Monday, December 31, 2012

பேலே (Ballet)



Photo Courtesy: Koushik

 
கார்த்திகேயன் சார் தலைமையில் ஒரு நேர்த்தியான ட்ரெக்கிங் குழு அமைந்திருப்பது இப்பொழுதெல்லாம் எங்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. குழுவில் ஒவ்வொருவருக்கும் புகைப்படம், கடினமான ட்ரெக்கிங்,  என ஒவ்வொரு ஆர்வம் என்றாலும் எனக்கு எதில் ஆர்வம் என்று இன்னும் தெளிவாக விளங்கவில்லை. ஒரு விஷயம் எனக்கு காடு பிடித்திருக்கிறது. காட்டின் அழகை அதன் மர்மத்தை ரசிக்கிறேன். காடு எல்லோருக்குமான இடமாக இருக்கிறது. அதன் அன்பு எல்லையற்றதாக இருக்கிறது. காடு எப்போதும் திறந்திருக்கிறது என்றாலும் மனிதனின் குரூரங்களுக்கு பயந்து மனிதனுக்கு மட்டும் அதையும் பூட்டி வைக்கிறார்கள். காடு ஒவ்வொரு க்ஷணமும்  உயிர்தெழுகிறது. அதன் மெல்லிய மூச்சை உணர நாம் ஆழ்ந்த மௌனத்தோடு இருக்க வேண்டும்.

போன முறை போனது தார்னி ஸ்ரப் பாரெஸ்ட்(thorny shrub forest). இந்த முறை ஒரு  கிராஸ் லாண்ட் பாரெஸ்ட்(Grass Land Forest). அதுவும் புலிகள் காப்பு பகுதி.பஸ் மாறி மாறி இடத்தை சென்று சேரவே மாலை ஆகி விட்டது.அங்கிருந்து கொஞ்ச தூரத்திற்கு ஜீப் பயணம். ஜீப்பில் செல்லும்போது நிறுத்தி டைகர் ஸ்கேட்(Tiger Scat) பார்த்தோம்.  
ஸ்காட்ன்னா வேற ஒன்னுமில்லங்க அது  புலியோட ஆய். ஸ்காட்டில் மான்  அல்லது அது சாப்பிட்ட வேறு ஒரு விலங்கின் முடிகள் இருந்தது.முடிகளை வைத்தும் மற்றும் ஸ்காட்டின் சுற்றளவை வைத்தும்  
அது இன்ன  விலங்கு என  கண்டறிகிறார்கள்.ஜீப் பயணம் முடிந்து குவாட்டர்ஸ் சென்றடைந்தோம்.அது மிக   மிக அழகான ஒரு இடம். 

உள்ளே சென்று பேக்கை போட்டுவிட்டு கொஞ்சம் மேலேறி காட்டுக்குள் நடந்தோம்.அந்தக் காடு  நிறைந்த புல்வெளிகளைக் கொண்டிருந்தது.அது மேடுபள்ளமாக இருந்தது. மேடுகளெல்லாம் புல்வெளிகளாகவும் பள்ளங்களில் மரங்களையும்  கொண்டிருந்தது. வளைந்து நீளும் இரண்டு மேடுகளுக்கு மத்தியில் இருந்த சிறு பள்ளங்களில் திட்டுகளாக அடர்ந்திருந்த மரங்களை ஷோலாஸ் என்றனர். அந்த புல்வெளிகள் மற்றும் மரங்கள் மழை நீரை சேமிக்க உதவி செய்வதை அறிந்தேன். உச்சியை அடைந்து சற்று இளைப்பாறி விட்டு  இருட்டத் துவங்கவே கீழே இறங்கி வந்தோம். எங்கள் உடன் சமைக்கவென ஒருவரை அழைத்து வந்திருந்தோம். அவர் கொடுத்த சப்பாத்தியை சாப்பிட்டு முடித்து குளிருக்கென வளர்க்கப்பட்ட தீயை சுற்றி நடு இரவு  வரை பேசி இருந்தபோது குளிர் தெரியவில்லை. குழுவில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள அந்தப் பேச்சு உதவியது. நேரம் ஆகிவிடவே எழுந்து சென்று படுத்து ஒரு அரை மணிக்குள்ளாகவே உடலின் துளைகளை குத்தத் துவங்கியது குளிர். தலை முதல் பாதம் வரை முழுக்கப் போர்த்தியும் குளிர் விடவில்லை. பாகில் இருந்த எல்லா பான்ட், ஸ்வெட்டர்,  சாக்ஸ், குல்லா க்ளௌவ்ஸ் என்று எல்லாவற்றையும் எடுத்துப் போட்டும் குளிர் அடங்கவில்லை. குளிரோடேயே விடியத் துவங்கியது. ஒருவர் பின் ஒருவர் எழுந்து கொள்ள ஒரு நிமிடம் எல்லோர் கம்பளியையும் போர்த்திக் கொண்டு உறங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. எப்படியோ நானும் எழுந்தேன். 

