Thursday, September 11, 2014

A time of My Own

A time of My Own – Part I

பல வருடங்களுக்கு முன் 'Eternal sunshine of the spotless mind' பார்த்த போது திரைப்படங்களில் எனக்கான தெரிவு புலர்ந்தது. 'Revolutionary Road' பார்த்தபோது அந்த பாத்திரத்தில் என்னையே ஊற்றி வைத்திருந்தார்கள் என்றே தோன்றியது. அதைத் தொடர்ந்து Reader பார்த்தபிறகு ஆஹ் Kate! என் ஆதர்ஷம் என்றேன். அந்த Kate யை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. Yes, I adored that personality! என்னவோ தெரியவில்லை 'Revolutionary Road' படத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சுச்சி என் நினைவில் தவறாமல் வந்து கொண்டே இருப்பாள். சுச்சியின் நடையோ, பேச்சோ எதுவோ ஒன்று எனக்கு அந்த Kate யை நினைவுபடுத்தும். சுச்சியின் முழுப் பெயர் சுசித்ரா. அவளை சுச்சி என்று அழைக்கப் பிடித்திருந்தது. சுச்சி என்னோடு இரண்டு வருடங்கள் பணி புரிந்தாள். பணியில் இருந்தபோது நான் அவளோடு நிறைய பேசியதெல்லாம் இல்லை. கொஞ்சமே பேசி இருந்தாலும் எதுவோ என்னை அவள் பக்கம் இழுத்துக் கொண்டே இருந்தது. அவள் ஒரு சராசரி வகை அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருந்தேன்.
இரண்டு வருடங்களுக்குப்பிறகு 'Montessori' பயிற்சிக்காக வேலையை விட்டு சென்றாள். யோசிக்கையில் அவள் வேலையை விட்டு சென்று கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் ஆகி விட்டது என்று நம்ப முடியாததாக இருக்கிறது. அவள் வேலையை விட்ட பிறகு தோழி சுமா அவளோடு தொடர்பில் இருந்ததில் சுமா சுச்சியைப் பார்க்க செல்லும்போதெல்லாம் நானும் உடன் செல்வேன். இப்படியான சந்திப்புகளும் அடிக்கடி நிகழவில்லை, விரல் விட்டு எண்ணிவிடலாம். பல மாதங்களுக்கு ஒரு முறை எப்போதாவது ஒரு நல்ல coffee Shop ல் ஒரு மணி நேரம் பேசி இருந்து விட்டு விடைபெறுவோம்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியாகியிருந்த நிலையில் என் நினைவில் அடிக்கடி சுச்சி வந்தவண்ணம் இருந்தாள். ஒரு வாரம் வரை அந்த எண்ணத்தை விட்டுப் பிடித்தேன். பார்க்க விளைகிற ஆவலை மட்டுபடுத்த முடியாமல் ஒரு புள்ளியில் 'நீங்கள் என் நினைவில் வந்த வண்ணம் இருக்கிறீர்கள். உங்களைப் பார்க்க வேண்டும்' என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அப்போது அவள் ஒரு Montessori பள்ளியில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தாள். பள்ளி முடிந்ததும் நான்கு மணிக்கு அலுவலகத்தின் அருகே இருக்கும் coffee shop ற்கு வருகிறேன் என்று பதிலனுப்பினாள். அன்றைக்கு தான் முதல் முறையாக நான் மட்டும் தனியாக சுச்சியை சந்திக்கப் போகிறேன். என்னுடைய அந்த செயல் எனக்கே வியப்பாக இருந்தது. அவ்வளவாக பேசி, பழகி இராதபோதும் இந்த ஒட்டுதல் எப்படி வந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சந்திப்பில் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நான் ஏதோ ஒரு பயண அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.பொதுவாக சுச்சி யாரையும் இடைவெட்டிப் பேசி பார்த்ததில்லை. அவள் ஒரு நல்ல நேயர் (listener).

ஒன்றரை வருடம் முன்பு பூனேவில் வேலை கிடைத்து பெங்களூரை விட்டு சென்று விட்டாள். அவளை கடைசியாக பார்த்தபோது நானும் சுமாவும் ஒரு முறை பூனா வருகிறோம் என்றேன். நான் தனியாகத்தான் வீடு எடுத்திருக்கிறேன் நிச்சயமாக வரலாம் என்றாள். அதன் பிறகு எப்போதாவது மெயில் அனுப்பிக் கொள்வோம். இந்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை என்றதும் நானும் சுமாவும் பூனா போகலாம் என்று பேசிக்கொண்டு சுச்சியிடம் கேட்க, அவளும் மூன்று நாட்கள் விடுமுறை ஓய்வாக இருப்பதாக தெரிவித்ததால் எங்கள் பூனாப் பயணம் துவங்கியது.

வெள்ளி காலை ஐந்து ஐம்பதுக்கு விமானம், நான் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். கிளம்பி சுமாவை வழியில் அழைத்துக் கொண்டு செக் இன் எல்லாம் முடித்து போக போர்டிங் துவங்கியது. விமானத்தில் ஏறியதும் மூன்று பேர் அமரக் கூடிய வரிசையில் ஜன்னலோர இருக்கையில் அமரப் போன ஒருவன், எனக்கு வேண்டுமானால் நான் அங்கே அமர்ந்து கொள்ளலாம் என்றதும் சரி என்று ஆசையாக அமர்ந்து கொண்டேன். மத்தியில் சுமா அமர அவன் aisle இருக்கைக்கு மாறினான். எனக்கு Wing View நன்றாக கிடைத்தது. விமானம் எழத்துவங்கியதும் விமானப் பயணம் எனக்கு உகந்தது அல்ல என்று அறிந்தேன். மேலே இருந்து தலை குப்புற விழப் போவதான எண்ணம் வரத் துவங்கியது. அந்த எண்ணம் வந்ததும் பதற்றம் தொற்றியது. நான் விழுந்தால் எங்கே விழுவேன் எப்படி சிதறுவேன் என்று என் உள்ளே ஒரு விவரணை துவங்கியதும் நடுக்கம் வந்தது. புனேவைப் பார்ப்போமா என்று ஐயம் கொண்டேன். நான் இந்த அச்சத்தை கவனிக்கத் துவங்கினேன். ஒரு பக்கம் இந்த மன ஓட்டம் என்னுள் புன்னகையை வரவழைத்தது. இன்னொரு பக்கம் இது அப்படி ஒன்று நடக்க முடியாதது அல்லவே எந்நேரமும் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் தானே இருக்கின்றன என்று இந்த எண்ணத்தை நியாயப் படுத்தவும் முயன்றேன். சாவை பற்றிய சிந்தனைகள் வரத் துவங்கின. உறக்கத்திலேயே மடிந்து போபவர்களை யோசித்து என்ன ஒரு கொடுப்பினை என்று எண்ணிக் கொண்டேன். எனக்கு எப்படி பட்ட மரணம் நிகழும் என்றும் ஒரு பக்கம் சிந்தனை ஓடியது. இப்படி எல்லாவற்றுக்கும் மத்தியில் விமானம் தரை இறங்கத் துவங்கியது. அந்தக் காட்சியையும் தவற விடவில்லை. மேலே இருந்து பார்க்கும்போது முதல் வித்யாசமாக புனாவின் மண்ணின் நிறம் கருத்தைக் கவர்ந்தது. Pune has Black Soil whereas Bangalore has Red Soil, Rich red.

சரியாக ஏழு மணிக்கு பூனா சென்றடைந்தோம். நான் இயல்பு நிலைக்கு வந்தேன். பள்ளியில் சுதந்திர தின நிகழ்வு இருப்பதால் ஏர்போர்ட் வர முடியாதென்றும் ஏர்போர்டில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வரவும் சுச்சி கூறி இருந்தாள். அவள் சொன்ன படியே பள்ளிக்கு சென்றதும் வாசலில் காத்திருந்த அவள், இந்த சாமானோடு பள்ளியில் இருப்பது உங்களுக்கு சிரமம். நீங்கள் வீட்டுக்கு போய் இருங்கள் நான் ஒன்பது மணிக்கு வருகிறேன் என்றாள். நீங்கள் ஓய்வெடுப்பதானால் ஓய்வெடுங்கள், என்ன தோன்றுகிறதோ செய்யுங்கள் Just feel at home என்றுவிட்டு ஆட்டோ ஓட்டுனரிடம் வழி தெரிவித்தாள். நாங்கள் அடுக்ககத்தை கண்டுபிடித்து அவள் பகுதிக்கு வந்து வீட்டை திறந்தோம். வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்ததில் எனக்கு அவள் பால்கனி ரொம்பப் பிடித்தது. பால்கனியில் இருந்து தெரிந்த காட்சி மிகப் பிடித்தது. நிறைய மரங்களும், புல்புல் பறவைகளும் இருந்தன. பால்கனியில் இருந்து என்னை பிய்த்துக் கொண்டு வந்து சிறிது நேரம் உறங்கலாம் என்று படுத்தேன். முன்னிரவு சுத்தமாக உறக்கமில்லை. உறக்கத்தில் விழும் தருணத்தில் அழைப்பு மணி அடித்தது. எங்களுக்கு காலை உணவு வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுச்சி. சாப்பிட்டு முடித்ததும் மூன்று நாட்கள் என்ன என்ன செய்யலாம் என்று கேட்டாள். எது செய்கிறோமோ இல்லையோ எனக்கு நிச்சயமாக food trail வேண்டும். இங்கத்திய சிறப்பு உணவு வகைகளை எல்லாம் முயற்சித்து பார்க்கணும் என்றேன்.
 
A time of My Own – Part II

நான் உணவு வகைகளை ருசிக்கணும் என்றதும் நிச்சயமாக செய்யலாம் என்றாள் சுச்சி. பிறகு நாங்கள் மற்ற கதைகளைப் பேசத் துவங்கினோம்.தென்னிந்தியர்களுக்கும் இங்கத்தையவர்களுக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன என்றாள். இங்கே பெண்களுக்கு தங்கள் அம்மாக்கள் ஒரு ஆணை/கணவனைக் கவனித்துக் கொள்ளும் முறை குறித்து வெளிப்படையாக நிறைய விசயங்களை சொல்லித் தருகிறார்கள் என்றாள். எனக்கு 'the best way to reach a man's heart is through his stomach' இந்த வரி நினைவுக்கு வந்தது. ஆனால் உணவு மட்டும் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் அம்மாவும் மகளுமாய் எல்லா விசயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசிக் கொள்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இப்படியாக கதைகளைப் பேசிக் கொண்டே மதியம் சாப்பிட்டு நாலு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.

