Thursday, March 21, 2013

ஹாலந்த் - 3

என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தபடி ட்ராம் உள்ளே டிரைவருக்கு அருகில் நின்றிருந்தேன். அவரிடம் ஆல்பர்ட் மார்க்கெட் என்று ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டேன். வரும் வழியில் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது நாங்கள் சிலரிடம் ரயில் குறித்த தகவல்கள் கேட்டோம். அவர்கள் ஆங்கிலம் பேச  நிறையவே  சிரமப்பட்டார்கள் என்றாலும் உதவி செய்ய முன் வருபவர்களாகவே இருந்ததனர். ட்ராமின் இயக்குனர் அவர்களைப் போல அல்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசினார். இடையிடையே ஒரு சில வார்த்தைகள் ஹிந்தி பேசினாற்  போல் கூட இருந்தது. எனக்கு இருந்த பதற்றத்தில் நான் அதை கவனிக்கவில்லை. கவனித்தால் மட்டும் என்ன புரிந்து விடவா போகிறது? அவர் என்னிடம் அந்த டிக்கெட்டை கதவை ஒட்டி இருந்த  ஆக்செஸ் போர்டில் உரைக்க சொன்னார். நானும் அப்படியே செய்தேன்.பின்பு இறங்கும் போதும் அப்படி செய்ய சொன்னார் நான் சரி என்றேன். தொடர்ந்து அவர் ஏதோ ஹிந்தியில் சொல்ல நான் விழித்தேன். என் முகத்தை பார்த்து புரிந்து கொண்டவராக டூ யு நோ ஹிந்தி என்றார். நான் தெரியாது என்றேன். ஆர் யு ப்ரம் இந்தியா என்றார். நான் ஆம் என்றேன்.  இந்தியா என்கிறாய் உனக்கு ஹிந்தி தெரியாதது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றார். நான் எந்த  பதிலும் சொல்லாமல் இந்த ட்ராமின் உள்ளிருந்து கடைசி வரை செல்ல வழி இருக்கிறதா என்று கேட்டேன்.  அவர் விடாமல் அப்படியானால்  நீ என்ன மொழி பேசுவாய் என்றார். ஐ யாம் ப்ரம் சௌத் இந்தியா ஐ ஸ்பீக் தமிழ்  என்றேன். இத்தனை பேச்சு  வெளியே நடந்து கொண்டிருக்க மனசு அவர்களை தேடிக் கொண்டிருந்தது. அவர்கள் ட்ராமில் தான் இருக்கிறர்களா இல்லை என்றால் என்ன செய்வது, எப்படி திரும்புவது என எண்ணங்கள் பல திக்கில் சென்று கொண்டிருந்தது. இப்படி பகுதி பகுதியாய் நான் பிரிந்து கொண்டிருந்தாலும் அவரின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. திடீரென தனித்து விடப்பட்டதால் திக்குண்டிருந்த மனதுக்கு இந்த சம்பாஷனை ஒரு வகையில் ஆறுதலாகவும் நிதானிக்க ஒரு சந்தர்பமாகவும் இருந்திருக்க வேண்டும். நான் சௌத் இந்தியா என்றதும் ஓ! ஐ நோ சித்ரா, ஐ நோ A R ரஹ்மான் என்றார். இதை எதிர்பார்க்காத நான் உற்சாகமாக எஸ் எஸ் எஸ் எஸ் நானும் அதே மாநிலம் தான் என்றேன். அவர் எனக்கு அவர்களை மிகப் பிடிக்கும் என்றார்.