கல்கூட்டி ஒரு பெரிய சட்டியை வைத்து தண்ணி காயவைத்துக் கொண்டிருந்தார் சமையல் உதவிக்கு வந்திருந்த ஒரு தாத்தா. அதை சுற்றி இருவர் அமர்ந்திருக்க நானும் சென்று அமர்ந்தேன். குளிர் குறைந்தது. ஒரு ப்ளாக் டீ குடித்துவிட்டு நானும்  தோழிகள் இருவரும் (ஸ்ரீ மற்றும்  சுமா) சிறிது தூரம் நடந்து வரலாம் எனக் கிளம்பினோம். ரோட்டை ஒட்டி இருந்த  எல்லாப் புதருக்குள் இருந்து எப்போது பாயலாமென புலியின் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அந்தப் பயணம் கொஞ்சம் திகிலாய் இருந்தது. இன்னும் நன்றாக விடியவில்லை. ஒருகட்டத்தில் எல்லோரும் தேடுவார்கள் என திரும்பி வந்தோம். நினைத்தது போலவே காத்திருந்தார்கள். மறுபடியும் ஒரு டீ குடித்துக் கொண்டு ட்ரெக்கிங் சென்று மதியம் சாப்பிட உணவுப் பொட்டலத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு ட்ரெக்கிங் கிளம்பினோம்.


சிறிது தூரம் நடந்துமெல்ல புதர்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கத் துவங்கினோம். வெயில் அப்போதுதான் ஏறத் துவங்கி இருந்தது. நடந்த கொஞ்ச தொலைவிலேயே  உயர்ந்து அடர்ந்து நின்ற பைன் மரங்கள்  (தேவதாரு) நிழலைப் பரப்பி இருந்தன. மரங்களுக்கு ஊடே ஓடிய பாதையில் காய்ந்த பைன் இலைகள் விழுந்து மூடி இருந்தது. அந்த இலைகள் மேல் நடக்கையில் ஒரு சில இடங்களில் கால் வழுக்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவதாரு இலைகளை உதிர்த்தபடியே இருந்தது. அடுக்கு இதழ்களைக் கொண்ட பைன் கோன்கள் காடு முழுக்க இறைந்து கிடந்தது. 

தேவதாரு மரங்களைத் தாண்டி நடக்கையில் எங்கள் முன் நீண்டிருந்த மிக அழகான புல்வெளியைப் பார்த்தோம். அது மிக மிக அழகான சமவெளி. புல்வெளியில் சற்று தூரம் நடந்து சுற்றிலும் ஒரு முறை பார்க்கையில் தூரத்தில் தெரிந்த தேவதாரு மரத்தின் அழகிய வடிவம் அந்த இடத்திற்கு மிகுந்த அழகைக் கொடுத்தது. புகைப்பட பிரியர்கள் புகைப் படங்களை எடுக்கத் துவங்கினர். நாங்கள் எல்லோரும் நின்று குழுவாக புகைப் படம் எடுத்துக் கொண்டோம்.அப்போது  வானம் சுத்தமான நீலத்தில் இருந்தது. 