சுச்சி khadki cantonment ல் குடி இருந்தாள். அங்கே இருந்து ஆட்டோ பிடித்து Baji road வந்தோம். ஒரு பழமையான கட்டிடம் அங்கே இருந்ததைக் கண்டேன். அது Vishrambaug Wada வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்றாள். அப்படியா ஆனால் ஏன் இப்படி பராமரிப்பார் அற்றுக் கிடக்கிறது என்றேன். அப்படித்தான் என்று உதடு பிதுக்கினாள். வாடாவைத்தாண்டி கடை வீதிக்குள் நுழைகையில் அங்கே ஒருவர் மீது இன்னொருவர் இடித்து தள்ளிக் கொண்டு தான் நடக்க வேண்டி இருந்தது. அது எனக்கு பெங்களூரின் சிவாஜி நகரை நினைவு படுத்தியது. அத்தனை நெருக்கடியிலும் மக்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் தெரியுமா என்று வினவினாள் சுச்சி. ம்ஹூம் என்றேன். வடாபாவ் crazy people என்றாள். நான் முறுவலித்தேன். வடாபாவ் புனாவின் முக்கியத் தீனியாக இருக்கிறது. நேரம் காலம் பார்க்காமல் தெரு முனைகளில் எந்நேரமும் விற்பனையாகிறது. வானிலை எங்கள் உலாவுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது.

தற்போது நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த சுவர் மிகவும் வித்யாசமாக இருந்தது. பூசாத செங்கற்கள், விட்டு விட்டு போடப்பட்ட கோடுகளைப் போல சுவரில் நேராக அழகாக அடுக்கப்பட்டு இருந்தன. ஊன்றிப் பார்த்ததில் வடிவியல் உருவங்களும் இருந்ததாகப் பட்டது. அங்கேயும் இங்கேயுமாய் சுற்றி விட்டு நடைபாதைக்கு மிக அருகே இருந்த ஒரு சின்ன டீக்கடைக்குள் நுழைந்தோம். மூன்று மேஜைகளும் அதைச் சுற்றி மேஜைக்கு இரண்டென நீளமான இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. அந்தச் சின்னக் கடையிலும் ஓரளவு கூட்டம் இருந்தது. ஒரு மேஜையை சுற்றிப் போடப்பட்டிருந்த இருக்கையில் மத்திம வயதைச் சார்ந்த இரு ஆண்கள் மட்டும் அமர்ந்திருக்க அதற்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் நாங்கள் சென்று அமர்ந்தோம். அமர்ந்தது தான் தாமதம் அவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டார்கள். அவர்கள் அப்படி செய்தது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது. அவர்களுக்கு எங்களின் அருகாமை அசௌகர்யத்தைக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் கடைக்காரர் ஏலக்காய் வாசனையோடு டீ கொண்டு வந்து வைத்தார். அதைக் குடித்து முடிக்கையில் இங்கே நல்ல பூனா காட்டன் புடவை கிடைக்கும் சுகி எதாவது கைத்தறிகடைக்கு செல்லலாம் வாருங்கள் என்றாள் சுச்சி. காட்டன் புடவைகள் என்றதும் சட்டென ஆமோதித்தேன். சுமார் தூரம் கைத்தறிக் கடையை தேடி அலைந்து அப்படி தென்பட்ட ஏதோ ஒரு கடைக்குள் புகுந்தோம். ஆனால் மனதுக்கு பிடித்த வகையில் அங்கே எதுவும் இல்லை எனவே வேறு இடம் செல்லலாம் எனத் திரும்பி நடந்தோம். ஒரு பூக்கடை அருகே நின்று எந்த வழியில் செல்லலாம் என்று சுச்சி யோசித்துக் கொண்டிருக்கையில் சுமா பூக்கடையைக் காட்டி இதோ இந்த மாலைகளைப் படம் எடுத்துக் கொள் என்றாள். அதன் பிறகு தான் மாலைகளைக் கவனித்தேன். சிவப்பு செவ்வந்தியும், சம்பங்கியும் சேர்த்து கட்டப்பட்ட அழகழகான மாலைகள் தொங்கவே அதை படம் பிடித்தேன். அதுவரை சம்பங்கியோடு கோழிக்கொண்டை பூக்களை இணைத்துக் கட்டித்தான் பார்த்திருக்கிறேன். செண்பகம், சம்பங்கி, சாமந்தி என்ற பல பூக்கள் இணைந்த வாசனை.
எந்த ஊருக்கு/இடத்திற்கு சென்றாலும் அந்த ஊரின் வாசனையை முதலில் நுகர வேண்டும் எனக்கு. எப்போதும் வாசனை என் நினைவுகளில் பிரதான இடத்தைப் பிடிக்கும். திரும்பவும் அதே போல வாசனையை வேறெங்கேனும் நுகர நேர்ந்தால் அது நினைவின் பக்கங்களைக் கிளறி முன்னினைவுகளை துல்லியமாகக் கொண்டு வரும்.

