Wednesday, February 6, 2013

வாசிப்பு - 19 டி.எம். சாரோனிலிருந்து

நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு சமீபமாக ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. 19 டி.எம். சாரோனிலிருந்து இந்தப் பெயரைக் கேட்டதுமே ஏனோ படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்னதென்று தெரியாமல் அந்தப் பெயர் எனக்கு மிக பிடித்திருந்தது. பிறகு தான் ஆசிரியர் பெயர் பார்த்தேன் பவா செல்லதுரை. அழியாச் சுடரில் இவரின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" என்ற ஒரு சிறுகதை படித்திருக்கிறேன். அப்பொழுதுதான் முதன் முதலாக அவர் கதையைப் படிக்கிறேன். படித்து நீண்ட நேரம் அதையே சுற்றி வந்தது மனது. அவ்வளவு அழுத்தமான கதை. படிக்கும்போது அடி வயிற்றை தடவிப் பார்க்கும் கர்ப்பிணியின் மனதை பெற்ற இதயம் கதை படித்து முடித்த பிறகும் சில நொடிகள் திக் திக் என்று விட்ட பிறகே ஆசுவாசப் பட்டது.

அதற்குப் பிறகு என் நண்பர் அறிமுகப் படுத்திய கூடு இணையத்தளத்தில் கதை சொல்லிப் பகுதியில் பவா, வம்சி, மானசி மூவரின் கதைகளையும்  இரண்டு முறை கேட்டிருக்கிறேன். ரொம்ப தெளிவாக நேர்த்தியாக கதை சொல்லி இருந்தார்கள். ஷைலஜாவின் சிதம்பர நினைவுகள் மொழிபெயர்ப்பை படித்திருக்கிறேன். மிக பிடித்திருந்தது. ஒட்டு மொத்த குடும்பத்தின் கலை ஆர்வம் வியப்பாய் இருக்கிறது.

போன வாரம் எப்படியோ வம்சி இணையதளத்திற்கு சென்று ஏழு புத்தகங்களை ஆர்டர் செய்தேன். எனக்கு மிக குறைந்த வாசிப்பனுபவம் மற்றும் மிக குறைந்த எழுத்தாளர்களை மட்டுமே தெரியும் என்பதனால், ஏழு புத்தகங்களில் பவாவுடைய மூன்றையும் மாதவிக் குட்டி கதைகளையும் தவிர மற்ற மூன்று புத்தகங்களை வெறும் தலைப்புகளை கொண்டு மட்டுமே தேர்வு செய்தேன். புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட பின் முதலாக அகிலின் "கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்பிலிருந்து முதல் சிறுகதைப் படித்துவிட்டு பின் சாரோனை எடுத்தேன்.

பவாவின் 19 டி.எம். சாரோனிலிருந்து ஒரு கட்டுரை தொகுப்பு என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. எதுவாக இருப்பினும் அதை படிக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. எடுத்து படிக்க துவங்கியதும் கீழே வைக்கவே மனதில்லாமல் போனது. படிக்க படிக்க அத்தனை பரவசமாக இருந்தது. புது புது மனிதர்களையும் புது புது அனுபவங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதிலும் அந்த அனுபவங்கள் எல்லாம் கலைஞர்களுடனானது என்பது விசேஷமானது. எவரைக் குறித்தும் தனியான நீண்ட விளக்கங்கள் எதுவும் அற்று அந்த நிகழ்வின் ஊடேயே விவரித்திருந்தது வெகு இயல்பாய் இருந்தது.  பாதி படித்துவிட்டு எப்பொழுது தூங்கினேன் தெரியவில்லை.

காலையிலும் எழுந்து எல்லா வேலைகளையும் மற்றும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பையும் கொஞ்சம் ஒத்தி வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு லீவ் போட்டுக் கொண்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. அது முடியாது என்பதால் அலுவலகம் சென்று வந்து தற்போது தான் படித்து முடித்தேன்.

காயத்ரி கேம்யூஸின் புகைப்படத்தை அந்தக் கட்டுரையைப் படித்தபிறகும் எத்தனை முறை திருப்பி பார்த்திருப்பேன் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாது பினுவின் பூனைக் குட்டி, வல்சனின் சைக்கிள் பயணம், திருவண்ணாமலையின் தெருக்கள் இங்கு எல்லாம் அல்லது இதிலெல்லாம் இன்னும் அலைந்தபடி இருக்கிறது மனது. தலைப்பு/ முகவரி முதன் முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறை வாசிக்கும் போது வசீகரித்தபடியே இருக்கிறது.

2 comments:

shri Prajna said...

அன்பு சுகி,
எப்பிடி இருக்கே..உன் எழுத்த படிக்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம்.. நிறைய தொடர்ந்து எழுது..
”திருவண்ணாமலையின் தெருக்கள் இங்கு எல்லாம் அல்லது இதிலெல்லாம் இன்னும் அலைந்தபடி இருக்கிறது மனது” உண்மை தான்.. அப்படி ஒரு வசீகரம் இருக்கும் பவாவோட எழுத்தில.. படிக்கிற பழக்கம் இடையில காணாம போயிருந்தது.. மறுபடியும் நீ கொடுத்த பவாவோட “எல்லா நாளும் கார்த்திகை” தான் தொடங்கி வச்சிருக்கு..நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் கருவரைங்கிற தலைப்பே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...

Sugirtha said...

நீ மறுபடியும் படிக்க துவங்கி இருப்பது சந்தோஷம் டா :-)
பவாவோட எழுத்து ரொம்ப பிடிச்சிருக்கு.