இன்னும் சிறிது தூரத்தில்புல்வெளியின் நடுவே ஓடிய ஓடை புல்வெளியை  
இரண்டாக பிளந்து கொண்டிருந்தது. ஓடையை ஒட்டி கள்ளிச் செடி வகையை சார்ந்த செடி அங்கங்கே முளைத்திருந்தது. அதன் அத்தனை இதழ்களும் ஒரே சுற்றிலிருந்து துவங்கி அடுக்குகளாக விரிந்திருந்தது. அதன் இலைகள்  நீளமாகவும்முனை கூர்மையாகவும் இருந்தது. அது ஒரு தனி அழகாக இருந்தது. இருக்கை கூட்டி நீரை சேமியுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துவது போல அதன் இலைகள் நடுவில் இறுக்கமாக பிணைந்து நீரை சேமித்து வைத்திருந்தது. ஓடையில் மிக குறைந்த நீர் வடிந்து கொண்டிருந்தது. ஓடையின் நடுவே இருந்த வட்ட கற்கள் மேல் கால் வைத்து ஓடையைக் கடந்தோம்.


கடந்து மீதமிருந்த புல்வெளியை தாண்டி இன்னொரு ஷோலாவுக்குள் 
நுழைந்தோம். அது எங்களை முழுவதுமாய் மறைத்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நண்பர்கள் பின் தங்கி இருந்தார்கள். ஸ்ரீ உள்ளிட்ட சிலர் விறு விறுவென மேலேறிக் கொண்டிருந்தார்கள். நானும் சுமாவும் இடையில் நடந்தோம். உடன் சமைக்க வந்தவர் தான் எங்களுக்கு 
 வழிகாட்டியும் கூட.அவர் அப்போதுதான் 25சதவீதம் நடந்திருக்கிறோம் என்றார்.
நின்று நின்று மேலேறத் துவங்கினோம்.  எனக்கு முழுவதும் நடந்து முடிப்போமா  
என்றிருந்தது.   உச்சியை அடைவது என் இலக்காக இருக்கவில்லை.இன்னும்  
கொஞ்ச தூரம் நடக்கையில் நான் சுமாவிடம் என்னால் முடியவில்லை என்றேன்.
அது மேடுகளாக இருந்தது.முடியும் சற்றும் இளைப்பாறி வா என்றாள் சுமா.
ஆனந்த் வந்து உடன் சேர்ந்தார்.அவருடன் பேசியபடியே சிறிது தூரம் ஏற  
முடிந்தது.நின்று நின்று ஒரு வழியாய் முக்கால் பாகம் வந்தேன். அதற்கு மேல் செங்குத்தாக இருந்த மேட்டில் ஏறி  
உச்சியை அடைய வேண்டும். எனக்கு முடியும் என்று தோன்றவில்லை. அங்கே பாறையில் அப்படியே நானும் சுமாவும் அமர்ந்தோம். ஆனந்த் மேலே செல்லலாம் என்றார். என்னால் முடியாது என்று நான் பாறையில் சுமாவுடன் நின்றுவிட்டேன்.