கடைசியாக ஒரு புடவை கடைக்குள் நுழைந்து சில புடவைகளை வாங்கிக் கொண்டோம். திரும்பும் வழியில் ஒரு கடையில் மிகப் பெரிய இரும்பு வாணலியில் பிஸ்தா, பாதாம், கேசர் எல்லாம் போட்டு மசாலா பால் காய்ச்சி கொண்டிருந்தார்கள். அதை வாங்கி நடந்து கொண்டே குடித்து வந்ததில் பின்னே ஒரு நாய் தொடர்ந்தது. அது எங்களோடு வெகு தூரம் வந்தது. அப்போது மணி இரவு ஒன்பதைத் தாண்டி இருந்தது. அந்த நேரத்தில் சுடச்சுட பால் அத்தனை இதமாய் உள்ளிறங்கியது. அது சுவைக்கு ரசமலாயின் ரசத்தைப் போல் இருந்தது. ஒரே ஒரு மாறுதல் ரசமலாய் சில்லிட்டு உண்போம் இது சூடாக. மூவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். நான் யோசித்துக் கொண்டு வந்தேன். முன் தினம் சுமாவும் நானும் அலுவலகத்தில் இருந்து கிளம்பவே இரவு எட்டு மணி ஆகியது. அதன் பிறகு வந்து பயணப் பையை தயார் செய்ததில் முன்னிரவும் சரியாக உறங்கவில்லை. பயணம் செய்து இங்கே வந்து இத்தனை நேரம் நடந்திருக்கிறோம் அதுவும் நெருக்கடியான கடை வீதிகளுக்குள் ஆனாலும் நான் சோர்வடையவில்லை. சுமாவைப் பார்த்தால் அவளும் குறையாத உற்சாகத்தோடு தான் இருந்தாள். பொதுவாக எனக்கு கடைவீதிகள் மிகுந்த அயற்சியைத் தரும். ஷாப்பிங் எப்போதும் என் விசயங்களில் ஒன்றல்ல. பெங்களூரில் இருந்தால் வெளியே எங்கும் செல்லாமல் விடுமுறையை உறங்கிக் கழிப்பேன். வீட்டை விட்டு செல்ல மனமிருக்காது. இங்கே எப்படி நான் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். புது இடம் தந்த உற்சாகமா? உடன் வரும் உகந்த துணையா?

சுச்சி இரவு உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள். ரோட்டி சாப்பிடலாம் என்றேன். சரி ஒரு நல்ல பார்சி உணவகத்திற்கு அழைத்துப் போகிறேன் என்றாள். ஓ! இங்கே பார்சிக்கள் இருக்கிறார்களா நான் முன்னே ஒரு முறை பார்சி இனத்தவர் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் என்றேன். தொடர்ந்து அவர்களின் வித்யாசமான ஈமச் சடங்கைக் குறித்து நண்பர்கள் வட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததில் தான் அப்படி ஒரு இனமும் அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை வல்லூறுகளுக்கு புசிக்கத் தருவார்கள் என்றும் அறிந்தேன் என்றேன். இறந்தவர் செல்வந்தரோ எவரோ எல்லாருக்கும் இதே முறைதான். இதைக் குறித்து பேசினோம். சுச்சி நிறைய விசய ஞானம் உடையவள். அவளிடம் எதைப் பற்றியும் பேசலாம். அவள் பார்சி இனத்தவர் ஈரானில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்றும் மேலும் சில தகவல்களும் கூறினாள். நாங்கள் கடையை அடைந்தோம். பத்து மணிக்கும் அந்தக் கடை கூட்டமாக இருக்கவே பெயர் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். அங்கே இருந்த காசாளரைப் பார்த்தேன் அவருக்கு இரானிய சாயல் இருந்ததைப் போல் பட்டது.வெளியே நின்றபோது, சுச்சியிடம் ஒரு விசயத்தில் நான் பூனாவில் ஏமாற்றம் அடைந்தேன் என்றேன். என்ன என்றாள். இங்கே ஆண்கள் வசீகரமாக இல்லை என்றேன். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் என்றாள். ஆனால் காசாளர் அவர்களில் இருந்து தோற்றத்தில் வேறுபடுகிறார் என்றேன். உணவு முடித்து வந்து வீடடைந்தோம். நான் நாளை இரண்டு பார்சி bakery க்கு கூட்டிப் போகிறேன். நீங்கள் நிச்சயம் அங்கே இருக்கும் கேக்கை சுவைக்க வேண்டும் என்றாள். சரி என்றேன். அன்றைய நாள் முடிவுக்கு வந்தது. கொஞ்சம் சுற்றியதில் ஒரு விஷயம் உணர்ந்தேன் நகரமாகவே இருந்தாலும் பூனா இன்னும் பழைய வாசனையோடு இருந்தது. வளர்ச்சி இன்னும் முழுமையாக பூனாவை களவாடவில்லை. ஆனால் இன்னும் சில வருடங்கள் போனால் இது மிச்சம் இருக்காது என்று உணர்ந்தேன்.
 
