நினைக்கவே கூடாதெனினும்
நம் காதலை எந்நாளும்
மறக்க முடிவதில்லை என்னால்
வெளிவராத நாள்பட்ட முள் ஒத்த
அந்த நினைவுகள் தடவுகையில்
வலிக்கிறது சுகமாய் உள்ளே
சர்க்கரை சீசாவினுள் நுழையும்
சிறு எறும்பின் ஆவலோடு
ரகசியப் பெட்டகம் திறந்து
உள்ளிறங்கி
எப்போதோ பதுக்கியிருந்த
புகைப்படம் எடுத்து
உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை
கலைந்து கிடக்கும்
நம் காதலின் மிச்சங்களை
கடந்து இன்னும் உள் செல்கையில்
தூசுபடிந்த வீணையிலிருந்து
நீயின்றி உயிரற்று
நீர்த்த கணங்கள் மீட்டிய
வார்த்தைகளற்ற இசை
வழிகிறது பெட்டகம் முழுக்க
என்றாவது வருவாய் என
காத்திருந்த நம்பிக்கைகள்
நசுங்கிக் கிடக்கிறது ஆங்காங்கே
அடி மனம் திறந்து கதறி
அவ்விடம் கடக்கையில்
கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்
6 comments:
ரொம்ப நல்லா இருக்கு சுகி.
//உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை//
...
//கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்//
இதற்குப் பாராட்டு ஒரு நீண்ட புன்னகையும், இரு துளி கண்ணீரும். :`)
"சுகந்தக் குப்பி " scent bottle-க்கு இவ்வளவு அழாகான தமிழ் இருப்பதையே நான் அறியவில்லை...
இதே போல் அழகான தமிழ் வார்த்தைகளை நானும் உபயோகப் படுத்த ஆசை , ஆனால் எனக்கு இவ்வளவு அழாகான தமிழ் வார்த்தைகள் தெரியாதே !
தவிப்பும், ஏக்கமும் இதமாய் வருடிச் செல்கின்றன கவிதையில்.
கவிதையை கொஞ்சம் வார்த்தை சிக்கனத்தோடு எழுதினா நன்றாக இருக்கும் சுகிர்தா.
யாத்ரா, ஒளி, மாதவராஜ், லாவண்யா - உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment