Thursday, May 20, 2010

வலை

இப்போது தான் பார்கிறேன்
மேல் செல்லும் படிக்கட்டில்
ஒரே இரவில்
இத்தனை அழகாய்
இழைத்திருக்கிறது அந்த வலையை
எல்லாத்திசைகளையும் அடைத்து
அளந்து வைத்த நேர்த்தியுடன்
காற்றின் போக்குக்கு அசைந்து
ஆனாலும் கலையாது
எப்படி சாத்தியம்
இந்த அசாத்திய நுண்கலை

எழு சூரிய ஒளியில்
ஒவ்வொரு நூல் இழையும்
மினுக்கிறது பிசு பிசுப்பாய்
ஆர்வம் தொற்ற
ஆராய்கிறேன் மெல்ல
அதன் ஓரங்களெல்லாம்
மூலைக்கொன்றாய் நீள்கிறது
ஒரு நூல் பற்றி
நான் தடுமாறி மேலேற
நீண்டுகொண்டே இருக்கிறது
அந்த ஒற்றை நூல்
முடிவு தெரியாமல்
வலை முழுக்க
சுற்றி வருகிறேன்
நடுவில் அமர்ந்தபடியே
அமிழ்ந்த புன்னகையுடன்
அனைத்தையும் பார்கிறதந்த
கருஞ் சிலந்தி

5 comments:

யாத்ரா said...

சிலந்தியும் அதன் பிரம்மாண்ட வலையும் பார்க்க பார்க்க பிரம்மிப்பூட்டுபவை. ரொம்ப நல்லா இருக்கு சுகி

உயிரோடை said...

சில‌ந்தி வ‌லை ஒரு ப‌டிம‌ம். க‌விதை ந‌ல்லா இருக்கு சுகி

Li. said...

எப்புடிங்க? :-) ஒரு பரவ்யோட பார்வைல இருந்து மனுஷங்க வீடு...!

...சிலந்தி வலையோட அழகு அதில் இன்னும் சிறிது நேரத்தில் சிக்கிக் கொள்ள போகும் பூச்சியின் பார்வையிலிருந்து... !

உங்களுக்கு மட்டும் எப்டி இவ்ளோ அழகான கற்பனைகள் வருது... எனக்கு ஆச்சர்யத்துலையும் பொறாமைலயும் அழுகையே வருது... :-) வாழ்த்துக்கள்...

Sugirtha said...

ஒளி,
ஒரு கவிதையை இத்தனை நுணுக்கமாய் ஆராயும்/அனுபவிக்கும் உங்கள் அணுகுமுறையை நான் வியக்கிறேன் - கூடவே அதை அழகாய் வெளிப்படுத்தும் உங்கள் ஆற்றலையும்!

எப்போதும் போல் இப்போதும் என்னை ஊக்குவிக்கும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி! :)

Sugirtha said...

நன்றி லாவண்யா! :) நன்றி யாத்ரா! :)