட் ;-)