தேன் கனிகள் சுமக்குமென
நட்டு வைத்திருக்கிறார்கள்
விதைத்தபோதோ முளைத்தபோதோ
நான் அருகிருந்து அறிந்ததில்லை
வருடங்களை உண்டு
வளர்ந்த அது
பூத்ததுமில்லை காய்ததுமில்லை
என அங்கலாய்த்த அவர்களிடம்
எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை
எதன் நிமித்தமுமில்லாமல்
விட்டு விலகி வந்து
வெகு நாட்கள் ஆனநிலையில்
போன வருடம்
மறுபடி பார்க்க நேர்ந்தது
அது இருந்திருந்த இடத்தில்
இருந்தது
பூமிக்கு மேல்
ஓர் இரண்டடி கட்டை
அருகே சென்று பார்கிறேன்
வலிகளோ காயங்களோ
இருந்த சுவடில்லை
ஒரு வேளை காய்ந்திருக்கலாம்
வெட்டுபட்டிருந்த போது
என்ன நினைத்திருக்கும்
இப்போதென் மனதை
பற்றிகொண்டது அவ்விருட்சம்
மாதங்களே இடைவெளியென
கவனித்தபடியே இருந்தேன் அதை
ஆறு மாதம் முன் பார்க்கையில்
ஒரு புறம்
கரையான்கள் பற்றி இருக்க
நின்றது நின்றபடியே இருந்தது
சில கணங்கள் பார்த்திருந்து திரும்பினேன்
இரண்டு மாதங்கள்
முன் பெய்த மழையில் தான்
அது மீண்டும் துளிர்த்திருந்தது
முதன் முறையென
என் மனமும் கூட
இன்றடித்த வெயிலுக்கோ
இலைகள் வாட்டமுற்றிருக்கின்றன
செய்வதற்கொன்றுமில்லை
இனி நான் பார்க்க போவதுமில்லை
6 comments:
ரொம்ப நல்லா இருக்குங்க...
நன்றிங்க கமலேஷ்!
இது மரத்தின் கதையல்ல... நம் அனைவரின் மனத்தின் கதை... அருமை.
நன்றி ஒளி!
சுகி கவிதை நல்லா இருக்குமா
ரொம்ப நாளா காணாமப் போயிட்டீங்கன்னு நினைச்சேன்! நன்றி :)
Post a Comment