ஸ்ரீ உச்சியை அடைந்திருந்தாள்.  அவளுக்கு இலக்கு அது. அவள் அதை ஒரு விளையாட்டாய் செய்தாள். எனக்கு மிகுந்த களைப்பாய் இருந்தது. இளைப்பாற சிறிதேனும் நிழல் கூட இல்லை.தங்க நிறத்தில் காய்ந்த புற்கள் நிறைந்திருந்தது. வெயிலிலும் குளிரை அங்கேதான் உணர்ந்தேன். மேலே இருப்பவர்கள் கீழே இறங்கும் வரை இந்த இடத்தை ரசிக்கலாம்.   வெயிலையும் பொருட்படுத்தாது பாறையின் மேல் அப்படியே படுத்து அயற்சியில் கண் மூடினேன். அதற்கு பிறகு சில நிமிடங்கள் ஒரு மாய உலகத்தில் இருந்தது போல் இருந்தது. கண்விழித்து பார்க்கவும் கடலின் தூய அலையைப் போல திரண்டு வந்த வெண் மேகம் முகட்டில் மோதி மோதி தெறித்தது. ஒரு மேகம் அதில் மோதி உருமாறி பெண்ணுருக் கொண்டது. நான் படுத்த படியே பார்த்தேன். வெண்ணிற உடைதரித்தஅது நீலவானப் பின்னணியில் தன்  பேலே நடனத்தை நிகழ்த்தியது.   

உண்மையில் பேலே நடனம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கேட்டதுமே ஒரு சில பெயர்களை பிடித்துப் போகிறது. அப்படித்தான் எனக்கு பேலேயும். வெண்ணிற உடையில் ஒரு பெண் தன் கால்களையும் கைகளையும்  நீட்டி நளினமாக ஆடிக் கொண்டிருக்கும்  ஒரு ஸ்டில்லை பார்த்துவிட்டு  என் மனது தனக்கு பிடித்த வகையில் ஒரு விளக்கத்தை அதற்கு கொடுத்திருந்தது. அது என்னவென்றால் பேலே ஒரு அக விடுதலை. அதுவும் ஒரு பெண் பேலே ஆடும்போது அவள் தன்னை மறந்து தன் சிறகுகளை விரித்து ஆடுகிறாள். 


உண்மையில் பேலே நடனத்திற்கு பாரம்பரிய இசையும், நுட்பமும் தேவைப் படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நடனம் ஆடுபவள் புற உலகின் எந்த இசைக்கும் கட்டுப்படாமல் தன் ஆத்ம இசைக்கு ஆடுகிறாள். ஆடும்போது அவள் உடல் கரைந்து இறகுகளின் மென்மையை எட்டுகிறது.
இடையற்ற இந்த மேகமும் தன்னை மறந்து ஒரு காலை மேலுயர்த்தி ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னொரு காலின் நுனியில் சுற்றி சுற்றி காற்றின் கலந்து  தன்  ஆத்ம இசைக்கு ஆடிக் கொண்டிருக்கிறது.

நன்றி: இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய மற்றும் ஸ்கேட்
ஷோலாஸ் குறித்த விளக்கம் கொடுத்த கார்த்திக் சார்க்கு   நன்றி.
இடம்: Hush Suspense 

         
   



2 comments:

shri Prajna said...

welcome back my dear friend.."காடு எல்லோருக்குமான இடமாக இருக்கிறது. அதன் அன்பு எல்லையற்றதாக இருக்கிறது." yes absolutely..
"காடு ஒவ்வொரு ஷணமும்உயிர்தெழுகிறது. அதன் மெல்லிய மூச்சை உணர நாம் அழ்ந்த மௌனத்தோடு இருக்க வேண்டும்." ஆழ்ந்த அற்புதமான வரிகள்...
”மனிதனின் குரூரங்களுக்கு பயந்து மனிதனுக்கு மட்டும் அதையும் பூட்டி வைக்கிறார்கள்.” உண்மைதான்...
எவ்வளவு விசித்திரங்களை உள்ளடக்கி இருக்கிறது... மனசெல்லாம் பறக்கத்தொடங்கி விடுகிறது.. you should have attached some photos da.. nice write up.. I miss your writings..please write frequently ...

Sugirtha said...

thanks for dropping by & leaving ur comments... என்னவோ போட்டோஸ் போட தோணல டா. நீ போட்டோ போட்டு உன்னோட version எழுது... :-)