A time of my own - Part III

காலை எழுந்து பல் துலக்கியதும் சுச்சி ஒரு பெரிய கப்பில் டீ கொடுத்தாள். அதை குடித்துவிட்டு கிளம்பி வெளியே சென்றோம். நாங்கள் முதலில் சென்ற இடம் East Street ல் இருந்த Kayani Bakery. அங்கே நெரிசலைப் பார்த்து நான் திணறிப் போனேன். நீ எந்த நேரம் வேண்டுமானாலும் இங்கே வந்து பார் இந்த கூட்டம் குறையவே குறையாது என்றாள். உனக்கு என்ன வேண்டும் என்று வினவினாள். தகவல் பலகையைப் பார்த்து நான் யோசித்த சிறிய இடைவெளியில் உள்ளே புகுந்தனர் பலர். இங்க எல்லாம் வந்தால் யோசிக்கவே கூடாது என்று Shrewsbury இங்கே பிரசித்தம் என்றும் இரண்டு கேக் வகைகளையும் சிபாரிசு செய்தாள். அவள் சொன்னது போல Shrewsbury cookies மற்றும் சில கேக் வகைகளையும் வாங்கிக் கொண்டேன். யாரேனும் எப்பொழுதேனும் Pune சென்றால் நிச்சயமாக செல்ல வேண்டிய இடம் இது. வீட்டிற்கு வந்து உண்டு பார்த்ததில் அத்தனை சுவை.

பிறகு அங்கிருந்து மகாத்மா காந்தி ரோடில் இருந்த ராயல் பேக்கரிக்கு சென்று அங்கேயும் சில cookies வாங்கிக் கொண்டு காலை உணவுக்கு அருகில் நல்ல உணவகத்தை தேடினோம். கோஹினூர் என்றொரு கடை இருந்தது அங்கே சாப்பிட்டதில்லை இருந்தாலும் முயற்சி செய்யலாம் வாருங்கள் என்று எங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். நீ bun சாப்பிடுவாயா என்றாள். நான் ஒரு bread/butter/bun person என்றேன். ஆம்லெட் என்றாள். கண்டிப்பாக என்றேன். அப்படியானால் நீ bun omlette உண்டு பார் என்றாள். சரி என்றேன். அவள் தனக்கு வெறும் bun னும், சுமாவுக்கு butter bun னும் வாங்கிக் கொண்டாள். பிறகு ஆளுக்கு ஒரு டீ. எனக்கு சுமாவைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது. சுமாவிற்கு bread/butter/bun எதுவும் சுத்தமாக பிடிக்காது. அவள் டீயில் தொட்டு தொட்டு சிரமத்துடன் உண்டு முடித்தாள். நான் சுச்சியிடம் சொன்னேன் Eat Pray Love ல் ஜூலியா இத்தாலியில் இருக்கும்போது நல்ல நல்ல உணவுகளை மகிழ்ந்துண்பாள். ஒருமுறை pizza வை ரசித்துண்ணும்போது அவள் தோழியிடம் ஹ்ம்ம் I am having a relationship with my Pizza என்பாள். அப்படிதான் நான் இப்போது இதை உண்கிறேன். இதென்ன இத்தனை சுவை, I can starve for days to indulge in this என்றேன். அவள் அடக்க முடியாமல் சிரித்தாள். மெது bun உள்ளே மூன்றாய் மடித்து வைக்கப்பட்ட மெல்லிய ஆம்லெட். combination அத்தனை பொருத்தமாக இருந்தது. இதற்கு முன் நான் அதை சுவைத்ததே இல்லை. அதற்காகவே பூனாவின் மேல் மையல் கொண்டேன்.

பிறகு இன்னொரு பகுதியில் நுழைந்தோம். அங்கே தள்ளு வண்டியில் cold coffee நன்றாக இருக்குமென்று சொல்லி வாங்கிக் கொடுத்தாள். உண்மைதான் மிக ருசியாக இருந்தது. இதை ஒவ்வொரு முறை உறிஞ்சும்போதும் நாவின் எல்லாப் பகுதியிலும் படுமாறு உழுமி விழுங்க வேண்டும் என்றேன். அருகில் இன்னொரு தள்ளு வண்டியில் சாபுதானா (ஜவ்வரிசி) வடை கிடைத்தது. அவள் அதை மோசமாக இருக்கிறது என்றாள். சற்று அவ்வழியே நடக்கையில் அங்கே ஒரு jewish கோவில் இருக்கிறது காட்டுகிறேன் என்றாள். ஆனால் எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. சுற்றியும் மணல் மூட்டை அடுக்கி உள்ளே நின்று கொண்டு ஒரு காவலர் காவல் காத்தார். அதை யாரேனும் தாக்க முற்படலாம் என்பதால் அப்படி என்றாள். அந்த கோவில் சுற்றுப்புறம் மிக அழகாக இருந்தது. நான் காவலரிடம் ஜாடையில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்றேன். அவர் புன்னகைத்து இல்லை என மறுத்தார். சற்று தள்ளி சிறிதே சிறிது தெரிந்த கோபுரத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இந்த இடம் இப்போதே இவ்வளவு அழகாக இருக்கிறதே இரவில் எப்படி இருக்கும் என்று உரக்க யோசித்தேன்.

