Wednesday, September 16, 2009

அன்பென்ற மழையிலே - 2

அதி காலையில் எழுந்த போது கண்களில் சிறு எரிச்சல் இருந்தது. நண்பர்களோடு சேர்ந்து இரவு வெகு நேரம் பேசியபடியே தண்ணி அடித்ததின் விளைவு. எங்கேயோ ஒரு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. எத்தனை இனிமையாய் இருக்கிறது. சற்று நேரம் இழுத்து இழுத்துக் கூவியது. பிறகு வேறு மாதிரி. குயிலுக்கு எத்தனை வகை ராகங்கள் தெரியும் என யோசித்தபடியே நடக்க துவங்கினேன். இந்த பல்கலைகழகத்துக்கு முதல் முறை வந்தபோது மலைகள் சூழ்ந்த இந்த இடம் பார்த்ததுமே மிக பிடித்துவிட்டது. இத்தனை பெரிய இடத்தில் ஒவ்வொரு மூலையில் ஒவ்வொரு துறையும், தனி தனி விடுதிகளும், குடியிருப்புகளுமாய் இந்த பல்கலைக்கழகம் அமைந்திருந்தது வியப்பாய் இருந்தது. நான் நினைத்துக் கூட பார்த்திருப்பேனா இப்படி மறுபடியும் வந்து படிப்பேன் என்று. கொஞ்ச காலம் சினிமாவை சுற்றி என் கனவுகள் இருந்தது. சென்னையில் விசுயல் கம்யுனிக்கேஷன் படித்து விட்டு அங்கே சினிமாத் துறையில் வெகு சில நாட்கள் பணிபுரிந்து விட்டு என்ன உந்துதலாலோ கோவைக்கு உயர் கல்வி படிக்க வந்து விட்டேன்.

எனக்கு நானே ஒரு புரியா புதிராய் இருக்கிறேன். என்னை புரிந்துகொள்வதே எனக்கு சமயங்களில் சுவாரஷ்யமாய் இருக்கிறது. சில கணங்கள் நேற்று இரவு பெய்திருந்த மழையின் ஈரத்தை அமைதியாய் பார்த்தபடியே நடந்தேன். சிவப்பு நிற வெல்வெட் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தது. சிறு வயதில் அதை எத்தனை ஆர்வமாய் பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் அனுபவிக்கக் கூடிய மனம் இருந்தது. ஒவ்வொரு சிறிய விஷயமும் ஒரு வித வியப்பை தந்தது அப்போது. பள்ளி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது. எத்தனை சந்தோஷமாய் நாட்கள் நகர்ந்தது.வளர வளர
ரகசியங்கள் சேர ஆரம்பித்தது. பிறகு பேச்சு ஒரு சுமையாகி போகும் அளவுக்கு மௌனம் பிடித்தது. எத்தனை எத்தனை மாற்றங்கள்.

இந்த வாரம் சென்னைக்கு செல்ல வேண்டும். நேற்று சரண்யா என்னை அழைத்து வர சொல்லி இருந்தாள். முதலில் நான் அவளை பார்த்தது அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில். சிலு சிலு தூரலில் நனைந்து கொண்டிருந்தாள். எனக்கு மழை பிடிக்கும் என்பதால் நான் மொட்டை மாடிக்கு சென்றேன். நான் சமீபத்தில் தான் இந்த குடியிருப்புக்கு வந்திருந்தேன். அவள் கல்லூரிக்கு செல்லும் காலை வேளையில் அவளை பார்த்திருக்கிறேன். இப்போது தனியாக மழையில் நனைந்து கொண்டிருந்தாள். அவள் என்னை பார்க்க இருவரும் புன்னகைத்து கொண்டோம். பிறகு நான் சற்று தள்ளி நின்று மழைத் தூரலை அனுபவித்தேன். உங்களுக்கும் மழை பிடிக்குமா என்றாள். நான் ஆமாமென்று தலையாட்டினேன். சற்று மழை வலுக்க ஆரம்பித்தவுடன் அவள் கீழே சென்று விட்டாள். நான் படிக்கட்டின் துவக்கத்தில் நின்று ஒரு சிகரெட் பிடித்து விட்டு கீழிறங்கினேன். அது தான் நான் கடைசியாக பிடித்த சிகரெட் என நினைக்கிறேன். அதற்கு பிறகு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். ஏன் நிறுத்தினேன் என்பதற்கு காரணம் எதுவும் இல்லை.

நான் என் அறையை நோக்கி திரும்பி நடந்தேன். அன்றைய வகுப்புக்கு தயாராக வேண்டி இருந்தது. ஒரு மரத்தின் அடியில் வெள்ளை இதழ்களும் நடுவே இள மஞ்சள் வண்ணமும் கொண்ட மலர்கள் உதிர்ந்து கிடந்தது. மிதிக்காமல் சற்று தள்ளி நடந்தேன். வசந்தி தான் சொல்வாள் அவளோடு நடக்கும்போது மலர்களை மிதிக்காதீர்கள் என்று. காரணம் கேட்கவில்லை என்னவோ எனக்கும் பழகி விட்டது. ஏதாவதொரு பெண்ணின் நட்பு எனக்கு எல்லா கால கட்டத்திலும் இருந்திருக்கிறது. எல்லாரோடும் எனக்கு இப்போது தொடர்பில்லை என்றாலும் இந்த மாதிரி அழகான, இனிமையான அல்லது சோகம் நிறைந்த ஏதோ சில நினைவுகள் மிஞ்சி இருக்கிறது.

2 comments:

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

Sugirtha said...

நன்றி யாத்ரா!