இப்பொழுது பதட்டம் முட்டிக் கொண்டு மேலேற  நான் என் நண்பர்களை தொலைத்து விட்டேன் அவர்களைத் தேட இந்த ட்ராமின் கடைசி வரை செல்ல வழி இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சற்று மௌனித்து பின் இருக்கிறது என்று சொல்லி மேலும் ஏதோ சொல்ல  பேச வாயெடுக்க நான் நன்றி சொல்லி  ஐ வில் கோ லுக் பார் மை பிரெண்ட்ஸ் என்றேன். அவர் சரி எனவும் உள்ளே நுழைந்தேன். நடுவிலிருந்த வழி அருகே செல்லும்போது லீனாவை பார்த்து விட்டேன். என்னுள் அப்படி ஒரு திருப்தி பரவியது, எப்படி எனில் அதை  வார்த்தையில் சொல்ல முடியாது. என்னைப் பார்த்ததும் நான் கொடுக்க வேண்டிய எக்ஸ்ப்ரெஷெனை லீனா கொடுத்தாள். என்னுள் எழுந்த ஆசுவாசம் அவள் முகத்தில் தெரிந்தது. மை காட் வேர் ஹாவ் யூ பீன் மேன் என்றாள். அவள் வார்த்தைக்கு வார்த்தை எல்லோரையும்  மேன் என்று தான் விளிப்பாள். அவளே  தொடர்ந்து உன்னை காணவில்லை என்றதும் எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. இப்பொழுதான் உடன் நின்ற  சைத்ராவைக் காட்டி இவளிடம் சொன்னேன் இங்கே இறங்கி விடலாம் என்று. உன்னைப் பார்க்காதிருந்தால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி இருப்போம் என்றாள். எனக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்தேன். எங்களை நீ பார்காதிருந்தால் என்ன செய்திருப்பாய்  என்றாள். தெரியவில்லை வண்டி பிடித்து ஹோட்டலுக்கு போயிருப்பேன் என்றேன். உன்னிடம் முகவரி இருக்கிறதா என்றாள். இல்லை, ஒரு வேளை  ஆம்ஸ்டர்டாமில் இறங்கி இந்தியாவுக்கு அழைத்து  முகவரியை வாங்கி இருக்கலாம் என்றேன். பிறகு நீ டிக்கெட் வாங்கி விட்டாயா என்றாள். நான் ஆம் என்று எனக்கும் டிரைவருக்கும் நடந்த உரையாடலை அவளிடம் சொன்னேன். அவள் அதற்குள் இத்தனை பேசிவிட்டாயா என்றாள்.

அப்பொழுது என்னருகே ஒரு வயதான தாத்தா நின்றிருந்தார். அவர் நல்ல போதையில் இருந்தாரா அல்லது தூக்கத்திலா என்று தெரியவில்லை. ஏதேதோ பாட்டு போல ராகமிழுத்து பாடினார், தள்ளாடிக் கொண்டே டச் மொழியில்  பேசிக் கொண்டே வந்தார். நான் அவரை திரும்பிப் பார்த்து புன்னகைத்தேன். அவர் அதை வரவேற்கவில்லை என்று அவர் முகத்தில் தெரிந்தது. அவர் ஏதோ பக்கத்தில் இருந்த இளைஞரிடம் சொல்லவும்  அதற்கு அவர் ஏதோ பதில் சொன்னார். பிறகு அவர்  ஆம்ஸ்டர்டாம் டூரிஸ்ட் நிறைந்த நகரமாகி விட்டது. இங்கே வந்து யாராவது மாசு படுத்தினால் நான் அவர்களின் விரல்களை வெட்டுவேன் என ஆங்கிலத்தில் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும் நிதானமாகவும் உச்சரித்தார். அப்பொழுது  ட்ராமின் இயக்குனர்  ட்ராம் கூட்டமாக இருப்பதால் எல்லோரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு அனௌன்ஸ் செய்தார். எனக்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ள  நான் அவரிடமிருந்து சற்று முன்னே தள்ளி நின்று கொண்டேன். இயக்குனர் ஒவ்வொரு நிறுத்ததிலும் அது என்ன இடம் என அனௌன்ஸ் செய்தபடி வந்தார். ரயிலிலும் அடுத்த ஸ்டேஷன் குறித்த தகவல்கள் சீட்டுக்கு மேலே மாட்டப்பட்டிருந்த திரையில் வந்து கொண்டே இருந்தது. இது நாங்கள் சரியான இடத்தில  இறங்க உதவியாக இருந்தது.

நாங்கள் ஆல்பர்ட் மார்க்கெட் தான் என்று நினைக்கிறேன் அங்கே இறங்கினோம். எங்கள் முன் நீண்டிருந்த தெரு முழுக்க கடைகள் நிறைந்திருந்தது.  லீனா சைத்ராவிடம் இவளை நாம் இருவரும் பிடித்துக் கொண்டே நடக்கலாம் இல்லாவிட்டால் தொலைந்து விடுவாள் என்று ஒரு புறம் என் கைக்குள் நுழைத்து லீனா பிடித்துக் கொள்ள மறு புறம் சைத்ரா என் கைகளைக் கோர்த்து பிடித்துக் கொண்டு நடந்தார்கள். எனக்கு நான் தொலைந்தேனா அல்லது அவர்களா என்று குழப்பமாகவும் இப்படி அவர்கள் என்னை பிடித்துக் கொண்டு நடப்பது வேடிக்கையாகவும் இருந்தது. எவ்வளவு நேரம் தான் அப்படியே நடக்க முடியும் அதுவும் ஷாப்பிங் செய்யும் இடத்தில. அந்த தெருவுக்குள் நுழைந்ததும்  எனக்கு இடது புறம் இருந்த கடை பிடித்தது லீனாவுக்கு  வலது புறம். நான் இடது புறம் கடைக்கு செல்கிறேன் என சொல்லி விட்டு சென்றேன். மூவரும் ஒருவரை ஒருவர் பார்வையிலேயே வைத்துக் கொண்டோம். சைத்ரா அவள் நண்பர்கள் எல்லோரும் வாங்கும் ஏர்போர்ட் சாக்லேட் வாங்க வேண்டாம் எனவும் தங்களுக்கு ஹோம் மேட்  சாக்லேட் வேண்டும் எனத் தெரிவித்ததாக சொல்லி சாக்லேட் கடையில் நின்றாள். அப்படியே அந்தத் தெருவை சுற்றினோம். அங்கே அந்தக் கடைகள் நடத்துபவர்கள் மிகவும் உயிர்ப்போடு இருந்தார்கள். எதாவது பாட்டை பாடிக் கொண்டே விற்பனை செய்தார்கள். எதிர்த்த கடையிலிருந்து எதிர்பாட்டு வந்தது. இதையெல்லாம் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் குளிர் அதிகரிக்கத் தொடங்கியது கடைகள் மூடத் துவங்கின. நாங்கள் நடந்து வெளியே வந்தோம்.

பிறகு எங்கே செல்வது என புரியவில்லை. லீனாவும் நானும் இப்படியே கொஞ்சம் நடக்கலாம் என்றோம். எனக்கு இது பிடித்திருக்கிறது ஐ ஜஸ்ட் வான்டட் டு கெட் தி பீல் ஆப் திஸ் சிட்டி என்றாள்.நாங்கள் மெல்ல நடந்தோம். நகரம் என்று சொல்ல முடியாதபடி மிகவும் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் சாலைகளை மிக எளிதாக கடந்தோம். அங்கே ட்ராம்கள் நிறைய இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு ரோடு கொஞ்சம் பிஸியாக இருக்கவே  எங்கள்  அருகே சாலையை கடக்க இருந்த டச் பெண் டிராபிக் சிக்னல் கம்பத்தின் கீழிருந்த ஏதோ பொத்தானை அழுத்த அது வாகனங்களை நிறுத்தி எங்களை போக சொல்லியது. குளிர் அதிகமாக நாங்கள் டீ குடிக்கலாம் என்று  ஒரு டீ கடைக்குள் நுழைந்தோம். ஆர்டர் செய்து சர்க்கரையை கொட்டியும் குடிக்க முடியாமல் உள்ளே இருந்த ஹீட்டருக்கு வேண்டி சற்று நேரம் அமர்ந்தோம். பின் எழுந்து வெளியே வந்து திரும்பவும் நடந்தோம். சைத்ரா இன்னும் சில இடங்களை பார்க்க வேண்டும் என்றாள். நான் என்னால் இந்தக் குளிரை சமாளிக்க முடியவில்லை என்றேன். நாம் ட்ராம் பிடித்து டாம் ஸ்கொயர் செல்லலாம் அங்கே க்ரூஸ் பார்க்க வேண்டும் என்றாள். சரியான ட்ராம் எது எனக் கண்டு பிடிக்க எங்களுக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. மூன்று ட்ராம்களில் மாறி மாறி ஏறினோம். ஆனால் முதலில் வந்த ட்ராம் போல அல்லாமல் இங்கே யாரும் டிக்கெட் கொடுக்கவில்லை. பயணிகள் ஏற்கனவே வைத்திருந்தார்கள். நான் இயக்குனரிடம் சென்று டிக்கெட் என கேட்க அவர் என்ன பதில் சொன்னார் என புரியவில்லை  ஆனால் டிக்கெட் எதுவும் கொடுக்கவில்லை. பயணிகளிடம் கேட்க அவர்களுக்கும் சரியான பதில் தெரியவில்லை. நாங்கள் டிக்கெட் எடுக்காமலேயே ட்ராமில் இருந்து இறங்கினோம்.

டாம் ஸ்கொயர் ராயல் பேலஸ் முன் நின்று புகைப் படம் எடுத்தோம். அப்போது எங்களுக்கு அது இன்ன இடம் என்று தெரியவில்லை. நிறைய பேர் அங்கே நின்று புகைப் படம் எடுத்தார்கள். அப்பொழுது சைத்ரா சொன்னாள் இது ஏதோ வரலாற்று சிறப்பு மிக்க இடம் என நினைக்கிறேன் என்றாள். அங்கே இருந்து வந்த பிறகு தான்  அது ராயல் பேலஸ் என்று தெரிந்தது. அங்கே இருந்து கொஞ்சம் முன்னே நடந்து ஒரு தெருவுக்குள் நுழைந்தோம். தெருவின் துவக்கத்திலேயே இருந்த ஒரு கடையில் மூவரும் நுழைந்தோம். அந்தக் கடை முழுக்க உடைகளே நிறைந்திருந்தது. நானும் சைத்ராவும் சின்ன சின்ன நினைவுப் பரிசுகள்  வாங்கலாம் எனக் கிளம்பினோம். லீனா அந்தக் கடைக்குள்ளேயே இருப்பதாக கூறினாள். எங்கள் ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்து லீனாவை அடைந்தோம். அங்கே இருந்து ட்ராம் பிடித்து மீண்டும்  டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஸ்டேஷன் வந்து ரயில் பிடித்து நாங்கள் டாக்சியில் வந்து இறங்கி இடத்தை அடைந்தோம். அங்கே இருந்து ஹோட்டல் செல்ல பஸ்க்காக காத்திருக்கும்போது காற்று இத்தனை வினாடிக்கொரு முறை என்று  குறித்து வைத்ததுபோல தொடர்ந்து வீசியபடி இருந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்த சைன் போர்டு   நாங்கள் செல்ல வேண்டிய பஸ் இன்னும் எத்தனை நிமிடத்தில் வரும் என்று துள்ளியமாக காட்டியது. ரயில் நிலையத்திற்கு நேர் எதிர் தான் இந்த பஸ் நிறுத்தம் என்றதாலும், எங்கள் பஸ் வர இன்னும் நேரம் இருந்ததாலும் நாங்கள் திரும்பவும் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து நுழைவாயிலிலேயே நின்று கொண்டு கண்ணாடிக் கதவு வழியாக வருகிற பஸ்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது என்ன செய்வதென தெரியாமல் எனக்கு நேரே தனியாக அமர்ந்திருந்த  இந்தக் கிளியை படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.



பஸ் வந்ததும் ஓடி வந்து ஏறினோம். பஸ் டிரைவரிடம் டிக்கெட் வாங்கும்போது அவர் இனிமேல் வெளியே செல்லும்போது ரவுண்டு ட்ரிப் டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு சீப் ஆக இருக்கும் என்றார். நெதர்லாந்த் மக்கள் நெகிழ்ந்த தோழமையுடன் பழகினார்கள். இப்படியாக  அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு வந்து உறங்கினோம்.
அடுத்த நாள் மதியம் தான் எங்கள் ப்ரோக்ராம் துவக்கம் என்பதால் எங்களுக்கு காலையிலேயும் கொஞ்ச நேரம் கிடைத்தது. நாங்கள் இருந்த ஹோட்டல் அருகேயே நடந்து வரலாம் என முடிவு செய்து நடந்தோம். ஹோட்டல் ரிசெப்சனிஸ்ட் பக்கத்தில் ஒரு சர்ச் இருக்கிறதெனவும் அங்கே செல்லலாம் எனவும் சொன்னார்.

வெளியே வந்ததும் நெதர்லாந்த் சைக்கிள்களுக்கு உகந்த நகரமாய்/நாடாய் இருப்பதை பார்க்க முடிந்தது. சைக்கிள்களுக்கென தனியான ட்ராக் இருந்தது எனவே சைக்கிள்கள் நிறைய புழக்கத்தில்  இருந்தன. ஈக்கோ பிரெண்ட்லியாக, தூய்மையாக, பிளாஸ்டிக் அற்ற மனதை சிறை பிடித்துக் கொள்கிற ஊர் இது.
சைக்கிள் பாதையில்  நாங்கள் மெதுவாக நடந்தோம். அத்தனை அற்புதமான வீடுகள் இதுவரை நான் நேரில் பார்த்திராதது. அந்த வீடுகள் மேல் நான் காதல் கொண்டேன். இதோ சில வீடுகளை இதில் இணைக்கிறேன்.



நெதர்லாந்தில் வுட்டன்  ஷூக்கள் தங்களுக்கென பிரத்யேகமான இடத்தைப் பெற்றுள்ளன. ஏன் எங்கு  பார்த்தாலும் ஷூக்கள்  இருக்கின்றன என்று கேட்டதற்கு இங்கே விவசாயிகள் நிறைய உபயோகித்தார்கள் அதனால் அது பிரசித்தம் என்றார்கள். இதோ இந்த வீட்டிற்கு முன்னால் பாருங்கள் வுட்டன் ஷூவை எவ்வளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.


அதற்கு மேல் க்யூட்டாக இருக்கும் அந்தக் குட்டி குருவியையும் பாருங்கள்.
இதோ இந்தக் கதவும் எனக்குப் பிடித்தது.




இந்த கிரீன் ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்திருந்த பழங்கள் எடுப்பார் அற்றுக் கிடந்தது.
இப்படியே படம் பிடித்துக் கொண்டு நடந்து சர்ச் வந்தடைந்தோம். சர்ச்சை சுற்றி எடுத்த சில படங்கள்.




இப்படியாக அன்றைய பயணம் இனிதே முடிந்தது...
...மேலும் ...

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திக்... திக்... திக்...

படங்கள் பிரமாதம்...

Sugirtha said...

உங்கள் தொடர் வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்.

shri Prajna said...

நல்லா எழுதிட்டிருக்கே டா..really interesting...awaiting for ur next episode..

Sugirtha said...

Got Lazy, will try to write da ;)