திரும்பும் வழியில் அந்த ஊரின் கொத்தமல்லி வாசம் என்னைக் கட்டிப் போட்டது. அங்கே காய்கறிக் கடை வழி செல்லும்போதும் சரி, உணவிலும் சரி கொத்தமல்லி மணந்தது.அதற்காகவே மதியம் வீட்டிற்கு திரும்பும்போது கொத்தமல்லி வாங்கி சென்று ரசம் செய்தேன். உண்டதும் அவர்களும் நான் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள். மாலை நாலு மணிக்கு எழுந்து பக்கத்தில் ஒரு சிறிய மலை இருப்பதாகவும் அதில் ஏறி வரலாம் என்றும் கூறினாள். நான்கு மணியானதும் நாம் வீட்டிலேயே இருக்கலாமே இதே பிடித்திருக்கிறது என்றேன். இருவரும் ஆமோதிக்கவும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டேன். நெடிதுயர்ந்து அடர்த்தியாக கிளை பரப்பியிருந்த பெருங்கொன்றை மரத்தில் புறாக்கள் மௌனித்து அமர்ந்திருந்தன. பல வினாடிகள் அவை அசையாமல் இருந்த இடத்திலேயே இருந்தன. நானும் அப்படியே அமர்ந்திருந்தேன்.

எனக்கு அந்த வீடு மிகப் பிடித்தது. நான் சுச்சியிடம் திரும்பி நமக்கு பிடித்த வகையில் வசிக்கும் இடத்தை அமைத்துக் கொள்வது, பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்வது என நம் உள் பரப்பில் யாருமே ஊடுருவ முடியாத இடத்தை நமக்கே நமக்கென அமைத்துக் கொள்வது எத்தனை நன்றாக இருக்கும் இல்லையா என்றேன். அவள் பதில் பேசாமல் முறுவலித்தாள். திடீரென யோசனை ஓட do you ever get lonely என்றேன். yes many times என்றாள். அவள் எதையும் வெளிப்படையாக சொல்வதில்லை. நானும் மேலே கிளறவில்லை. She is very subtle, impenetrable. இந்த வகையில் என்னை அவளோடு வெகுவாக தொடர்புபடுத்திக் கொண்டேன். பிறகு பேச்சு திசை மாறி நேரம் கழிந்தது. இங்கேயே உணவை வரவழைக்கலாம என்றாள். இல்லை கொஞ்சம் நடக்கலாம், எனக்கு chinese சாப்பிட வேண்டும். குறிப்பாக momos என்றேன். நல்லது அருகில் ஒரு நல்ல உணவகம் இருக்கிறது போகலாம் என்றாள். நாங்கள் கிளம்பி நடந்த வழியில் pune university அமைந்திருந்தது. அங்கே தான் சமயங்களில் அவள் நடை பயிற்சிக்கு வருவதாகக் கூறினாள். அந்தப் பசுமை என்னைக் கவர்ந்திழுத்தது. உள்ளே சற்று தூரம் நடந்தோம். அலுவலகத்தைக் குறித்து பேச்சு வருகையில், ரொம்ப துக்கமான காரியம் என்ன தெரியுமா என்றேன். என்ன என்றாள். பணத்திற்காக வேலை செய்வது என்றேன். அது சரி தான் நீயாவது பணத்திற்காக என்கிறாய் எனக்கு எதற்காக என்றே தெரியவில்லை என்றாள். நான் இருந்தாலும் நீ இஷ்டப்பட்டதை எந்த தயக்கமும் இன்றி மேற்கொள்கிறாயே அதுவே என்னை பொறுத்தவரையில் பெரிய சுதந்திரம் என்றேன். அவள் எதுவும் பேசவில்லை. சற்று அமைதிக்கு பிறகு நாம் திரும்பலாம் அந்த உணவகம் மூடிவிடும் என்றாள். நான் காலையில் திரும்ப இங்கே வருவோமா எனக்கு இந்த இடம் மிகப் பிடித்திருக்கிறது என்றேன். நிச்சயம் வரலாம் என்றாள்.

நாங்கள் சாலையைக் கடக்கையில் நடுவில் இருந்த தடுப்பு சுவர் கொஞ்சம் உடைந்திருந்தது. அதன் வழியாக அந்தப்புறம் செல்ல முயல்கையில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி என் தொடையில் குத்தியது. துருப் பிடித்திருந்ததாலும், இருளத் துவங்கி இருந்ததாலும் அந்தக் கம்பியை நான் கவனிக்கவில்லை. நல்ல வலி. வெளிச்சத்தில் பார்கையில் காயம் எதுவும் ஆனாற்போலில்லை. உணவகம் சென்று உடைக்கு மேலாக தொட்டுப் பார்கையில் லேசாகத் தடித்திருந்தது. லேசாக ரத்தம் கசிந்திருப்பதும் தெரிந்தது. சுச்சியிடம் I think I will get a TT done என்றேன். சரி பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது சாப்பிட்டு போகலாம் என்றாள். அந்த உணவகம் எனக்கு பிடித்துப் போக மேஜையில் இருந்த ஒற்றை மெழுகுவர்த்தி ஒன்றே போதுமானதாய் இருந்தது. சாப்பிட்டு மருத்துவமனைக்கு செல்ல emergency doctor பத்தரைக்கும் பிஸியாக இருந்தார். மருத்துவமனையின் சூழலும் எனக்கு அச்சத்தை தந்தது. சற்று பொறுத்து வேறொரு மருத்துவமனைக்கு போகலாம் என்று வெளியே வந்தோம். காயம் ஆழமா என்று தெரியவில்லை, ரத்தம் ஒன்றும் பெரிதாக வந்தாற்போல் இல்லை. கண்டிப்பாக ஊசி போட வேண்டுமா என்று கேட்டேன். போட்டால் நிம்மதியாக உணர்வாய் இல்லையா என்றாள். ஆமாம் என்றேன். அப்போ யோசிக்க வேண்டாம் வா என்று அழைத்துப் போனாள். சிறிது நேரம் நடந்த பிறகு காணக்கிடைத்த அந்த மருத்தவமனை கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மருத்துவரும் இருந்தார். அப்போதுதான் காயத்தைப் பார்த்தேன் சற்று நீளமாக ப்ளேட் கொண்டு வெட்டியதைப் போல் இருந்தது. கொஞ்சம் சாய்வாய் நேர்த்தியாக இழுத்த கோடு போல இருந்த காயம் விந்தையாக எனக்கு மிக அழகாகப் பட்டது.

ஊசியைப் போட்டுக் கொண்டு பதினொரு மணிக்கு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தோம். நாளெல்லாம் கவனித்தேன் சாலையில் நடக்கையில், இரவில், ஆட்டோ ஓட்டுனர் என எந்த ஆண்களாலும் எங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்கவில்லை. Experienced absolutely no non-sense. வீட்டிற்கு வந்து ஏதாவது படம் பார்க்கலாம் என லஞ்ச் பாக்ஸ்சை தேர்வு செய்தோம். சற்று நேரம் பார்த்ததிலேயே படம் மனதோடு ஒட்டிக் கொண்டது. உறக்கம் தள்ளவே ஒரு புள்ளியில் உறங்கிப் போனோம்.
 
A time of My Own - Climax

பூனாவில் கழிந்த மூன்றாவது நாளையும் நினைவிலிருந்து கரையும் முன்பே எழுதி முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன். மூன்றாவது நாள் அன்று காலை பூனா பல்கலைக்கழகம் உள்ளே சென்றோம். அது மிகப் பெரிய இடம் எனவே ஒரு சின்ன பகுதியை மட்டுமே பார்க்க முடிந்தது. நிறைய மரங்கள் மேலும் மழைக்காலம் ஆதலால் பச்சைக்கு பஞ்சமில்லை. கிடைத்த இடத்திலெல்லாம் செடிகள் முட்டி முளைத்திருந்தது. பூனா பல்கலைக்கழகம் எனக்கு என் பாரதியார் நாட்களை நினைவு படுத்தியது. அது மட்டுமல்ல அன்றைய நாள் கூட வெகுவாக என் கல்லூரி நினைவுகளை மேலெடுத்து வந்தது.

பாரதியாரில் முதுகலை பயின்றபோதுதான் நான் முதன் முதலாக சுதந்திரத்தின் தீஞ்சுவையை ருசித்தேன். கிடைத்த சுதந்திரத்தை முதலில் மிரள மிரள பார்த்தேன். கொஞ்சம் முன்னேறி மெது மெதுவாக தொட்டுப் பார்த்தேன். பிறகு முதல் தாவணியை அணிவதுபோல ஆசையாய் அணிந்து கொண்டேன். சுதந்திரம் தவிர அங்கே தான் என் தாயுமான தோழியை சந்தித்தேன். இரண்டுமே எனக்கு அங்கே கிடைத்ததால் அவ்விடம் எனக்கு மிக மிக விசேஷம்.

பெண்கள் விடுதிக்கு இரவு ஏழரை தான் கடைசி. அதற்குள் எல்லோரும் விடுதிக்குள் இருக்க வேண்டும். அதுவே எனக்கு தாராளமாய் இருந்தது. சோப்பு முதல்கொண்டு எது வாங்க வேண்டும் என்றாலும் நாங்கள் விடுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த கல்வீராம்பாளையம் செல்லவேண்டும். அங்கே 'Arun Novelties' என்று ஒரு சிறு கடை இருந்தது. அதுதான் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. நானும் தோழியும் வெவ்வேறு துறை என்பதால் அன்றைக்கு நடந்த எல்லாக் கதைகளையும் பேசிக் கொண்டு தினமும் ஒரு நடை போய் வருவது வழக்கமாய் இருந்தது.

அந்த பாதை நிறைய ஆலமரங்களுடன் மிக நன்றாக இருக்கும்(இப்போது சாலையை விஸ்தரிக்க மருதமலை வழியில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள் என்று கேள்வி) என்றாலும் இரவில் நடக்கையில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். சர்ரென்று வாகனத்தில் கடக்கும் ஆண்கள் வர்றியா என்று அழைத்து விட்டு போவார்கள். இதற்கு பயந்தே மற்ற தோழிகள் வெளியே வருவதை தவிர்த்திருந்தனர். ஆனால் எனக்கு இரவு நடை மிகுந்த விருப்பம். தோழிக்கும் ஆட்சேபனை இல்லாது போகவே நாங்கள் இருவர் மட்டும் செல்வோம். அப்போது ஆண்களின்/இளைஞர்களின் சுதந்திர உலகின் மீது அதீத ஆர்வமும் இருந்தது. ரோட்டோர தேநீர்க் கடைகளில் அப்படி என்னதான் இருக்கிறது இவர்கள் ஏன் இந்தக் கடையை இப்படி மொய்க்கிறார்கள் என்று எண்ணியதுண்டு. அவர்களின் இரவு வாழ்வு ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது. ஊரடங்கிய இரவுகளில் அவர்கள் மட்டும் கட்டை சுவரின் மீது ஏறி அமர்ந்துகொண்டு ரகசியக் கதைகளைப் பேசிக் கொண்டும், சோடியம் விளக்கில் நனையும் விளையாட்டு மைதானங்களின் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு உரக்க நகைத்துக் கொண்டும், தெரு முனைகளில் குழுமியும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய ஆர்வம் ஏற்படும். அவர்களின் அந்த தனி உலகு எனக்கு ஒருவித ஏக்கத்தையும் கொடுக்கும். இவனுங்க மட்டும் எப்படி உலகின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் சுருட்டலாம் என்று ஒரு நாள் எனக்கு அந்த விபரீத ஆசை வந்தது. மருதமலை பக்கமாக நடந்து, சாலையோர தேநீர் கடையில் தேநீர் பருகவேண்டுமே என்றேன். அங்கே சென்றதும் முழுக்க முழுக்க ஆண்கள் கூட்டம். எங்களை ஒரு விதமாகப் பார்க்க தோழி வெகு இயல்பாக இருந்தாள். எனக்குத்தான் பரபரப்பாய் இருந்தது. தேநீர் கேட்டு குடித்துவிட்டு வரும் வழியில் என் வகுப்புத் தோழன் எதிர்பட்டான். இந்த நேரத்துல எங்கம்மா போயிட்டு வரீங்க என்றான். வரவழைத்துக் கொண்ட மிடுக்குடன் 'ஏன் ஆயா கடைல சாயாக் குடிச்சுட்டு வரோம் என்றேன்.

அன்றைக்கு நடுநிசியில் தெறிக்கும் தலைவலி துவங்கி உறக்கம் தொலைந்தது. யாருக்கும் தெரியாமல் இரண்டு முறை வாந்தி எடுத்தேன். பத்து பன்னிரண்டு முறை என்று எடுக்கவும் அறைத் தோழி எழுந்து கொண்டாள். நீர் கொடுக்க கொடுக்க நான் அடுத்த நொடி வெளியே எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் பயந்து இன்னொரு அறையில் இருந்த என் தோழியை எழுப்பி வந்தாள். எச்சிலை விழுங்கினாலும் வெளியே வரவே பயந்து போய் மருத்துவமனைக்கு அழைத்துப் போக தயாரானார்கள். ஆனால் எப்படி, யார் என்னை அழைத்து போவது? அந்த நேரத்தில் ஆண்கள் விடுதிக்கு அழைத்து என் நண்பனிடம் விஷயம் தெரிவிக்கவும் அவன் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு வந்து என்னை மருத்துவமனையில் அனுமதித்தான். அன்றிலிருந்து ஆண்களை எதிரியாய்ப் பார்பதை நிறுத்திக் கொண்டேன்.

சரி நாம் இனி பூனாவுக்கு வருவோம். சுச்சியின் ஆதர்ச கடைகளில் ஒன்று ஆண்களின் கூடமாய் திகழ்ந்தது. அங்கே தான் தனியாக போக முடியாதென்றும் நாங்கள் வந்தால் போய்க் கொள்ளாலாம் என்று ஆசையாக காத்திருந்ததாக சொன்னாள். நாங்கள் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளிப்பட்டு ஆட்டோ பிடித்து அந்தக் கடைக்கு சென்றோம். முழுக்க முழுக்க ஆண்கள் மேலும் ஒரே புகை மண்டலம். ஒரே ஒரு பெண் நான்கு ஆண்களோடு வந்திருந்தாள். நாங்கள் மூவர் மட்டும் தான் பெண்கள். ஆனால் எவரும் எங்களை சட்டை செய்யவில்லை. புகைப்பதற்காக மட்டுமே வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன். சுச்சி மோன நிலைக்கு சென்றாள். நான் என் அருகில் இருந்தவரை புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். மிக பழைய கடை. என்னவோ எனக்கும் அந்த இடம் மிகப் பிடித்திருந்தது. அங்கே உணவருந்திவிட்டு வீடு வந்தோம்.

நான் lunch box படம் மீதத்தை பார்க்க வேண்டும் என்றேன். சுச்சி உள்ளறையில் மடிக் கணினியில் எனக்கு படத்தை போட்டு விட்டு சென்றாள். பார்த்துவிட்டு சற்று நேரம் அதிலேயே ஆழ்ந்திருந்தேன். உள்ளே வந்த சுச்சி பிடித்திருந்ததா என்றாள். ரொம்ப என்றேன். தொடர்ந்து இதில் best part என்ன தெரியுமா நான் தனியாகப் பார்த்ததுதான் என்றேன். எனக்குத் தெரியும் என்றாள்.

என் விமானத்திற்கு நேரம் ஆகவே கிளம்பி விமான நிலையம் வந்தோம்.சுமா பள்ளியில் உதவ அங்கே ஒரு வாரம் இருப்பதாக ஏற்பாடு எனவே நான் தனியாக திரும்பினேன். நான் கேட்காமலேயே திரும்பவும் ஜன்னலோரே இருக்கை. அதே பயங்கர நினைவுகள். இருந்தாலும் இறங்கும் தருவாயில் இரவு விளக்கின் அழகை ரசித்தேன். பெங்களூர் சேர்ந்தேன். இந்தப் பயணம் முடிவுக்கு வந்தது.

---------------------------------------------------------------------------------------------------------


பயணங்கள் என்னை இயக்குகின்றன. உறவுகளைப் போலவே அவை எனக்கு என்னை கண்டுபிடித்து தருகின்றன.

No comments: